ச. மெய்யப்பன்
ச. மெய்யப்பன் தமிழறிஞர், பதிப்பாளர், தமிழ்ப் பேராசிரியர். எண்ணற்ற தமிழ் நூல்களை பதிப்பித்தமையால் பதிப்புச் செம்மல் என அறிஞர்களால் அழைக்கப்படுகிறார். சிதம்பரத்தில் தமிழுக்கென்று நாற்பதாயிரம் நூல்களுடன் முதல் தனியார் ஆய்வகம் ஒன்றை அமைத்தவர்.
பிறப்பு, கல்வி
புதுக்கோட்டை மாவட்டம், இராமச்சந்திராபுரம், கடியாபட்டியில் குங்கிலியம் சண்முகனாருக்கு மகனாக மெய்யப்பன் பிறந்தார். தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தனிவாழ்க்கை
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 36 ஆண்டுகளாகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். வ.சுப. மாணிக்கனாரை தன் குருவாகக் கருதுகிறவர்.
இலக்கிய வாழ்க்கை
அரிய நூல்கள் எழுதுவதற்குரிய களங்களை ஆய்வு மாணாக்கர்களுக்கு அறிமுகம் செய்தவர். மணிவாசகர் பதிப்பகத்தைத் தொடங்கி, அதன் வழியாகப் பல தமிழ் நூல்களை வெளியிட்டார். மணிவாசகர் நூலகம் 3500 நூல்களையும், மெய்யப்பன் பதிப்பகம் 750 நூல்களையும் வெளியிட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்காக "வெற்றித் துணைவன்" எனும் பெயரில் பாட நூல்களுக்கான கையேடுகளை வெளியிட்டுள்ளார். தமிழாய்வு நூல்களை அதிகமாக வெளியிட்டார். சிதம்பரத்தில் இவருடைய பெயரிலேயே மெய்யப்பன் பதிப்பகம் நிறுவப்பட்டுள்ளது.
மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் நூல்களைச் செம்பதிப்பாக வெளியிட்டார். துறைவாரியான நூல்களைத் தக்க அறிஞர்களைக் கொண்டு எழுதச் செய்து வெளியிட்டு, பதிப்புலகில் தமக்கெனத் தனித்த இடத்தினைப் பெற்றார். மு.வை.அரவிந்தன் எழுதிய உரையாசிரியர்கள், பேராசிரியர் சு. சக்திவேல் எழுதிய நாட்டுப்புறவியல் ஆய்வு, பேராசிரியர் ஆறு. இராமநாதன் எழுதிய நாட்டுப்புறவியல் துறை சார்ந்த களஞ்சியங்கள், அறிஞர் ச.வே.சுப்பிரமணியனாரைக் கொண்டு வெளியிட்ட தமிழ் இலக்கிய நூல்கள் ஆகியவை மெய்யப்பன் பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகத்தின் வழி வெளியிடப்பட்டது.
மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள முனைவர் ச.வே. சுப்பிரமணியனாரின் தொல்காப்பிய விளக்கவுரை என்னும் நூலும், Tholkaappiyam in English Content and Cultural Translation (With short commentary) என்னும் ஆங்கில நூலும் தொல்காப்பியத்தைத் தொடக்க நிலையில் பயில்பவர்களுக்குப் பயன்படும் சிறந்த நூல்கள்.
விருது
- குன்றக்குடி அடிகளார் இவருக்கு “தமிழவேள்” என்ற பட்டத்தை அளித்தார்.
- தருமபுரம் ஆதீனத் தலைவர் “செந்தமிழ்க் காவலர்” என்ற பட்டத்தை அளித்தார்.
- இவரின் தாகூர் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.
பதிப்பித்த நூல்கள்
- தொல்காப்பிய விளக்கவுரை
- பாரதியார் பாடல்கள்
- பாரதியார் கவிதைகள்
- திருவாசகம்
- பதிப்புரை இலக்கியம்
- தாயுமானவர் பாடல்கள்
- சித்தர் பாடல்கள்
- பட்டினத்தார் பாடல்கள்
- பாரதிதாசன் பாடல்கள்
- இலக்கிய வினாவிடை
- நகரத்தார் கலைக்கலஞ்சியம்
- தாகூர் வாழ்க்கை வரலாறு
- வள்ளலார் வாழ்க்கை வரலாறு
- Tholkaappiyam in English Content and Cultural Translation
இதர இணைப்புகள்
உசாத்துணை
- https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/93893/1/%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D.html
- மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள் - முனைவர் மு.இளங்கோவன் (muelangovan.blogspot.com)
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.