தொல்சடங்கு மதம்
தொல்சடங்கு மதம் (Shamanism) (சாமியாட்டு மதம். வெறியாட்டு மதம்) தெய்வங்களுடன் தொடர்புள்ளவராகவும், தெய்வம் வெளிப்படும் ஊடகமாகவும் திகழும் மனிதர்களை அடிப்படையாகக் கொண்ட தொல்மதம். உலகமெங்கும் பழங்குடிகளிடம் இருக்கும் முதன்மையான மதநம்பிக்கை இதுவே. பழங்குடி மரபில் இருந்து தொல்வரலாறு கொண்ட மதங்களுக்குள் இந்த மரபின் நம்பிக்கைகளும் சடங்குகளும் நீடிக்கின்றன. இந்து மதத்தில் வெறியாட்டு, சன்னதம் கொள்ளுதல், குறிசொல்லுதல் ஆகிய வடிவில் தொல்சடங்கு மதத்தின் நீட்சி உள்ளது. இக்கலைச் சொல் இன்று மேலும் விரிவடைந்து தெய்வம் எவ்வகையிலேனும் மனிதர்களிடம் தோன்றும்பொருட்டுச் செய்யப்படும் எல்லா சடங்குகளையும் உள்ளடக்கிய மரபைச் சுட்டுவதாக ஆகியுள்ளது.
வேர்ச்சொல்
சைபீரியாவில் வாழும் துங்குசிக் (Tungusic) பழங்குடி மக்களின் எவாங்கி (Evenki) மொழியிலுள்ள ஷாமன் (samān) என்னும் சொல்லில் இருந்து உருவானது ஷாமனிஸம் என்னும் கலைச்சொல். ஷாமன் (Shaman ) என்ற சொல் பூசாரி, மந்திரவாதி, தெய்வ ஊடகம் ஆகிய பொருட்களைக் கொண்டது. துங்குசிக் மக்களின் எல்லா மொழிகளிலும் இச்சொல் உள்ளது. மானுடவியலாளர் இச்சொல்லை உலகம் முழுக்க பழங்குடிப் பண்பாடுகளில் காணப்படும் பொதுவான சடங்குமதம் ஒன்றை சுட்டுவதாக ஆக்கிக் கொண்டனர்.
தொல்சடங்குமதம்
தோற்றம்
பழங்குடிகளில் பெருந்தந்தை என்னும் ஆளுமை புதுக்கற்காலம் முதல் உள்ளது. பின்னர் குடித்தலைவன், அரசன் என்னும் ஆளுமை உருவகங்கள் அதில் இருந்து உருவாயின. அதற்கு இணையாகவே மந்திரவாதி, பூசாரி, சாமியாடி, குறிசொல்லி, சோதிடன், மருத்துவன் ஆகிய ஆறு அடையாளங்களையும் கொண்ட ஆளுமை உருவகங்கள் பழங்குடிகளில் காணப்படுகின்றன. பழங்குடியினரின் மதத்தின் அடிப்படை இந்த பூசாரி என்னும் உருவகமே.
சடங்குகள்
பூசாரி தெய்வத்துடன் நேரடியாக உறவுள்ளவன். தெய்வம் அவன் வழியாக வெளிப்படுகிறது. அவன் சில சடங்குகள் வழியாகவும், சில போதைப்பொருட்களை நுகர்வதன் வழியாகவும் நிலைமறந்த தன்மையை அடைந்து தன்னை தெய்வங்களுக்கு ஒப்புக் கொடுக்கிறான். அவன் அந்நிலையில் சொல்லும் சொற்கள் தெய்வத்தின் சொற்களாகவே கருதப்படுகின்றன
இவ்வாறு பூசாரி தெய்வத்துடன் தொடர்பு கொள்வதற்கு பலவகையான சடங்குகள் பழங்குடிகளிடம் உள்ளன. கூட்டான நடனங்கள், கூட்டான மந்திர உச்சாடனங்கள், பலவகையான பலிச்சடங்குகள், கொடைச் சடங்குகள், வேட்டை மற்றும் பலி போன்ற நடிப்புச் சடங்குகள் உண்டு. இவை எல்லாமே ஷாமனிச மதத்தில் அடங்கும்.
