மாயாவி
மாயாவி . தமிழில் பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதியவர். கலைமகள், கல்கி ஆகிய இதழ்களில் தொடர்கதைகளாக அவை வெளிவந்தன. பெரும்பாலும் குடும்பப்பின்னணி கொண்ட உணர்ச்சிகரமான கதைகளை எழுதினார்
பிறப்பு, கல்வி
மாயாவியின் இயற்பெயர் எஸ். கே. ராமன். செங்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த சாம்பூர் வடகரை எனும் ஊரில் 2 அக்டோபர் 1912 ஆம் ஆண்டு பிறந்தார். (தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் பிறந்த ஊர் இது) தென்காசி போர்டு உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வரை பயின்றார். அங்கே நாறும்பூநாத தேசிகர் என்னும் ஆசிரியர் அவருக்கு தமிழிலக்கியத்தையும் கலைமகள் இதழையும் அறிமுகம் செய்தார்.
தனிவாழ்க்கை
மாயாவி பல தொழில்களைச் செய்தவர். தென்காசியில் ஒரு புகைப்பட நிறுவனம் நடத்தினார். சுருக்கெழுத்து தட்டச்சு பயின்று சென்னையில் ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் சிலகாலம் உதவியாளராகப் பணிபுரிந்தார். பேனா மை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றினார். பின்னர் 1942ல் மும்பை சென்று அங்கே ஓர் இங்கிலாந்து நிறுவனத்தில் தட்டச்சாளராகப் பணியாற்றினார். இந்திய விடுதலைக்குப்பின் மத்திய அரசின் செய்தி தொடர்பு துறையில் மும்பையை மையமாக்கி தயாரான செய்திப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களுக்கு தமிழ் வசன மொழியாக்கத்தை எழுதுவது, குரல்கொடுப்பது ஆகிய வேலைகளைச் செய்தார். பின்னர் அகில இந்திய வானொலியில் பணி கிடைத்து டில்லியில் இயங்கிய தென்கிழக்கு ஆசிய தமிழ் ஒலிபரப்புத் துறையில் செய்தி எழுத்தாளராகப் பணியாற்றினார். 1961ல் சென்னை வானொலி நிலையத்திற்கு மாற்றலாகி வந்து நிலைய எழுத்தாளராக பொறுப்பில் இருந்தார்.
இலக்கியவாழ்க்கை
1937ல் கலைமகள் இதழில் முதல்சிறுகதை ஜாதிவழக்கம் வெளியாகியது.
நூல்கள்
மாயாவி 150 சிறுகதைகளும் 9 நாவல்களும் எழுதியுள்ளார்
நாவல்
- கண்கள் உறங்காவோ
- அகதி
- மக்கள் செல்வம்
- சலனம்
- ஒன்றே வாழ்வு
சிறுகதை
- சாமுண்டியின் சாபம்
உசாத்துணை
- http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12770
- ஏ. சி. செட்டியார் (தொகுப்பு) "சிறுகதைக் களஞ்சியம்-தொகுதி1" சாகித்திய அக்காதமி-2000.
- முனைவர் தேவிரா," தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம்" ஸ்ரீநந்தினி பதிப்பகம்-2016.