பாலமுருகனடிமை சுவாமிகள்

From Tamil Wiki
Revision as of 22:42, 12 January 2024 by Jeyamohan (talk | contribs)
பாலமுருகனடிமை
பாலமுருகனடிமை சுவாமிகள்

பாலமுருகனடிமை சுவாமிகள் ( 24 ஜனவரி 1941) (க. தட்சிணாமூர்த்தி) தமிழ் சைவத்துறவி. முருகபக்தர். தமிழகத்தில் ஆற்காடு அருகே உள்ள ரத்னகிரி என்னுமிடத்தில் பாலமுருகன் கோயிலை நிறுவி நடத்தி வருபவர். தமிழறிஞர், திருக்குறள் புரவலர் என்னும் வகைகளிலும் மதிக்கப்படுபவர்

பிறப்பு,கல்வி

பழைய ஆற்காடு மாவட்டம் (இன்றைய ராணிப்பேட்டை மாவட்டம்) ரத்னகிரி அருகே உள்ள கீழ்மின்னல் என்னும் ஊரில் கந்தசாமி முதலியார்,சிங்காரம்மாள் இணையருக்கு 24 ஜனவரி 1941ல் பாலமுருகனடிமை சுவாமிகள் பிறந்தார். இயற்பெயர் தட்சிணாமூத்தி என்னும் சச்சிதானந்தம். ராணிப்பேட்டையில் உயர்நிலைக்கல்வி பயின்றார்

தனிவாழ்க்கை

பாலமுருகனடிமை சுவாமிகள் தமிழ்நாடு மின்வாரியத்தில் எழுத்தராகப் பணிக்குச் சேர்ந்தார். சிவகாமி என்பவரை மணம்புரிந்துகொண்டார். அவருக்கு சிவகாமியில் இரண்டு குழந்தைகள் பிறந்தன.

துறவு, ஆன்மிகப்பணி

பாலமுருகனடிமை சுவாமிகள் தன் 27 வயதில் (1967ல்) கைவிடப்பட்டுகிடந்த இரத்தினகிரி பாலமுருகன் ஆலயத்தில் சென்று அமர்ந்தார் என்றும் அப்போது ஞானம் பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது. அது முதல் துறவியாக அங்கேயே வாழ்ந்தார். பேச்சை நிறுத்திக்கொண்டார். தன்னை பாலமுருகனடிமை என அறிவித்துக்கொண்டார்.

ரத்னகிரி மலைமேல் பொயு 14 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் நிறுவியதாகச் சொல்லப்படும் சிற்றாலயம் இருந்தது. 1980ல் அதை பாலமுருகனடிமை சுவாமிகள் செப்பனிட்டு விரிவாக்கி கட்டினார். இரத்தினகிரி பாலமுருகன் ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ள திருக்கோலமாகவும் துறவியாக குருகோலத்திலும் இரு சன்னிதிகளில் கோயில்கொண்டிருக்கிறார். விநாயகருக்கு தரைப்பகுதியில் ஒன்றும் மலை உச்சியில் ஒன்றும் என இரு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருக்கும் அந்த ஆலயத்தின் அறங்காவலராக பாலமுருகனடிமை சுவாகிகள் திகழ்கிறார்.

விருது

திருக்குறளுக்காகவும் தமிழுக்காகவும் ஆற்றிய பணிகளுக்காக பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு தமிழக அரசின் அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது

உசாத்துணை