பரவல்
தென்னமேரிக்கச் செவ்விந்தியர்கள், ஆப்ரிக்கப் பழங்குடிகள், பசிஃபிக் தீவுகளின் தொல்குடிகள், தென்னாசியப் பழங்குடிகள் ஆகிய அனைவரிலுமே இந்த வகையான தொல்சடங்கு மதம் காணப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு தொல்குடிகளிடமும் ஷாமனிசம் உள்ளது இந்துமதத்தின் முக்கியமான கூறாகவும் உள்ளது.
புதுச்சடங்கு மதம் (Neo-Shamanism)
இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிறிஸ்தவ மதத்தின் அமைப்புசார்ந்த செயல்பாடுகளுக்கு எதிராக மாற்றுமதங்களை உருவாக்கும் போக்கு எழுந்தது. பலவகையான ரகசிய வழிபாட்டுமுறைகள், குறுமதங்கள் உருவாயின. அவை ஆப்ரிக்க, தென்னமேரிக்க தொல்குடிகளின் மதங்களில் இருந்து முன்மாதிரிகளைப் பெற்றுக்கொண்டவை. போதைப்பொருட்களை நுகர்ந்து அதீதநிலைகளை அடைவதாகவும், பிரபஞ்சத்துடன் கலந்துவிடுவதாகவும் இவற்றை கடைப்பிடித்த பலர் நம்பினர். இப்போக்கைக் குறிக்க புதுச்சடங்கு மதம் என்னும் சொல் கையாளப்பட்டது. ஆனால் இது பழங்குடிகளின் தொல்சடங்குமதங்களிலுள்ள ஆன்மிக அம்சம் ஏதும் இல்லாதது என்றும், அவற்றை சிறுமைசெய்கிறது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்தியாவில் தொல்சடங்குமதம்
தொடக்கம்
இந்தியாவில் தொல்சடங்குமதம் புதுக்கற்காலம் முதலே இருந்து வந்துள்ளது. இந்தியாவில் பிம்பேட்கா போன்ற தொன்மையான குகையோவியங்களிலும், இடக்கல் போன்ற கற்செதுக்கு ஓவியங்களிலும் தெய்வம் வெளிப்பட்டு ஆடும் பூசாரியின் சித்திரங்கள் உள்ளன. பூசாரி தெய்வத்தோற்றத்தை அணிந்திருப்பதும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பழங்குடிகள்
இந்தியாவின் பெரும்பாலான பழங்குடிகளில் தெய்வத்துடன் தொடர்புகொண்ட, தெய்வம் வெளிப்படுகிற, தெய்வமாக வேடமிட்டுத் தோன்றும் பூசாரி காணப்படுகிறார். அவருடைய சொல் தெய்வச்சொல்லாகவே கருதப்படுகிறது.
நாட்டார் மரபு
இந்தியாவில் பழங்குடிக் கலைகளுக்கு அணுக்கமான நாட்டார் சடங்குகலைகளான தெய்யம், பூதகோலா ஆகியவற்றில் மனிதர்கள் தெய்வ வடிவமிட்டு வருவதும், அருள்புரிவதும், அருள்வாக்கு சொல்வதும் பரவலாக காணப்படுகிறது.
புராணமரபு
இந்தியாவில் இந்து புராண மரபுகளில் தெய்வம் மனிதர்களில் தோன்றுவது, தெய்வச்சொல் மனிதர்கள் வழியாக வெளிப்படுவது தொடர்ந்து கூறப்படுகிறது. சன்னதம் (சான்னித்யம்) ஆவேஸம் (புகுதல்) ஸன்னிவேசம் (நுழைதல்) என பலவகையில் மனிதர்களில் தெய்வம் நிகழ்வது குறிப்பிடப்படுகிறது. ஒரு தெய்வத்தை உபாசனை (தனிவழிபாடு) செய்வதன் வழியாக அத்தெய்வத்தின் வடிவமாக உபாசனை செய்பவர் ஆவதும் குறிப்பிடப்படுகிறது.
