பாஞ்சராத்ரம்

From Tamil Wiki

பாஞ்சராத்ரம் : வைணவ ஆகமத் தொகைநூல். தொன்மையான வைணவ வழிபாட்டு மரபு. பாஞ்சராத்ரம் என்பது வேதங்களில் இருந்து உருவான ஒரு வழிபாட்டு இயக்கமாக நீண்டகாலம் இருந்தது. நாராயணன் இதன் முதன்மைத்தெய்வம். ஒரு பாஞ்சராத்ரம் என்னும் குறிப்பிட்ட சடங்கு அல்லது குறியீடு இதன் மையம். இந்த வழிபாட்டு மரபு பின்னர் பிற வழிபாடுகளை இணைத்துக்கொண்டு விரிந்து பாஞ்சராத்ர மதமாக ஆகியது. இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் இந்த மரபில் இருந்ததாக தெரிகிறது. அவற்றில் பெரும்பகுதி அழிந்துவிட்டன. வைணவப்பெருமதம் உருவானபோது பாஞ்சராத்ரம் அதற்குள் ஒரு வழிபாட்டு முறையாக நீடித்தது. பாஞ்சராத்ர மரபில் இருந்து உருவான ஆகமநூல்களை பாஞ்சராத்ர ஆகமம் என ஒற்றை நூல்தொகையாக பிற்காலத்தில் ஒருங்கிணைத்தனர்.

பாஞ்சராத்ர இயக்கம்

பாஞ்சராத்ர இயக்கம் என்பது வேதகாலத்தில் பாஞ்சராத்ரம் என அழைக்கப்பட்ட ஒரு சடங்கில் இருந்து உருவான வழிபாட்டுமுறை. பின்னர் வைணவப் பெருமரபுக்குள் ஒரு வழிபாட்டியக்கமாக ஆகியது. முதல் சில நூற்றாண்டுக்காலம் ஒரு துணைமதம் என்னும் அளவிலேயே செயல்பட்டது என ஆய்வாளர் ஊகிக்கிறர்கள்.

தொடக்கம்

பஞ்சராத்ர என்ற சொல் கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்திரீய சம்ஹிதையில் 7.1.10 என்ற வரிகளில் உள்ளது. வேதச்சொல் தெளிவுறும்பொருட்டு ஒரு முனிவர் பாஞ்சராத்ரம் என்னும் சடங்கைச் செய்ததை அது குறிப்பிடுகிறது.

சதபதபிராமணம் (13.6) பாஞ்சராத்ரச் சடங்கின் முதன்மைத்தெய்வம் நாராயணன் என்று குறிப்பிடுகிறது.

மகாபாரதத்தின் நாராயணியப் பகுதி (மகாபாரதம் சாந்திபர்வத்தில் உள்ள நாராயணன் புகழ்பாடும் பகுதி.) ஏழு ரிஷிகளைக் குறிக்கிறது, அவர்கள் வேதச்சடங்காகிய பாஞ்சராத்ரத்தை செய்தனர். ஆனால் இப்பகுதி பின்னாளில் சேர்க்கப்பட்டது என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.

சொற்பொருள்

பாஞ்சராத்ரம் என்னும் சொல்லுக்கு நேர்ப்பொருள் ஐந்து இரவுகள். இச்சொல் பலவாறாக விளக்கப்படுகிறது.

  • வைணவ ஆகமநூல்களில் ஒன்றாகிய நாரதீய சம்ஹிதையில் தத்துவம், முக்தி, பக்தி, யோகம், வைசாயிகம் என்னும் ஐந்து அறிவுநிலைகளைப் பற்றிப் பேசுவதனால் இப்பெயர் என்று சொல்லப்படுகிறது
  • வைணவ ஆகமநூலான ஈஸ்வர சம்ஹிதையில் இந்த ஆகமம் சாண்டில்யர், ஔபாக்யானர், மஞ்சியாயனர், கௌரிகர், பாரத்வாஜர் ஆகிய ஐந்து முனிவர்களுக்குச் சொல்லப்பட்டதனால் இப்பெயர் அமைந்தது எனப்படுகிறது
  • ஸ்ரீபிரசன்ன சம்ஹிதை விஷ்ணுவின் பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என்னும் ஐந்து நிலைகளை இந்நூல்கள் பேசுவதனால் இப்பெயர் என சொல்கிறது

