being created

கா.ம.வேங்கடராமையா

From Tamil Wiki
மணியம் செல்வன் வரைந்த ஓவியம்- நன்றி https://venkataramiah.blogspot.com/p/blog-page_42.html

தமிழறிஞரும், கல்வெட்டாய்வாளருமான கா.ம.வேங்கடராமையா (ஏப்ரல் 4, 1912 - ஜனவரி 31, 1995) கல்வெட்டு மற்றும் வரலாற்றுத்தொடர்புடன் அரிய இலக்கிய நூல்களை எழுதியவர். மராட்டிய ஆட்சியில் தமிழக சமுதாய வரலாற்றை ஆய்ந்தெழுதியவர். தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முதல் கையெழுத்துச்சுவடி துறைத் தலைவர். சைவத் திருமுறைகளில் விரிவான ஆய்வுகள் நடத்தியவர். பல கல்லூரிகளின் தாளாளராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் ஆசிரியப் பணியாற்றியவர். அவரது படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.

பிறப்பு,கல்வி

சென்னையை போரூர் அருகே உள்ள காரம்பாக்கத்தில் 1911-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் நாள் பிறந்தார் கா.ம. வேங்கடராமையா (காரம்பாக்கம் மந்திரவேதி வேங்கடராமையா -மந்திரவேதி குடும்பப் பெயர்) பெற்றோர் கா.கிருஷ்ணையர்-வேங்கடசுப்பம்மாள்.. சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தார். செங்கல்பட்டிலுள்ள தூய கொலம்பா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர், தமிழ் மீதுள்ள பெரும் பற்றின் காரணமாக பி.ஓ.எல் படித்து தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தில் முதுகலைத் தேர்விலும் வென்றார்.தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பெரும்புலமையும் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழி அறிவும் நிரம்பப் பெற்றிருந்தவர்.

சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடும்,சைவத் திருமுறைகளில் மிகுந்த புலமையும் பெற்றிருந்தார்.

தனி வாழ்க்கை

வேங்கடராமையா அன்னபூரணி அம்மாளை மணம் செய்து கொண்டார். புதல்வர் கா.ம.வே.பசுபதி திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி முதல்வர்(ஓய்வு) மற்றும் தமிழக அரசின் உ.வே.சா விருது(2013) பெற்றவர். கா.ம. வே.மகாதேவன் பல தமிழாராய்ச்சி நூல்களை எழுதியவர்.

கல்வி மற்றும் ஆய்வுப் பணி

இவர் செங்கல்பட்டுத் தூய கொலம்பா உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், திருப்பனந்தாள் சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகவும்(1947-1972), செட்டிநாட்டு அரசர் முத்தையவேள் நிறுவிய ’தமிழ் சம்ஸ்கிருதம் மற்றும் பிற மொழிகள் ஆராய்ச்சி’ நிலையத்தில் மூன்றரை ஆண்டுகள் ஆய்வாளராகவும் (3 ஆண்டுகள்), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கையில் ஆய்வாளராகவும் (மூன்றரை ஆண்டுகள்), தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அரிய கையெழுத்துச் சுவடிப் புலத்தின் தலைவராகவும் (ஐந்து ஆண்டுகள்), திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆய்வாளராகவும் அரும் பணியாற்றியுள்ளார்

இலக்கியப் பணி

சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் திருமுறைகளில் புலமையும் கொண்டிருந்ததால் அவற்றை ஒட்டியே இவரது பெரும்பாலான ஆய்வுகள் அமைந்தன. 1949 ல் காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதிக்கு வேங்கடராமையா எழுதிய குறிப்புரையை காசி மடம் வெளியிட்டது.

குமரகுரபரர் மாத இதழின் நிர்வாகப் பொறுப்பாளராக 50 ஆண்டுகள் பணியற்றியுள்ளார்.

அவர் தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்காக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய சைவத் திருமறைகள் பற்றிய நூல்களை நேடால் தமிழ் வைதீக சபை வெளியிட்டது.

கல்லெழுத்துக்களில் என்னும் நூலில் அவர் கல்வெட்டுகளின் மூலம் ஆய்ந்தறிந்த,மூவேந்தர் காலங்களில் நுண்கலைகள் வளர்ந்த விதங்கள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

கல்லெழுத்துக்களில் தேவார மூவர் கல்வெட்டுகளில் கண்ட அப்பர், சுந்தரர், சம்பந்தர் பற்றிய குறிப்புகளோடு தேவாரப் பண்களும், தேவார மூவரும் மக்கள் மனதில் பெற்றிருந்த இடத்தையும் சொல்லும் நூல்.

இலக்கியக் கேணி வரலாறு, கல்வெட்டுகள் தொடர்புடன் எழுதப்பட்ட அரிய இலக்கியக்கட்டுரை நூல்.

திருப்பனந்தாள் திருமடத்தின் சார்பில் பல அரிய தமிழ்நூல்கள் வேங்கடராமையாவின் முயற்சியாலும் உழைப்பாலும் வெளிவந்தன. காசி மடத்தின் வெளியீடுகளுள் திருக்குறள் உரைக் கொத்துப் பதிப்புகள் பதிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்கன. திருக்குறள் உரைக்கொத்தைப் பதிப்பிக்கும்போது, வ.வே.சு.ஐயர், ரெவரண்ட் லாசரஸ்,எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை போன்றோரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுத் தகுந்த மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குறளுக்கும் கீழே வெளியிட்டார்.

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் மூலமாகத் திருக்குறளுக்கு ஜைனர் எழுதிய உரையைப் பதிப்பித்தார். இதற்காக இவர் சமண சமய அறிஞர்களிடம் தம் ஐயங்களைக் கேட்டுத் தெளிந்தார்.

