under review

காசி ஆறுமுகம்

From Tamil Wiki
Revision as of 13:51, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
காசி ஆறுமுகம் (நன்றி: மு. இளங்கோவன்)

காசி ஆறுமுகம் கணினித்தமிழுக்குப் பங்களிப்பு செய்தவர். தமிழ்மணம் என்ற வலைத்தளத்தின் நிறுவனர்.

பிறப்பு, கல்வி

காசி ஆறுமுகம் கோயம்புத்தூர் மாவட்டம் வடசித்தூரில் ஆறுமுகம், சரஸ்வதி இணையருக்குப் பிறந்தார். இயற்பெயர் காசிலிங்கம் ஆறுமுகம். எட்டாம் வகுப்பு வரை வடசித்தூரில் பயின்றார். பொள்ளாச்சியில் உயர்நிலைக்கல்வி பயின்றார். பல்தொழில் நுட்பப் படிப்பை பொள்ளாச்சி நாச்சிமுத்து பல்தொழிற்நுட்பக் கல்லூரியில் பயின்றார் (1978-1981). கோவை எவெரெஸ்ட் பொறியியல் நிறுவனத்தில் பணிசெய்துகொண்டே முதல் மாலைநேரத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் பகுதி நேரமாகப் பொறியியல் பட்டப்படிப்பு படித்தார். 1987-ல் திருவள்ளூரில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தில் மண்வாரி இயந்திரங்களின் பகுதிகளை வடிவமைக்கும் பொருள் வடிவமைப்பாளராகப் பணியில் சேர்ந்தார். ஆறரை ஆண்டுகள் இப்பணியில் இருந்தார். இக்காலத்தில் சென்னை ஐ.ஐ.டியில் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம்(M Tech) பெற்றார்.

தனிவாழ்க்கை

இருகுழந்தைகள் மனைவியுடன் நான்கு வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தார். 2000-ல் இல்லங்களில் 'சேவை' எனப்படும் இடியாப்பம் செய்வதற்கான புதிய சாதனத்தைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார்.

கோவை ரூட்ஸ் நிறுவனத்தில் வடிவமைப்பு மேலாளராகப் பணிபுரிந்தார். 2000-ல் தொழில்நுட்ப இயக்குநர் பொறுப்புக்கு உயர்ந்தார். கணினி வழி பொருள் வடிவமைக்கும் நுட்பத்தைச் செயல்படுத்தி தரையைத் தூய்மை செய்யும் பல கருவிகளை வடிவமைத்தார். 2000-ல் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறி சென்னை டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் கணினி வழி வடிவமைப்புகளைப் பகுப்பாய்வு செய்யும் பணியில் இருந்தார். நியூயார்க் மாநிலம் ரோச்சஸ்டர் நகரில் சிராக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பணிபுரிந்தார்.

தமிழ் கணிணிக்குச் செய்த பங்களிப்புகள்

2003-ல் வலைப்பதிவுகள் அறிமுகமானபோது காசி ஆறுமுகம் 'சித்தூர்காரனின் சிந்தனைச் சிதறல்கள்' என்ற தலைப்பில் தன் வலைப்பதிவை ஆரம்பித்தார். இ-கலப்பை முகுந்த் நியூக்ளியஸ் எனும் வலைப்பதிவு தொடர்பான மென்பொருளைத் தமிழ்ப்படுத்த வேண்டுகோள் விடுத்தபோது உலகம் முழுவதும் உள்ள வலைப்பதிவுகளை இணைப்பது பற்றிய சிந்தனை கொண்டார். கார்த்திகேயன் இராமசாமி, நா. கண்ணன், கனடா வெங்கட்ரமணன் மாலன், மதி கந்தசாமி, சுரதா, இராமகி, பத்ரி சேஷாத்ரி உள்ளிட்ட தொடக்ககால வலைப்பதிவர்களின் பதிவுகளை ஒன்றிணைத்தார்.

தமிழ்மணம்

காசி ஆறுமுகம் ஆகஸ்ட் 2004-ல் தமிழ்மணம் இணையதளத்தை உருவாக்கினார். உலகில் எழுதப்படும் அனைத்துத் தமிழ்ப் பதிவுகளையும் திரட்டித் தரும் தளமாகத் தமிழ்மணம் செயல்பட்டது. தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகள் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்படும் வலைப்பதிவுகளையும் திரட்டித் தரும் தளமாகத் தமிழ்மணம் உள்ளது. தமிழ்மணத்தின் கருவிப் பட்டையை பயனர் தன் தளத்தில் பொருத்தினால் தான் எழுதும் வலைப்பதிவைத் தமிழ்மணம் வழியாக உலகத்தின் பார்வைக்கு வைக்கமுடியும். அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிறுவனமான தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழ்மணத்தை வாங்கி தன் பொறுப்பில் நிர்வாகம் செய்தது.

பங்களிப்பு

தமிழ்மொழியைக் கணினிமயமாக்குவதிலும், தமிழில் எழுதப்படும் கணினி வழி எழுத்துக்களைத் தொகுத்து ஓர் அறிவியக்கமாக முன்னெடுப்பதிலும் பங்களிப்பாற்றியவர் காசி ஆறுமுகம்

நூல்கள்

  • என் கோடு உன்கோடு யுனிகோடு தனிகோடு

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2023, 21:06:15 IST