தொன்மம்

நாராயணன் ஐந்து இரவுகளிலாகச் செய்த பெருவேள்வியின்படி இப்பிரபஞ்சமாக தான் மாறினார் என்ற தொன்மம் சாண்டில்ய சூத்திரங்களிலுள்ளது. நாராயணன் என்னும் முனிவரை அது குறிப்பிடுகிறது என்று ஒரு தரப்பு உண்டு (ஆக்ஸ்போர்டு தத்துவ அகராதி அவ்வாறு குறிப்பிடுகிறது) அருவமான இறையுருவகாமிய பிரம்மம் ஈஸ்வரன் என்னும் அனைத்திலும் உறையும் செயல்வடிவமாக ஆவதைப் பற்றிய கவித்துவ உருவகம் அது.

மரபு

பாஞ்சராத்ர மரபின் தொடக்கம் பொயு 2 அல்லது பொயு 3 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். இந்த இயக்கத்தின் முதன்மைத்தெய்வம் நாராயணன். பின்னர் விஷ்ணுவின் வெவ்வேறு வடிவங்கள் இதில் இணைந்துகொண்டே இருந்தன. விளைவாக இன்று வைணவம் என அழைக்கப்படும் மதமரபு உருவாகி வந்தது. இந்தப் பரிணாமம் பொயு 11 ஆம் நூற்றாண்டில் ராமானுஜரின் காலம் வரை தொடர்ச்சியாக நிகழ்ந்தது.

பாஞ்சராத்ர இயக்கத்தின் தொன்மையான நூலாக இன்று கிடைப்பது சாண்டில்யர் (பொயு 100) எழுதிய சாண்டில்யசூத்ரங்கள். இவை நாராயண வழிபாட்டைச் சேர்ந்தவை.

பொயு 2 ஆம் நூற்றாண்டு முதலே பாஞ்சராத்ர இயக்கம் தென்னிந்தியாவில் இருந்தமைக்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன.

பரிபாடலில்

"செங்கட் காரி கருங்கண் வெள்ளை

பொன்கட் பச்சை பைங்கண் மாஅல்"

(மூன்றாம் பரிபாடல் : 81-82)

- என வரும் வரிகள் பாஞ்சராத்ர மரபின் நான்கு வியூகவடிவங்களை குறிப்பிடுகின்றன என வைணவ அறிஞர்கள் கருதுகின்றார்கள். (செங்கட் காரி - சிவந்த கண்களையுடைய வாசுதேவன், கருங்கண் வெள்ளை - கரிய கண்களையுடைய சங்கருடணன், பச்சையென்பது பிரத்தியும்நன் ன் பைங்கண் மால் - பசிய உடம்பினையுடைய அநிருத்தன் என்று பொருள்கொள்கின்றனர்)

அத்வைதம் மரபைச் சேர்ந்த வேந்தாந்தியான சங்கரர் பொயு 8 (9) ஆம் நூற்றாண்டில் பாஞ்சராத்ர இயக்கத்தை கண்டித்து எழுதியுள்ளார்.

ராமானுஜர் (பொயு 1017-1137) பாஞ்சராத்ர மரபையே தனக்கு உகந்ததாக முன்வைத்தார்.

தத்துவம்

பாஞ்சராத்ர மரபு ஏறத்தாழ ஆயிரமாண்டுகள் பல படிநிலைகளாக பரிணாமம் அடைந்து வந்த ஒரு தத்துவ - வழிபாட்டு முறை. வைணவ மதத்தின் அடிப்படைகளுக்கு இந்த மரபே அடித்தளமாக அமைந்தது