,1981இல் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது அரிய கையெழுத்துச் சுவடி துறையின் முதல் தலைவராக பொறுப்பேற்று சரஸ்வதி மகாலில் பாதுகாக்கப்பட்டிருந்த மோடி ஆவணங்களை ஆராய்ந்தார்.

மாமன்னர் சிவாஜியின் காலத்திற்கு முன்பிருந்தே வரலாற்றுக் குறிப்புகள், கடிதப் போக்குவரத்து, நாட்குறிப்பு, வரவு செலவுக் கணக்குகள் முதலியன மராட்டி மொழியில் மோடி எழுத்தில் எழுதப்பட்டன. தன் ஆய்வில் கண்டறிந்த மராட்டியர் காலத் தமிழக வரலாற்றை வேங்கடராமையா ‘தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்’ என்ற ஆய்வு நூலாக எழுதி, தமிழ்ப்பல்கழகத்தின் வாயிலாக வெளியிட்டதோடு மோடி ஆவணங்களின் தமிழாக்கத்தையும் பதிப்பித்தார்.

போன்ஸ்லே வம்ச சரித்திரம், மெக்கன்ஸி சுவடிகள், கல்வெட்டுகள்,மோடி ஆவணங்கள் ஆகியவற்றின் உதவியுடன் தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு என்ற நூலையும் எழுதினார். இவ்விரு நூல்களும் மராட்டிய மன்னர்களின் வரலாறு, தஞ்சை மராட்டியர் தம் ஆட்சிக்குட்பட்ட சமுதாயத்துக்குச் செய்த நன்மைகள், கலைச் சிறப்புகள், அக்காலத்திய பழக்க வழக்கங்கள் மற்றும் சமுதாய வரலாறு,, அரசியல் நிலைமைகள் இவற்றைச் சித்தரிக்கின்றன.

திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தபோது தமிழகக் கையேடு என்ற நூலை எழுதினார். வரலாறறிந்த தொடக்கம் முதல் சென்ற நூற்றாண்டு இறுதி வரையான தமிழகத்தின் வரலாற்றுக் குறிப்புகள், நூல்கள், தலங்கள், சமயம், கலை, பண்பாடு என அனைத்தும் இந்நூலில் இனம் காட்டப்பட்டுள்ளன

வேங்கடராமையாவின் படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.

இறப்பு

வேங்கடராமையா 1995-ஆம் ஆண்டு சனவரி 31-ஆம் தேதி ஓர் சாலை விபத்தில் உயிர் நீத்தார்.

படைப்புகள்

  • இலக்கியக் கேணி-1961
  • சோழர் கால அரசியல் தலைவர்கள்-1963
  • கல்லெழுத்துக்களில்-1963
  • கல்வெட்டில் தேவார மூவர்
  • STORY OF SAIVA SAINTS
  • ஆய்வுப் பேழை
  • சிவன் அருள் திரட்டு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்)
  • நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்)
  • திருக்குறள் குறிப்புரை
  • தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்
  • திருக்குறள் அறத்துப்பால் பொழிப்புரை
  • தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு-மெக்கன்சி சுவடி ஆய்வு. 1985
  • திருக்குறள் பரிப்பெருமாள் உரை-அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். 1993
  • திருக்குறள் சைனர் உரை-பதிப்பு, சரஸ்வதி மகால். 1994
  • விண்ணப்பக் கலிவெண்பா (வள்ளலார் ஆய்வு)
  • திருவருள் முறையீடு (வள்ளலார் ஆய்வு)
  • திருவடிப் புகழ்ச்சி (வள்ளலார் ஆய்வு)
  • A HAND BOOK OF TAMIL NADU (FIRST PART)  8-ஆவது உலகத் தமிழ் மாநாட்டு வெளியீடு.
  • தொல்காப்பியம்-பாட வேறுபாடுகள்-ஆழ் நோக்காய்வு.

விருதுகள், சிறப்புகள்

  • சிவநெறிச் செல்வர் (மதுரையாதீனம்)
  • கல்வெட்டாராய்ச்சிப் புலவர் (காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம்)
  • செந்தமிழ்க் கலாநிதி (தருமையாதீனம், தங்கப் பதக்கத்துடன்)
  • தமிழ் மாமணி (பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்)
  • ஸ்ரீ-ல-ஸ்ரீ அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் அருளிய பண முடிப்புக்கள், பொன்னாடைகள், தங்கப்பதக்கம், பொன் மாலைகள்.
  • சைவத் தமிழ் ஞாயிறு-தஞ்சை அருள் நெறித் திருக் கூட்டம்.
  • தருமை 26-ஆம் குருமகாசந்நிதானம் அருளிய தங்கப்பதக்கம்.
  • கயிலை மாமுனிவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி எஜமான் அருளிய பொன்னாடைகள், பொன் மோதிரம்.
  • ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளிய பொன்னாடைகள், பொன் மோதிரம்.
  • கம்பன் கழகம்-பாராட்டும் பணமுடிப்பும்
  • தமிழகப் புலவர் குழு-முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. பாராட்டு

உசாத்துணை

தமிழ்மாமணி கா.ம.வேங்கடராமையா - வலைத்தளம்

கல்வெட்டில் தேவார மூவர்- tamivu.org/library

திருப்பனந்தாள் காசி மடம்-வலைத்தளம்

கீற்று. காம்-தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும்

கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா- முனைவர் இளங்கோவன் தினமணி-செப்டம்பர் 20,2012

இலக்கியக் கேணி-tamilvu.org/library ==


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories. ==