ஹரீஸா
ஹரீஸா (ஹரீஸா சமீம் அப்துல் ஜப்பார்) (மருதமுனை ஹரீஸா) (பிறப்பு: செப்டம்பர் 6, 1980) ஈழத்துப் பெண் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஹரீஸா இலங்கை அம்பாறை மருதமுனையில் முஹைதீன் அப்துல் காதர், ஹவ்லத் இணையருக்கு செப்டம்பர் 6, 1980-ல் பிறந்தார். மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் கற்றார். தென்கிழக்குப்பல்கலைக்கழத்தில் இதழியல் டிப்ளோமா பட்டம் பெற்றார். இலங்கை நூலகச் சங்கத்தில் நூலகவியலில் டிப்ளோமா பட்டம் பெற்றார். மருதமுனையில் நூலகராகப் பணிபுரிகிறார்.
இலக்கிய வாழ்க்கை
ஹரீஸா 'மருதமுனை ஹரீஸா' எனும் புனைபெயரில் எழுதினார். 1999-ம் ஆண்டு முதல் கவிதை, சிறுகதை, கட்டுரை விமர்சனம் ஆகியவை எழுதினார். இவரின் ஆக்கங்கள் வீரகேசரி, தினக்குரல், தினகரன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தன. சக்தி எஃப்.எம், பிறை எஃப்.எம், ஊவா சமூக வானொலி, அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், லண்டன் முஸ்லிம் குரல் வானொலி போன்றவற்றிலும் ஹரீஸாவின் ஆக்கங்கள் ஒலிபரப்பப்பட்டன. இவரின் முதலாவது கவிதைத் தொகுப்பு ”உன் மொழியில் தழைக்கிறேன்” என்ற தலைப்பில் 2017-ல் வெளியானது. ”ஒரு சொட்டும் மிச்சம் வைக்காமல்” என்பது இவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. 'ஊமச்சி' முதல் சிறுகதைத் தொகுப்பு.
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- உன் மொழியில் தழைக்கிறேன்
- ஒரு சொட்டும் மிச்சம் வைக்காமல்
சிறுகதைத் தொகுப்பு
- ஊமச்சி
உசாத்துணை
✅Finalised Page