பரம்பொருளின் பரிணாமம்

பாஞ்சராத்ர மரபு ஒரு வேள்வி - வழிபாட்டு முறையாக வேதகாலம் முதல் இருந்திருக்கலாம். வேதத்திலும் உபநிடதங்களிலுமுள்ள தூய பிரம்மவாதத்தை மதவழிபாட்டு மரபுடன் இணைக்கும் தத்துவமாக பின்னர் வளர்ச்சி அடைந்தது.அது இறைவனை தூயபரம்பொருள் (பிரம்மம்) அனைத்திலும் உறைந்து வெளிப்பாடு கொண்ட கடவுள் (ஈஸ்வரன்) என்னும் இருநிலைகளில் உருவகிக்கிறது. பரம்பொருள் தன் வியூக வடிவங்கள் (உருவத்தோற்றங்கள்) வழியாக அறியப்படும் தெய்வமாக ஆயிற்று என அது வகுக்கிறது. அந்த கருத்துப்பரிணாமத்தை பல படிகளாக அது வளர்த்தெடுத்தது. தூயபிரம்மம் முதல் கருத்து. அந்தப் பிரம்மம் நாராயணன் என்னும் தெய்வம் என்பது அடுத்த கருத்துரு. நாராயணன் பாஞ்சராத்ர வேள்வியின் வழியாக அறியப்படும் பொருளாக ஆனார்.

நான்கு வெளிப்பாடுகள்

பரம்பொருளான நாராயணனின் அறியப்படும் வடிவங்களில் முதன்மையானவை சதுர்வியூகம் எனப்படும் நான்கு முக நாராயண வடிவங்கள். அவை

  • வாசுதேவன்
  • அனிருத்தன்
  • சங்கர்ஷணன்
  • பிரத்யும்னன்

இந்த உருவகங்கள் பின்னர் பாகவதமரபு எனப்படும் விஷ்ணுவின் அவதாரங்களை வழிபடும் வைணவ மரபுடன் இணைந்தன. வாசுதேவனே கிருஷ்ணனாகவும் சங்கர்ஷணன் பலராமனாகவும் உருவகிக்கப்பட்டார்கள். இவ்விணைப்பு வழியாக வைணவம் குப்தர்காலத்தில் ஒரு பெருமதமாக தொகுப்படைந்தது.

ஐந்து நிலைகள்

பஞ்சராத்ர மரபு பரம்பொருளின் ஐந்து நிலைகளை விளக்குகிறது. அவை முறையே

  • பரம் (மிக உயர்ந்த, அறியப்பட முடியாத நிலை)
  • வியூகம் (வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருத்தன் ஆகிய நான்கு வடிவங்களில் இறைவன் வெளிப்படும் நிலை)
  • விபவம் (திருமாலின் பத்து அவதாரங்கள்)
  • அந்தர்யாமி (அனைத்திலும் உள்ளுறைந்திருகும் நிலை. உள்ளத்தில் திகழும் நிலை)
  • அர்ச்சம் (வழிபடப்படும் சிலைகள் மற்றும் உருவங்கள்)
தனித்தன்மை

பாஞ்சராத்ர மரபின் முதல் தனித்தன்மை அதன் நெகிழ்வான இருநிலைக் கொள்கை (துவைதக் கொள்கை). ஒரேசமயம் பிரம்மம் என்னும் அறியமுடியாத தூய தத்துவ உருவகமாகவும் அறியப்படும் ஏராளமான தெய்வ உருவங்களாகவும் அது விஷ்ணுவை உருவகிக்கிறது. ஆகவே அதில் எல்லா தெய்வங்களையும் இணைத்துக்கொள்ளுதற்குரிய தத்துவக் கட்டமைப்பு அமைந்தது.

பாஞ்சராத்ர மரபு வைகானஸ மரபிலிருந்து வேறுபடுவது அது நாராயணன் என்னும் முதற்பரம்பொருளை அனைத்து மங்கலங்களும் கொண்ட நேர்நிலை வடிவமாக (சத்வ ரூபம்) மட்டுமே உருவகிக்கிறது என்பதுதான். மறைமுகச் சடங்குகளும் எதிர்நிலையம்சம் கொண்ட உருவகங்களிலும் பாஞ்சராத்ர மரபால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆகவே ராமானுஜர் பாஞ்சராத்ர மரபை விசிஷ்டாத்வைத மரபுக்கு உகந்த வைணவ வழிபாட்டு முறைமையாக முன்வைத்தார்.

