கிருத்திகா
கிருத்திகா (இயற்பெயர்: மதுரம் பூதலிங்கம், 1915 - பெப்ரவரி 13, 2009) தமிழகத்தின் தனித்தன்மை வாய்ந்த, குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர். தன் காலத்தை மீறிய வித்தியாசமான கதைக்களம், வித்தியாசமான பாத்திரப்படைப்பு, வித்தியாசமான எழுத்தாற்றலால் தனித்து தோன்றினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர். கிருத்திகா எழுதிய 'வாசவேஸ்வரம்' தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக இலக்கிய உலகில் அங்கீகாரம் பெற்றது. அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளை அங்கதச் சுவையுடன் புதினமாக எழுதிய முன்னோடி தமிழ் எழுத்தாளர்.
தமிழில் கிருத்திகா என்ற புனைபெயரிலும் ஆங்கிலத்தில் மதுரம் பூதலிங்கம் என்ற பெயரிலும் எழுதினார்.
பிறப்பு,கல்வி
கிருத்திகா கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் அருகே உள்ள பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தவர். பம்பாயில் படித்து வட மாநிலங்களிலேயே அதிகம் வசித்தவர். ஆங்கிலத்திலும் சமஸ்கிருதத்திலும் பெரும் புலமை பெற்றிருந்தார்.
தனி வாழ்க்கை
கிருத்திகா திருப்பதிசாரத்தைச் சேர்ந்த I.C.S அதிகாரியான பூதலிங்கம்பிள்ளையை மணம் செய்துகொண்டார். பூதலிங்கம் சுதந்திர இந்திய அரசாங்கத்தில் உயர்பதவிகள் வகித்தவர். உருக்குத் துறையிலும், நிதித்துறையிலும் செயலாளராகப் பணியாற்றியவர். பிலாய் உருக்காலை நிர்மாணத்தில் பெரும் பங்காற்றியவர். தம்பதியர்
கிருத்திகாவின் மகன் ரவி பூதலிங்கம் இந்திய அரசின் தொழில்துறை அமைச்சகத்தின் பல ஆணைக்குழுக்களில் பணியாற்றிய தொழில் முனைவோர். கிருத்திகாவின் மகள் மீனா, வேளாண்மை அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனை மணந்தார் .மீனா சுவாமிநாதன் தம்பதியரின் மகள் சௌம்யா சுவாமிநாதன் உலக சுகாதார மையத்தின் (WHO) தலைமை விஞ்ஞானியும் புகழ்பெற்ற குழந்தை நல மருத்துவருமாவார்.
டசடங்குகளில் நம்பிக்கை அற்றவர். மதங்கடந்த ஆன்மிகத்தைப் போற்றியவர்.
இலக்கியப் பணி
கிருத்திகா தமிழில் சத்யமேவ, பொன்கூண்டு, வாஸவேஸ்வரம், தர்ம ஷேத்ரே, புதிய கோணங்கி, நேற்றிருந்தோம் ஆகிய நாவல்களையும் யோகமும் போகமும் போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், "மனதிலே ஒரு மறு, மா ஜானகி" போன்ற நாடகங்களையும் எழுதியுள்ளார்.
'புகை நடுவினில்','நேற்றிருந்தோம்..','புதிய கோணங்கி' ஆகிய நாவல் தலைப்புக்கள் மகாகவி பாரதியின் மேல் அவர் கொண்ட பெரும் பற்றினால் உருவானவை.
கிருத்திகாவின் முதல் நாவல் புகைநடுவில் (1953). 1950களின் சுதந்திரத்துக்குப் பின்னான டெல்லியைக் களமாகக் கொண்டது.
'தர்மக்ஷேத்திரே' என்ற நாவலில் முற்றும் துறந்த ஞானி ஒருவர் தலைவராகும்போதுதான் நாட்டில் லஞ்சம், ஊழலில்லாத அரசு அமையும் என்று காப்பியம் கலந்த கற்பனை நாட்டை உருவாக்கிக் காட்டுகிறார்.
1971 ல் எழுதப்பட்ட 'புதிய கோணங்கி' நாவலில் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் மட்டுமே முரண்பாடுகளைத் தாண்டி வளமான, ஊழலற்ற நாட்டை உருவாக்க முடியும் என்ற முடிவை அடைகிறார்.
1976 ஆம் ஆண்டில் மீனாட்சிப் பதிப்பகத்தின் வழியாக வெளிவந்த ‘போகமும் யோகமும் ‘ என்கிற தொகுதியில் ‘தீராத பிரச்சனை ‘ என்னும் நெடுங்கதை குறிப்பிடத்தக்கது.
கிருத்திகா இந்தியா முழுவதும் பயணம் செய்து, இந்தியக் கோயில்கள், கலைகள் போன்றவை குறித்துக் கலைமகளில் பல கட்டுரைகளை எழுதி வந்தார். ஆங்கிலத்தில் மிக அழகாக மேடையில் பேசக்கூடியவர். சம்ஸ்கிருதத்திலும் பெரும்புலமை படைத்தவர். குழந்தைகளுக்காக, இராமாயணம், மகாபாரதம், பாகவதம், என பல ஆங்கில நூல்களை எழுதினார். பாரதியின் வாழ்க்கை வரலாற்றை 'A finger in the lute' என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதிகாச மறுஆக்கம், இலக்கிய அறிமுகம், தமிழகச் சிற்பக்கலை ஆகியவற்றைப்பற்றி எழுதியிருக்கிறார்.
அவரது மனதில் ஒரு மரு என்ற நாடகம்எழுத்தாளர் சிட்டி அவர்களால் அரங்கேற்றப்பட்டது.
