under review

வெண் கலிப்பா

From Tamil Wiki
Revision as of 13:57, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கலிப்பாவின் உறுப்புக்களாகிய தரவு ஒன்றை மட்டுமே பெற்று, வெண்பா போல் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டால் முடிவது வெண்கலிப்பா. இப்பா, கலித்தளை மிகுதியாகவும் வெண்டளை முதலிய பிற தளைகள் குறைவாகவும் பெற்று வரும். வெண் கலிப்பாவின் வேறு வகையே கலிவெண்பா என்று கூறப்படுவதுண்டு.

வெண்கலிப்பாவின் இலக்கணம்

“வான் றளைதட்டு இசைதன தாகியும் வெண்பா இயைந்தும்
விசையறு சிந்தடியால் இறுமாய்விடின் வெண்கலியே”

- என்கிறது, யாப்பருங்கலக் காரிகை.

  • வெண்கலிப்பா, கலிப்பாவின் உறுப்புக்களாகிய தரவு ஒன்றை மட்டுமே பெற்று வரும்.
  • இதன் குறைந்த பட்ச அடிகள் நான்கு. அதிக அளவுக்கு வரம்பில்லை.
  • ஈற்றடி சிந்தடியாக (முச்சீர் அடி) வரும்.
  • பெரும்பாலும் கலித்தளையும், சிறுபான்மை வெண்டளை முதலிய பிற தளைகளையும் பெற்று வரும்.
  • கலித்தளை மிகுதியாக வந்தால் வெண் கலிப்பா என்றும், வெண்டளைகள் மிகுதியாக வந்தால் கலிவெண்பா என்றும் அழைக்கப்படும்.
  • துள்ளலோசை பெற்று வரும்.

உதாரணப் பாடல்

வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்கக்
கோளார்ந்த பூணாகங் குழைபுரளக் கோட்டெருத்தின்
மாலைதாழ் கூந்தலார் வரன்முறையான் வந்தேத்தச்
சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தஞ் சொன்முறையான்
மனையறமுந் துறவறமு மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும்
வினையறுக்கும் வகைதெரிந்து வீடொடுகட் டிவையுரைத்த
தொன்மைசால் கழிகுணத்தெந் துறவரசைத் தொழுதேத்த
நன்மைசால் வீடெய்து மாறு

- மேற்கண்ட பாடலில் கலித்தளை பயின்று வந்துள்ளது. துள்ளலோசை அமைந்துள்ளது. ஈற்றடி முச்சீராய் வெண்பாவைப்போல முடிந்தமையால் இது வெண்கலிப்பா.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Aug-2023, 03:27:39 IST