being created

கமலினி செல்வராஜன்

From Tamil Wiki
Revision as of 17:40, 14 February 2024 by Ramya (talk | contribs)

கமலினி செல்வராஜன் (நவம்பர் 29, 1953 - ஏப்ரல் 7, 2015) ஈழத்துப் பெண் எழுத்தாளர், நாடக, திரைப்பட நடிகர், ஊடகவியலாளர். வானொலி, தொலைக்காட்சி, திரைப்படத்துறையில் தயாரிப்பாளராக இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

கமலினி, செல்வராஜன் இலங்கை யாழ்ப்பாணத்தில் மு.கணபதிப்பிள்ளை, தனபாக்கியம் இணையருக்கு நவம்பர் 29, 1953-இல் பிறந்தார். தந்தை தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை மொழியிலாளரும், எழுத்தாளருமாவார். தாய் தனபாக்கியம் வயலின் கலைஞர். ஆரம்ப கல்வியை கொள்ளுப்பிட்டி சென் அந்தனிஸ் பாடசாலையிலும் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியினை பம்பலப்பிட்டி சென் கிளயர்ஸ் மகளிர் கல்லூரியிலும் கற்றார். களனிப் பல்கைலைக்கழகத்தின் தொடர்பூடகவியலில் கலைமானிப்பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கமலினி செல்வராஜன் இலங்கையின் பிரபல கலைஞரான சில்லையூர் செல்வராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் அதிசயன்.

ஊடகவியல்

கமலினி செல்வராஜன் 1980இல் ஊடகத்துறையில் நுழைந்தார். கமலினி செல்வராஜன் நாடறிந்த அறிவிப்பாளராக, ஒலி, ஒளிபரப்பாளராக, தொடர்பூடகவியல் விரிவுரையாளராக, ஊடகவியல் பயிற்றுவிப்பாளராக, ஊடகவியல் பயிற்றுவிப்பாளராக, விளம்பரதொகுப்பாளராக இருந்தார். கமலினி செல்வராஜன் ரூபவாஹினி, ஐ.ரி.என் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்தார். இசை மற்றும் நடனத்துறைகளிலும் சிறந்து விளங்கினார். முப்பது வருடங்களுக்கு மேலாக தொலைக்காட்சி ஒலி ஒளிபரப்பாளராகப் பணியாற்றினார். ரூபவாஹினி தொலைக்காட்சியின் "அயிபோவன்" நிகழ்ச்சி தமிழ் சிங்கள நேயர்கள் மத்தியில் பிரபலம் பெற்றது.

நாடக வாழ்க்கை

கமலினி செல்வராஜன் வானொலி நாடகமான "தணியாத தாகம்" நாடகம் நடித்தார். இவர் "திருப்பங்கள்", "எதிர்ப்பாராதது", "சமூகசேவகி" போன்ற தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தார். கமலினி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

கமலினி செல்வராஜனின் கணவரான சில்லையூரினால் ஏற்கனவே எழுதப்பட்டு சிதறிப்போயிருந்த கவிதைகள், காவியங்களைத் தொகுத்தார். தேர்ந்தெடுத்த கவிதைகள் வரிசையில் சில்லையூர் செல்வராசன் கவிதைகள் (தொகுதி - 1) நூலை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டில் கமலினியால் தொகுக்கப்பட்டு வெளியான அந்த நூலில் சில்லையூரின் கவியரங்கப்பாடல்கள், தேசபக்திப்பாடல்கள், புலவன் மனங்கவர்ந்த பொன்னாடுகள், அகம் - புறம், அங்கதம், கவிஞனின் தத்துவம், பெண்மை, இசைப்பாடல்கள், பரிவும் - பிரிவும், நெடும்பா, மொழிபெயர்ப்பு பாடல்கள் என அதிகாரங்கள் பிரித்து அந்தத் தொகுதியை வெளிக்கொணர்ந்தார்.

விருதுகள்

  • கலாசார அமைச்சினால் 1995ஆம் ஆண்டு நாட்டுக்கூத்துக்கு இவர் வழங்கிய பங்களிப்புக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • கொழும்பு றோயல் கல்லூரி நாடகத்துறைக்காக இவர் வழங்கிய பங்களிப்புக்காக கொழும்பு றோயல் கல்லூரி 2008ஆம் ஆண்டு இவருக்கு விருது வழங்கி கௌரவித்தது.

மறைவு

கமலினி செல்வராஜன் ஏப்ரல் 7, 2015-இல் காலமானார்.

நூல் பட்டியல்

தொகுப்பாசிரியர்
  • சில்லையூர் செல்வராசன் கவிதைகள் (தொகுதி - 1)

உசாத்துணை

  • ஆளுமை:கமலினி, செல்வராஜன்: noolaham



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.