மெய்ஞ்ஞான மாலை
மெய்ஞ்ஞான மாலை (பதிப்பு: 1968), கிறிஸ்தவம் சார்ந்த இலக்கியம் நூல். இம்மாலை நூலை இயற்றியவர் ஈஸ்வர பாக்கியம் ஈசாக்கு எனும் திடூர் தேசிகர். இந்நூலின் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
பதிப்பு, வெளியீடு
மெய்ஞ்ஞான மாலை நூல், மேனாள் மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் மோசஸ் பொன்னையா அவர்களின் உரை விளக்கங்களுடன் 1968-ல் வெளியானது. இதனைப் பதிப்பித்து வெளியிட்டவர் திட்டூர் தேசிகரின் பேரனும், குமரித் திருச்சபையின் முதல் பேராயரும், தென்னிந்தியத் திருச்சபையின் தலைமைப் பேராயருமான ஐ.ஆர்.எச். ஞானதாசன்.
ஆசிரியர் குறிப்பு
ஈஸ்வர பாக்கியம் என்னும் இயற்பெயர்கொண்ட திட்டூர் தேசிகர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குமரி மாவட்டம் திட்டுவிளையில், இந்து சைவக் குடும்பத்தில் பிறந்தார். கிறிஸ்தவ மதம் சார்ந்த பிறகு ’ஈஸ்வர பாக்கியம் ஈசாக்கு’ என்று பெயர் சூட்டிக் கொண்டார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர் முன்னூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவற்றில் 172 நூல்கள் மட்டுமே தற்போது சேகரிப்பில் உள்ளன. திட்டூர் தேசிகரின் நூல்கள் பெரும்பாலும் துதி, விண்ணப்பம், கிறிஸ்தவப் போதனை, விசுவாசம் ஆகியவற்றைப் பற்றிய சிற்றிலக்கியங்களாகும். திட்டூர் தேசிகர் பதினாறு மாலை நூல்களை இயற்றினார். அவற்றுள் ஒன்று மெய்ஞ்ஞான மாலை.
நூல் அமைப்பு
மெய்ஞ்ஞான மாலை நூல், சத்திய வேதத்தின் வழிநூலாக இயற்றப்பட்டது. இந்நூலில் 303 செய்யுள்கள் அமைந்துள்ளன. நூலின் தொடக்கத்தில் பாயிரம், அவையடக்கம், காப்பு ஆகிய செய்யுள்கள் அமைந்துள்ளன. நேரிசை வெண்பா, அறுசீர் ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம், கொச்சகம் போன்ற செய்யுள் இலக்கண வகைமைகளில் மெய்ஞ்ஞான மாலை நூலின் பாடல்கள் அமைந்துள்ளன.
உள்ளடக்கம்
இயேசுவின் பெருமை சிறப்பு, வாழ்வியல், அவர் அளித்த உபதேசங்கள், அவர் வாழ்ந்து காட்டிய வாக்கை முறைகள் ஆகியன மெய்ஞ்ஞான மாலை நூlலில் விளக்கப்பட்டுள்ளன.
பாடல் நடை
நூல் இயற்றிய காரணம்
கொண்டேன் ஏகந் திரித்துவமாய்க்
குணத்தி னன்மாற் றம்பெற்றேன்
கண்டேன் றேவ பெரிய அன்பைக்
கல்வா ரியின்வெஞ் சிலுவையிலே
அண்டேன் என்ன வந்தாலும்
ஆகா வுலகத் தேவர்களை
விண்டேன் அறிக்கை மெய்ஞ்ஞான
மாலை யாக மெய்ப்படவே
கிறிஸ்தவ சமயத்தாரின் கடமை
தினமும் தெளிவு நூலை யோதித்
தியானஞ் செய்தொழுகாய்
கனமும் துதியும் பரனுக் காக்கற்
கடமை நிறைவேற்றாய்
இனமும் நிலையில் உலகைச் சதமென்
றிருந்தே மயங்குவதேன்
சனமும் தமரும் தனமும் பலவும்
சாம்போ துதவாதே
கிறிஸ்தவ சமயத்தின் சிறப்பு
கிறித்து சமயமே மானிட ருய்யக் கிடைத்தவழி
கிறித்து சமய மறைகுரு தேவன் கிழமைபொது
கிறித்து சமயம் தவரே சிறந்த கதிவுடையோரர்
கிறித்து சமயத்தில் சேருமின் ஆயுள் கெடாமுனமே
அறிவுரை
தனமே பெரிதெனப் பாவித்துச்
சாகுந் தருணமட்டும்
மனமே யதனில் மயங்கி
யுழல்தல் மதிக்குறைவாம்
கனமே யுனக்குப் பெருக
வுண்டாகுங் கதியிலெண்ணம்
தினமே பொருத்தி யொழுகுவை
தேவனுன் செல்விகையே.
மதிப்பீடு
திட்டூர் தேசிகரின் மெய்ஞ்ஞான மாலை நூல் பாடல்கள் தனித்தன்மை கொண்டதாய் அமைந்துள்ளன. மெய்ஞ்ஞான மாலை நூல், கிறிஸ்தவ மாலை இலக்கிய நூல்களுள் தொன்மை மிக்கதாகவும், குறிப்பிடத்தகுந்த ஒன்றாகவும் அறியப்படுகிறது.