செகப்பன்
செகப்பன் : மலேசியப் பழங்குடிகள். சரவாக்கில் வாழ்ந்து வரும் பூர்வகுடி இனக்குழுக்களில் செகப்பன் (Sekapan) சமூகமும் ஒன்று. மத்திய சரவாக் பகுதியில் வசிக்கும் காஜாங் இனத்தின் பிரிவினராக செகப்பன் சமூகத்தினர் கருதப்படுகின்றனர். செகப்பன் பழங்குடியினர் மெலனாவ் சமூகத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இனப்பரப்பு
செகப்பன் சமூகம் ஆரம்பக்காலகட்டத்தில் சுங்கை கஜாங் மற்றும் சுங்கை லினாவின் மேல் மற்றும் கீழ் நீரோடைப் பகுதிகளைச் சுற்றி வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர், முரு, பெலாகா ஆகிய ஆற்றோரங்களுக்கும் 'கியாம் புங்கன்' (Giam Bungan) எனும் பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்தனர். 2020-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி சரவாக் மாநிலத்தில் ஏறக்குறைய 2000-க்கும் மேற்பட்ட செகப்பன் சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மொழி
செகப்பன் மொழி ஆஸ்திரோனேசியன்/ மலாயோ- போலினேசியன் குடும்பத்தைச் சேர்ந்த மொழியாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. செகப்பன் மொழி பேசப்படும் வட்டார அடிப்படையில் மத்திய சரவாக் வட்டாரத்தில் பேசப்படும் காஜாங்- மெலானாவ் மொழிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுட்டிருக்கிறது.
தொழில்
செகப்பன் மக்கள் கரும்பு, நெல், அன்னாசி, மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, புகையிலை மற்றும் பல காய்கறிகள் பயிரிட்டு விவசாயம் செய்வதை தங்களின் முதன்மை தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்கள் ஆற்றோரங்களில் குடியேறி இருந்ததால் விவசாயம் செய்வதற்கு மிகவும் ஏதுவான நிலங்களும் நீர் வசதியும் அவர்களுக்கு இருந்தது. மேலும், பறவைகள் மற்றும் குரங்குகளை வேட்டையாடி உண்ணும் வழங்கமும் இவர்கள் மத்தியில் உள்ளன. விலங்குகளை வேட்டையாடுவதற்கும் போரில் எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவும் ஈட்டிகள், வாள்கள் மற்றும் கேடயங்களை செகப்பன் மக்கள் பயன்படுத்தியுள்ளனர். செகப்பன் சமூகத்தில் பத்து வயதிலிருந்தே ஈட்டிகளை வீசவும், வாள்களை உபயோகிக்கவும் கற்றுக் கொடுக்கப்படும் வழக்கம் உள்ளது. ஆனால், ஈட்டிகள் மற்றும் வாள்களின் பயன்பாடு ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பெண்கள் விவசாயம், கால்நடைகளை வளர்ப்பது, நெசவு செய்தல் மற்றும் மரக்கட்டைகளைச் செதுக்குதல் மற்றும் கைவினைப்பொருட்களைத் தயாரித்தல் போன்ற வேலைகளைச் செய்வார்கள்.
பண்பாடு
செகப்பன் சமூகத்தின் பழக்கவழக்கங்களில், ஆண்கள் பெண்கள் என வேறுபாடு இல்லாமல் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் பச்சைகுத்துதல். பச்சைகுத்துதல் ஆதி காலத்திலிருந்து செகப்பன் பழங்குடியினரின் முக்கியமான பாரம்பரியம் எனக் கருதப்படுகிறது. செகப்பன் பழங்குடி பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளவும் துணையை எளிதாகக் கண்டுபிடிக்கவும் பருவமடைவதற்கு முன்பே பச்சைகுத்துவது நடைமுறையில் இருந்துள்ளது. ஏனென்றால், பச்சை குத்தல்கள் பண்டைய காலத்தில் செகப்பன் பெண்களின் அழகு மற்றும் நேர்த்தியின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. முந்தைய காலங்களில் இரண்டு கைகளுக்கும் பச்சை குத்தி அதனை உலர வைப்பதற்குக் குறைந்து ஒரு நாள் அல்லது அதிகபட்சம் மூன்று வாரங்கள் வரை எடுத்துக் கொள்ளப்படும். முழங்கையிலிருந்து தொடங்கி விரல் நுனி வரை இரண்டு கைகளும் முழுமையாக மையால் மூடப்பட்டிருக்க வேண்டும். இதற்கு மூன்று முதல் ஐந்து வகையான ஊசிகள் பயன்படுத்தப்படும்.
சமயம்
செகப்பன் சமூகத்தினர் பாகனிய வழிப்பாடுமுறைகளைக் கொண்டவர்கள். இயற்கை ஆற்றல், மர்ம ஆற்றல் ஆகியவை மீதான நம்பிக்கை உடையவர்களாகக் கருதப்படுகின்றனர்.