கிருத்திகாவுக்கு விமரிசகர் சிட்டி பெ. கோ. சுந்தரராஜனுடன் நீண்ட கால நட்பு இருந்தது. தில்லியிலும், பல்வேறு நகரங்களிலும் வசித்த கிருத்திகா சிட்டிக்கு எழுதிய கடிதங்களும், சிட்டி அவருக்கு எழுதிய பதில் கடிதங்களும் புகழ் பெற்றவை. சிட்டியின் மருமகன் நரசய்யாவின் முன்னுரையுடன் இக்கடிதங்கள் 'Lettered Dialogue' என்ற நூலாக பழனியப்பா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன. வெளியீட்டு விழா மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியின் தலைமையில் நடைபெற்றது.
Movements in Stone- Early Chola architecture முற்காலச் சோழ கோயில்களின் கட்டிடக்கலையை ஆய்வு செய்து அவற்றில் பல்லவரின் கட்டிடக்கலையின் தாக்கத்தை சித்தரித்த நூல்.
ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கான பல புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
இலக்கிய இடம்
கிருத்திகா தமிழின் பெண் எழுத்தாளர்களில் மிக அபூர்வமான தனித்தன்மை கொண்டவர். தன் காலத்தை மீறிய படைப்புகளைத் தந்தவர். குர் அதுல் ஐன் ஹைதர்-ருடன் ஒப்பிடத்தக்கவர். அவரது படைப்புகள் குறியீட்டுத் தன்மையுடன், அங்கதச்சுவையுடன் சமகால உயர்மட்ட அதிகார அரசியலை, ஆண்பெண் உறவை விவாதிப்பவை. "அங்கதத்தை கையண்ட ஒரே தமிழ்ப்பெண்ணெழுத்தாளர் அவரே" என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
புகை நடுவில், தர்மக்ஷேத்திரே மற்றும் புதிய கோணங்கி நாவல்களில் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளையும், நகரத்தின் பாசாங்கு வாழ்க்கையையும் பிரதிபலித்து, சுதந்திரத்தின் மதிப்பையும் அது சாதாரண மனிதனுக்குத் தரும் பயன்களையும் குறித்து கேள்விகளை எழுப்புகிறார். பின்னாளில் நகர வாழ்க்கையின் பாசாங்கை அங்கதத்துடன் எழுதிய எழுத்தாளர்கள் ஆதவன், இந்திரா பார்த்தசாரதி போன்றோருக்கு கிருத்திகாவே முன்னோடியாவார்.
வாஸவேச்வரம் எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரின் தமிழின் சிறந்த நாவல்கள் பட்டியலிலும் இடம் பெறுகிறது.வாஸவேச்வரம் என்ற வட்டார அடையாளங்கள் இல்லாத, பௌராணிக சாயலுடன் ஆன்மா தேங்கி நிற்கும் கற்பனை கிராமத்தை, தன்முனைப்பாலும், காமத்தாலுமே செலுத்தப்படும் கதை மாந்தர்களை, அவர்களின் ஒழுக்க வீழ்ச்சிகளை அங்கதச் சுவையுடன் சொல்லும் நாவல்.பெண்களின் மனவெளியை எழுத்துக் களமாக்கி நினைவுகளின் ஆழத்தில் மிதக்கும் உணர்வுகளுக்கு எழுத்து வடிவம் தந்திருக்கிறார்.
வாஸவேச்வரம் பெண்ணிய வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் கிருத்திகாவின் நாவல்கள் அதைத் தாண்டிய பரிமாணங்கள் கொண்டவை. "நவீன வாழ்க்கை தரும் தனிமனிதத் துயரும் அலைக்குறுதலும் முரண்பாடுகளும், இவற்றை தாண்டத் துடிக்கும் மனிதர்கள் சாரமற்ற சடங்கு சம்பிரதாயங்களைப் பிடித்துத் தொங்கும் வேடிக்கையும் இந்நாவலில் மட்டுமல்ல, "சத்ய மேவ" போன்ற கிருத்திகாவின் மற்ற நாவல்களிலும் பேசுபொருட்களாக இருக்கின்றன" என்று கவிஞர் பெருந்தேவி குறிப்பிடுகிறார்.
பாரதியின் வாழ்க்கை வரலாற்றை 'A finger in the lute' (யாழில் தவழும் விரல்) என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். யாழில் தவழும் விரல் என்ற தலைப்பு பாரதியாரின் 'வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு' என்ற வரிகளிலிருந்து பெறப்பட்டது. முக்கியமான பல பாரதியார் பாட்ல்களை இந்நூலுக்காக கிருத்திகா தமிழாக்கம் செய்துள்ளார்.
Movements in Stone- Early Chola architecture முற்காலச் சோழ கோயில்களின் கட்டிடக்கலையை ஆய்வு செய்து அவற்றில் பல்லவரின் கட்டிடக்கலையின் தாக்கத்தை சித்தரித்த நூல்.
இறப்பு
எழுத்தாளர் கிருத்திகா தனது 93வது அகவையில் 2009, பெப்ரவரி 13 இல் சென்னையில் காலமானார்
உசாத்துணை
கிருத்திகா - தமிழ் மரபு அறக்கட்டளை
கீர்த்தி மிகுந்த கிருத்திகா-பசுபதிவுகள்
கிருத்திகா-சில கடிதங்களும் இரண்டு நாவல்களும்-சரவண மாணிக்கவாசகம்
The truth as it is-The Hindu August 1, 2004
A 40 year correspondence-The Hindu May 25, 2009
கிருத்திகா அஞ்சலி-எழுத்தாளர் ஜெயமோகன்
நம்மைப் பிரியவில்லை கிருத்திகா- அஞ்சலி கவிஞர் பெருந்தேவி
Lettered Dialogue நூல் வெளியீட்டில் ஆளுனர் கோபாலகிருஷ்ண காந்தியின் உரை
.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.