being created

விவேகானந்தர்

From Tamil Wiki
Revision as of 06:09, 13 March 2024 by Ramya (talk | contribs)
விவேகானந்தர்

விவேகானந்தர் (நரேந்திரநாத் தத்தா) (சுவாமி விவேகானந்தர்) (ஜனவரி 12, 1863 - ஜூலை 4, 1902) சிந்தனையாளர், ஆன்மிகவாதி. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர். அத்வைத வேதாந்தத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர். இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றினார். அரசியல், இலக்கியம், தத்துவம், கலை என எல்லா தளத்திலும் தேசிய அடையாளமாகக் கொள்ளத்தக்க கலைன்கர்களை அடையாளம் காட்டினார். இந்திய மரபை மீட்டுருவாக்கம்செய்து நவீன யுகத்தை எதிர்கொள்வதில் ஆற்றவேண்டிய பணிகளை அடையாளம் காட்டினார்.

வாழ்க்கைக் குறிப்பு

விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. விவேகானந்தர் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவி இணையருக்கும் மகனாக ஜனவரி 12, 1863-ல் பிறந்தார். தாய் மொழி வங்காளம். உடன்பிறந்தவர்கள் இளைய சகோதரர்களான மகேந்திரநாத் தத், பூபேந்திரநாத் தத். பூபேந்திரநாத் தத் இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர். சகோதரிகளில் ஒருவர் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு புகுந்த வீட்டினரின் கொடுமை தாளாது தற்கொலை செய்து கொண்டார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879-ல் கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார்.

ஆன்மிக வாழ்க்கை

பிரம்ம சமாஜத்தின் உறுப்பினரானார். 1881-ல் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். முதலில் அவரின் இறை பற்றிய கருத்துக்களையும், வழிபாட்டு முறைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ராமகிருஷ்ணரின் போதனைகள் உருவம், அருவம் ஆகிய இரண்டையும் பேசின. அவர் வழியாக பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் ஆகிய இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொண்டார். 1886-ல் ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்தார். நான்கு ஆண்டுகள் இந்தியா முழுவதும் துறவியாக அலைந்தார். தன் பயண முடிவில் டிசம்பர் 24, 1892-ல் கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்தார். 1893-ல் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துகளை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

1897-ல் கடல் வழியாக இந்தியா திரும்பினார். கொழும்பில் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியால் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் கொழும்பு முதல் கல்கத்தா வரை உரைகள் ஆற்றினார். 1900-ல் மீண்டும் மேல்நாட்டுப் பயணம் செய்தார்.

அமைப்புப் பணிகள்

ராமகிருஷ்ண மிஷன் மற்றும் ராமகிருஷ்ண மடம் ஆகிய அமைப்புகளைத் தோற்றுவித்தார்.

இலக்கிய வாழ்க்கை

விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன ”The complete works of Swami Vivekananda” என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இவையே பின்னர் எழுந்திரு! விழித்திரு! என்ற தலைப்பில் பதினொரு பகுதிகளாக வெளியிடப்பட்டன.

மறைவு

விவேகானந்தர் ஜூலை 4, 1902-ல் தன் 39ஆம் வயதில் பேலூரில் காலமானார்.

தமிழ்நாட்டில் விவேகானந்தர் நினைவிடங்கள்

  • விவேகானந்தர் நினைவு மண்டபம், கன்னியாகுமரி
  • விவேகானந்தர் பாறை
  • விவேகானந்தர் நினைவு மண்டபம்
  • விவேகானந்தர் இல்லம்
  • விவேகானந்த கேந்திரம்
கல்வி நிலையங்கள்
  • இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி, சென்னை
  • விவேகானந்தர் கல்லூரி, அகத்தீசுவரம்
  • விவேகானந்தர் கல்லூரி, மதுரை

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.