தமிழகம்
தமிழ்ப் பண்பாட்டில் தொல்சடங்குமதம் சங்ககாலம் முதல் இருந்து வந்துள்ளது. திராவிடவியல் ஆய்வாளர்கள் சிலர் திராவிடர்களின் தொல்மதம் நீத்தார்வழிபாடு, தொல்சடங்கு முறை ஆகியவை அடங்கியது என்று கூறுகிறார்கள்.
வேலன் வெறியாட்டு
சங்ககாலத்தில் வேலன் வெறியாட்டு என்னும் சடங்கு குறிப்பிடப்படுகிறது. தலைவிக்கு நோய் எழுகையில் அதை போக்குவதற்காக வரும் வேலன் என்னும் பூசாரியில் மலைத்தெய்வமான முருகு தோன்றுகிறது. வேலன் வேலைச் சுழற்றி ஆடி தலைவியின் நோயை போக்குகிறான் (பார்க்க வேலன் வெறியாட்டு )
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் வேட்டுவ வரியில் கண்ணகியும் கோவலனும் பாலைநிலம் வழியாகச் செல்லும்போது எயினர் ஊரில் சாலினி என்னும் முதுமகளில் தெய்வம் தோன்றி கண்ணகியை பத்தினித்தெய்வம் என அறிவிக்கிறது. சன்னதம் வந்து சாலினி சொல்லும் கூற்றை ’பேதுறவு’ என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. (மயக்கநிலைச் சொல்). ( பார்க்க வேட்டுவ வரி)
நிகழ்காலம்
சாமியாடுதல்
தமிழகத்தின் பொதுவான வழிபாட்டுமுறையில் சாமியாடுதல் பொதுவான ஒரு சடங்காக உள்ளது. தெய்வங்கள் ஓர் ஆணிலோ பெண்ணிலோ தோன்றுவது அது. தமிழகச் சிறுதெய்வங்களில் மாடன், மாயாண்டி, கருப்பன், முனியசாமி போன்றவை அவற்றின் பூசாரியில் சன்னதம் வந்து தோன்றி அருளுரை சொல்கின்றன. கோமரம், அம்மன் கொண்டாடி என்னும் பெயர்களில் இப்பூசாரி குறிப்பிடப்படுகிறார். உடுக்கு, பம்பை, உறுமி போன்ற குறிப்பிட்ட சில தாளக்கருவிகள் பூசாரிகள் பாடுவதற்கும் ஆடுவதற்கும் உரிய தாளமாக உள்ளன.
சடங்குகலைகள்
தமிழகத்தின் சடங்குகலைகளான கணியான் கூத்து போன்றவற்றில் ஆட்டக்கலைஞர் இறைவனின் அருள் வந்து தெய்வமாக நின்று அருள்மொழி சொல்வது வழக்கமாக உள்ளது.
உபாசனை
தமிழகத்தில் வெவ்வேறு தெய்வங்களின் உபாசகர்கள் அந்த தெய்வம் தங்கள்மேல் சன்னதம் வரச்செய்து அருளுரை சொல்வதாக நம்பப்படுகிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற வழிபாட்டுமையமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தை நிறுவிய பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி தோன்றும் மனித ஊடகமாகவே கருதப்படுகிறார். அவரை அம்மா என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள்.
உசாத்துணை
- ஷாமனிசம் வரையறை https://www.shamanism.com/what-is-shamanism
- நாட்டுப்புற வழிபாடுகள் முனைவர் தே அசோக்
- சாமியாட்டம் வலைத்தமிழ்
- சண்முகம் பிள்ளை, மு., சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1996.
- சங்க இலக்கியங்களில் சமயநோக்கு- கு.சுந்தரமூர்த்தி தருமை ஆதீன வெளியீடு
- மாசாண்டவர் கோயில் சாமியாட்டம் காணொளி
- சிலப்பதிகாரம். மதுரைக்காண்டம் வேட்டுவ வரி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
06-Dec-2022, 18:51:28 IST