பாஞ்சராத்ர ஆகமம்

வழிபாடு, ஆலய அமைப்பு ஆகியவற்றைச் சொல்லும் நூல்கள் ஆகமம் எனப்படுகின்றன. வைணவ ஆகமங்கள் வைகானஸம், பாஞ்சராத்ரம் என இரண்டு. பிற ஆகமங்கள் இப்போது கிடைப்பதில்லை. பாஞ்சராத்ர மரபு பின்னர் பாஞ்சராத்ர ஆகமம் ஆக மாறியது.

வைகானஸ ஆகமமே தொன்மையானது என்று கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வைகானஸ ஆகமம் பின்பற்றப்பட்டதாகவும், ராமானுஜர் அதை பாஞ்சராத்ர் முறைக்கு மாற்றியதாகவும் வைணவர்களால் கூறப்படுகிறது.

மும்மணிகள்

பாஞ்சராத்ர ஆகமத்தின் சம்ஹிதைகள் 108. இவற்றில் சாஸ்வதம், பௌஷ்கரம், ஜெயாக்கியம் ஆகியவை மூன்றும் முக்கியமானவை. இவை ரத்னத்ரயம் (மும்மணிகள்) எனப்படுகின்றன. இவையே பிற்கால ஆகமசம்ஹிதைகளுக்கு அடிப்படையானவை.

பௌஷ்கர சம்ஹிதையின் விரிவாக்கமாக பாரமேஸ்வர சம்ஹிதை உருவானது. அதிலிருந்து ஈஸ்வர சம்ஹிதை உருவானது. ஜெயாக்ய சம்ஹிதையில் இருந்து பாத்மசம்ஹிதை உருவானது. இன்று ஜெயாக்ய சம்ஹிதையின் அடிப்படையிலேயே வைணவ ஆலயங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

நடைமுறைகள்

  • ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் , பௌஷ்கர சம்ஹிதையின் மாறுபாடான பரமேஸ்வர சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
  • காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் , ஜெயாக்ய சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
  • மேல்க்கோட்டை செல்வநாராயண சுவாமி கோவிலில் , ஈஸ்வர சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
  • திருவெள்ளறையில் உள்ள புண்டரிகாக்ஷ சுவாமி கோயிலில், பத்ம சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
  • கும்பகோணத்தில் உள்ள திருக்குடந்தையில் ஸ்ரீபிரஸ்ன சம்ஹிதையுடன் வணங்கப்படுகிறார்.
  • கௌடிய வைஷ்ணவர்கள் பிரம்ம சம்ஹிதையையும் நாரதிய சம்ஹிதையையும் பின்பற்றுகிறார்கள் .
  • கேரளாவின் ஸ்ரீவல்லபா கோவில் துர்வாச சம்ஹிதை மற்றும் அஹிர்புத்னிய சம்ஹிதையை பின்பற்றுகிறது .

உள்ளடக்கம்

பாஞ்சாரத்ர ஆகமம் சுக்லயஜுர் வேதத்தின் ஏகாயன பிரிவை அடிப்படையாகக் கொண்டது. இதில் நாலாயிர திவ்யபிரபந்தம் ஆலயங்களில் பாடப்படுவதற்கான அனுமதி உள்ளமையால் இந்த ஆகமம் ஆழ்வார் காலத்திற்குப் பின் உருவானது எனப்படுகிறது. அப்பகுதி ராமானுஜர் காலத்திற்கு பின் இணைக்கப்பட்டது என்ற கருத்தும் உண்டு

பாஞ்சராத்ர ஆகமத்தின் நூல்கள் கீழ்க்கண்ட பிரிவுகளில் நெறிகளை வகுக்கின்றன.

ஆலயவழிபாடு
  • பிராசாத (ஆலயம்)
  • பிரதிமா (சிலை)
  • பிரதிஷ்டா (சிலைநிறுவுதல்)
  • பூஜா (வழிபாடு)
  • பிராயச்சித்தம் (பிழையீடு)
  • உத்ஸவம் (விழா)
  • ஆசாரம் (நெறி)
  • மந்திரம் (மந்திரங்கள்)
  • யந்திரம் (மந்திரம் ஓதப்பட்ட பொருட்கள்)
  • தீக்ஷை (நோன்பு)
தனிநபர் வழிபாடு