திருமணம்
செகப்பன் சமூக மக்கள் பருவமடைந்ததும் மணம் புரிந்து வைக்கப்படுகின்றனர். ஆண்களே திருமணம் புரிவதற்கு விருப்பமான பெண்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இருப்பினும், தங்களுடன் ஒத்த சமூகத்தகுதி கொண்டவர்களையே இணையர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். திருமணத்தின்போது பாய் எனப்படும் விலங்குத்தோலால் ஆன உடையும் இருவாய்ச்சி பறவையின் சிறகுகளால் ஆன தலையணியும் நுண்ணிய செதுக்குகளால் ஆன குறுவாள் ஒன்றையும் மணமகன் அணிந்திருக்க வேண்டும். மணமகள் வெல்வெட் துணியால் நெய்யப்பட்டு அலங்காரக் கற்கள் நிறைந்த உடையை அணிய வேண்டும். திருமணம் புரிந்ததும் சமூகத்தகுதிகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிற எண்ணிக்கைக்கேற்ப வசிக்கும் நீண்ட வீடுகளைச் சுற்றி வர வேண்டும். அதன் பின்னரே திருமணம் புரிந்ததைக் குடித்தலைவரான லாஜா லெவோவ் ஒப்புதலளிப்பார். அதன் பின்னர், கோங் எனப்படும் செம்பால் ஆன இசைக்கருவியின் மீதமர்ந்து குடிச்சடங்குகள் நிகழ்த்தப்படும்.
இறப்புச்சடங்குகள்
செகப்பான் சமூகத்தில் இறந்துபோகும் உயர்குடியினரின் எலும்புகளை மண்பாண்டத்தில் வைத்து சாலோங் அல்லது கெலிரியங் (Kelirieng) எனும் குடில் போன்ற அமைப்புடைய உயரமான தூண் மேல் வைப்பர். ஒவ்வொரு குடிலிலும் நான்கிலிருந்து ஐந்து வரையிலான மண்பாண்டங்கள் வைக்கப்பட்டிருக்கும். அந்தக் குடிலின் வெளிப்புறத்தில் இலைகள், பூக்கள் ஆகிய இயற்கை வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். கெலிரியாங் நன்கு முற்றிய உளின் மரத்தால் செய்யப்படுகிறது. முன்பு, இறந்தவர்களின் எலும்புகள் அடங்கிய கெலிரியாங் தூணில் செகப்பன் சமூகத்தின் அடிமைக்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாகும் வரையில் உணவு, நீர் இன்றி பிணைக்கப்பட்டுப் பலிகொடுக்கப்படுவார். அவ்வாறு பலிகொடுக்கப்படுகின்ற இளம்பெண் இறந்துபோன உயர்குடியினருக்குக் காவலாக இருப்பாள் என நம்பப்படுகிறது.
கெலிரியாங் மரம் எட்டு முதல் பன்னிரண்டு மீட்டர் நீளமும் நான்கு மீட்டர் விட்டமும் கொண்டவையாக இருக்கும். கெலிரியாங் மரத்தின் இரண்டு அல்லது மூன்று குழிகள் குடையப்பட்டிருக்கும். மரத்தின் நடுவில் குடையப்பட்டிருக்கும் குழியில் இறந்துபோனவர்களின் எலும்புகள் அடங்கிய மண்பாண்டமும் அவர்கள் பயன்படுத்திய அணிகளும் வைக்கப்பட்டிருக்கும். தூணில் மேற்பகுதியில் அடிமைகளின் எலும்புகள் அல்லது இறந்துபோவதற்கு முன்னால் உயர்குடி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் விருப்பத்துக்குரியவர்களின் எலும்புகள் வைக்கப்பட்டிருக்கும்.
கெலிரியாங் கட்டி முடிக்கப்படும் வரை இறந்துபோனவர்களின் உடல் பிகுவான் (Biguan) எனப்படும் சவப்பெட்டியில் கிடத்திவைக்கப்பட்டிருக்கும். கெலிரியாங் தூண் கட்டி முடிக்கப்பட்டதும் நுண்ணிய அலங்காரச் செதுக்குள் கொண்ட பிகுவானிலிருந்து சடலம் வெளியெடுக்கப்பட்டு முட்சு (Mudzu) எனப்படும் இறுதிச்சடங்குகள் செய்யப்படும். முட்சு சடங்குகள் எட்டு முதல் பதினாறு நாள் வரையில் நடைபெறும்.
பண்பாட்டு மாற்றங்கள்
சரவாக் மாநிலத்தில் 19-ம் நூற்றாண்டில் கிறிஸ்துவச் சமயம் பரவத்தொடங்கியதிலிருந்து செகப்பன் மக்களின் இறப்புச்சடங்குகள் மாறத்தொடங்கிவிட்டது. மேலும் சீனர்கள், கென்யாக்கள், ஈபானியர்கள், மலாய்க்காரர்கள், கயான்கள் ஆகிய இனத்தவர்களிடையே நிகழும் கலப்பு மணங்களால் செகப்பன் மொழியைப் பேசும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
உசாத்துணை
- சரவாக் பழங்குடி கட்டுரை வல்லினம் தளம்
- செகப்பன் மொழி அறிமுகம்
- செகப்பன் மக்கள் பழக்கவழக்கங்கள்
- செகப்பன் மக்கள் பண்பாடு
- கெலிரியாங் மர அறிமுகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:39:28 IST