தனிநபர் கைக்கொள்ளவேண்டிய நெறிகளை பாஞ்சராத்ர ஆகம முறை பஞ்சகால பிரகிரியைகள் என வகுக்கிறது

  • அபிகம்னா (காலைவழிபாட்டு நெறிகள்)
  • உபதானா (வழிபாட்டுமுறைகள்)
  • இஜ்ய- (நோன்புகள்)
  • ஸ்வாத்யாயம் (மெய்யியல் கல்வி)
  • யோகம் (தியானம் போன்றவை)

பாஞ்சராத்ர நூல்கள்

சாண்டில்யரின் பக்திசூத்திரங்கள் பாஞ்ச பஞ்சராத்ர மரபின் தொடக்க நூல் என பரவலாக ஏற்கப்பட்டுள்ளது. பஞ்சராத்ரா பாரம்பரியத்தின் படி, 108 சம்ஹிதைகள் உள்ளன என நூல்கள் சொல்கின்றன, ஆனால் சில நூல்கள் 200 க்கும் மேற்பட்ட சம்ஹிதைகளை பட்டியலிடுகின்றன .  பல பஞ்சராத்ரா நூல்கள் தொலைந்துவிட்டன. புழக்கத்திலுள்ளவை இவை

  • சாஸ்வத சம்ஹிதா
  • அஹிர்புத்ன்ய சம்ஹிதா
  • ஹயாஷிர்ஷா சம்ஹிதா
  • பத்ம சம்ஹிதா
  • பௌஷ்கர சம்ஹிதா
  • மஹா சனத்குமார சம்ஹிதா
  • ஈஸ்வர சம்ஹிதை
  • வால்மீகி சம்ஹிதா

பல நூல்களில் காணப்படும் பாஞ்சராத்ர நூல்களின் பட்டியல் இது. இந்நூல்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை

  • அகஸ்திய-சம்ஹிதா
  • அனந்தாக்ய-சம்ஹிதா
  • அனிருத்த-சம்ஹிதா
  • அஹிர்புத்ன்யா-சம்ஹிதா
  • ஆனந்த-சம்ஹிதா
  • ஈஸ்வர-சம்ஹிதா
  • ஈஸ்வர-சம்ஹிதா (ந்ருசிம்ஹகல்பம்)
  • உபேந்திர-சம்ஹிதா
  • உமா-சம்ஹிதா
  • ஔபகாயன-சம்ஹிதா
  • கன்வ-சம்ஹிதா
  • கபிஞ்சல-சம்ஹிதா
  • கபில-சம்ஹிதா
  • காஷ்யப-சம்ஹிதா
  • காஸ்யபோத்தர-சம்ஹிதா
  • காகப்பிரஸ்ன சம்ஹிதா
  • ககேந்திர-சம்ஹிதா
  • காகேஸ்வர-சம்ஹிதா
  • கஜேந்திர-சம்ஹிதா
  • கர்கா-சம்ஹிதா
  • கோவிந்த-சம்ஹிதா
  • கௌதம-சம்ஹிதா
  • சித்ராஷிகண்டி-சம்ஹிதா
  • ஜெய்க்யா-சம்ஹிதா
  • ஜயோத்தர-சம்ஹிதா
  • ஞானாமிர்தசார-சம்ஹிதா
  • ஞானார்ணவ-சம்ஹிதா
  • தந்திரதிலக-சம்ஹிதா
  • த்ரயசதோத்தர-சம்ஹிதா
  • துர்வாச-சம்ஹிதா
  • நரசிம்ஹபாத சம்ஹிதா
  • நளகூபர-சம்ஹிதா
  • நாரத-சம்ஹிதா
  • நாரதிய-சம்ஹிதா
  • நரசிம்ஹ-சம்ஹிதா
  • நாராயண-சம்ஹிதா
  • பஞ்சபிரஷ்ண-சம்ஹிதா
  • பத்மநாப-சம்ஹிதா
  • பத்மோத்பவ-சம்ஹிதா
  • பரம-சம்ஹிதா
  • பரமபுருஷ-சம்ஹிதா
  • பராசர-சம்ஹிதா
  • பத்ம-சம்ஹிதா
  • பத்ம-சம்ஹிதா-தந்திரம்
  • பரமேஸ்வர-சம்ஹிதா
  • பரமேஷ்த்ய-சம்ஹிதா
  • பாராசார்ய-சம்ஹிதா
  • புராண-சம்ஹிதா
  • புருஷோத்தம-சம்ஹிதா
  • பூர்ண-சம்ஹிதா
  • பௌஷ்கர-சம்ஹிதா
  • பிரத்யும்ன-சம்ஹிதா
  • பிரஹ்லாதா-சம்ஹிதா
  • பாலபௌஷ்கர-சம்ஹிதா
  • பிரஹத்பிரம்ம-சம்ஹிதா
  • பிருஹஸ்பதி மகாதந்த்ரம்
  • போதயான-தந்திரம்
  • பிரம்ம தந்திரம்
  • பிரம்ம-சம்ஹிதா
  • பாகவத-சம்ஹிதா
  • பரத்வாஜ-சம்ஹிதா
  • பார்கவ-சம்ஹிதா
  • மங்கண-சம்ஹிதா
  • மஹாகால-பஞ்சராத்திரம்
  • மஹாலக்ஷ்மி-சம்ஹிதா
  • மஹாசனத்குமார-சம்ஹிதா
  • மாயாவைபவ-சம்ஹிதா
  • மார்கண்டேய-சம்ஹிதா
  • மகேஸ்வர-தந்திரம்
  • லக்ஷ்மி-தந்திரம்
  • வால்மீகி-சம்ஹிதா
  • வராஹ-சம்ஹிதா
  • வாமன-சம்ஹிதா
  • வாயு-சம்ஹிதா
  • வசிஷ்ட-சம்ஹிதா
  • வாசுதேவ-சம்ஹிதா
  • விஸ்வ-சம்ஹிதா
  • விஸ்வாமித்ர-சம்ஹிதா
  • விஸ்வேஸ்வர-சம்ஹிதா
  • விஷ்ணு-தந்திரம்
  • விஷ்ணு-சம்ஹிதா
  • விஷ்ணுதத்வ-ஸம்ஹிதா
  • விஷ்ணுதிலக-சம்ஹிதா
  • விஷ்ணுமந்திர-சம்ஹிதா
  • விஷ்ணுரஹஸ்ய-சம்ஹிதா
  • விஷ்ணுசித்தாந்த-சம்ஹிதா
  • விஸ்வக்சேனா-சம்ஹிதா
  • விஹகேந்திர-சம்ஹிதா
  • விஹகேஸ்வர-சம்ஹிதா
  • வ்ருத்தபத்ம சம்ஹிதா
  • வைஹாயஸி சம்ஹிதா
  • வியாச சம்ஹிதா
  • சாண்டில்ய-சம்ஹிதா
  • சுகப்ரஷ்ண-சம்ஹிதா
  • ஷேஷா-சம்ஹிதா
  • சௌனக-ஸஹிதா
  • சௌனகிய-சம்ஹிதா
  • ஸ்ரீ-சாஸ்திரம்
  • ஸ்ரீகலபரா-சம்ஹிதா
  • ஸ்ரீதர-சம்ஹிதா
  • ஸ்ரீபிரஷ்ண-சம்ஹிதா
  • சங்கர்ஷண-சம்ஹிதா
  • சனக-சம்ஹிதா
  • சனத்-சம்ஹிதா
  • சனத்குமார-சம்ஹிதா
  • சனந்த-சம்ஹிதா
  • சாத்யகி-தந்திரம்
  • சாத்வத-சம்ஹிதா
  • சரஸமுச்சய-ஸாஹிதா
  • சாஷ்வர்த-சம்ஹிதா
  • சுதர்சன-சம்ஹிதா
  • ஸுபர்ணப்ரஷ்ண-சம்ஹிதா
  • ஹயக்ரீவ-தந்திரம்
  • ஹயாஷிர்ஷா-சம்ஹிதா
  • ஹம்ஸபரமேஸ்வர-ஸம்ஹிதா
  • ஹிரண்யகர்ப-சம்ஹிதா
  • (ஸ்ரீ)கலோத்தர-சம்ஹிதா
  • (ஸ்ரீமன்)நாராயண-சம்ஹிதா

உசாத்துணை