அத்யாத்ம ராமாயணம்

From Tamil Wiki

அத்யாத்ம ராமாயணம் (பொயு 13 -15) பிற்காலத்தைய ராமாயணங்களில் ஒன்று. சம்ஸ்க்ருத மொழியில் அமைந்தது. ராமனை முழுமுதல் கடவுளாக முன்னிறுத்தும் பக்திப்படைப்பு. பல்வேறு நாட்டார் ராமாயணங்களையும் வட்டார ராமாயணங்களையும் இணைத்துக்கொண்டு ராமசர்மா என்னும் ஆசிரியரால் எழுதப்பட்டது.

பெயர்

அத்யாத்ம என்றா சொல் ஆன்மிக என்னும் சொல்லுக்கு சமானமானது. ஆத்மவிடுதலை சார்ந்தது என பொருள்கொள்ளலாம்.

ஆசிரியர்

அத்யாத்ம ராமாயணத்தின் ஆசிரியர் வியாசர் என்பது வைதிகநம்பிக்கை. இந்நூல் பிரம்மாண்டபுராணத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் பொயு 13 அல்லது 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானந்தர் என்பவர் என்றும் ராமசர்மா என்பவர் என்றும் வெவ்வேறு கூற்றுகள் உள்ளன.

அமைப்பு

அத்யாத்ம ராமாயணம் 7 காண்டங்களிலாக 65 அத்தியாயங்களும் 4500 செய்யுட்களும் கொண்டது. சிவனும் பார்வதியும் ராமனின் பிறப்பு முதல் ராமாயணாக்கதையை சொல்வதாக இதன் அமைப்பு உள்ளது.

உள்ளடக்கம்

பாலகாண்டம்

பிரம்மத்தின் இயல்பு, பிரம்மமே மானுட குணங்களுடன் ராமனாக வந்தது, ராமனின் பிறப்பு மற்றும் அகலியை சாபவிமோசனம் ஆகியவை இதில் பேசப்பட்டுள்ளன

அயோத்யா காண்டம்

ராமன் காடுசெல்வது, தசரதனின் மறைவு வரையில் இதில் பேசப்பட்டுள்ளன

ஆரண்யகாண்டம்

சீதை ராவணனால் கவரப்படுவது வரை இதில் விவரிக்கப்படுகிறது

கிஷ்கிந்தா காண்டம்

கிஷ்கிந்தையில் ராமன் வாலியை கொல்வது, சீதையை தேடிச்செல்வது ஆகியவை பேசப்படுகின்றன

சுந்தர காண்டம்

அனுமனின் பிறப்பு , ஆற்றல் மற்றும் அனுமன் இலங்கைக்குச் சென்ற கதை இதில் உள்ளது

இலங்கைக்காண்டம்

ராமனுக்கும் ராவணனுக்குமான போர். ராமன் சீதையை மீட்டு அயோத்தி திரும்புதல்

உத்தர காண்டம்

சீதையை ராமன் காட்டுக்கு அனுப்புதல், ராமனின் மைந்தர்களான லவன் குசன் ஆகியோர் பிறத்தல், ராமன் வைகுண்டம் செல்லுதல் ஆகியவை இப்பகுதியில் உள்ளன.

தத்துவம்

அத்யாத்ம ராமாயணம் பக்தி இயக்கத்தின் வெளிப்பாடாக அமைந்த நூல். ராமனை ஓர் அரசனாக அன்றி முழுமுதல் தெய்வமாகவும், பிரம்மத்தின் வடிவமாகவும் இந்நூல் முன்வைக்கிறது. அதை சிவனே பார்வதியிடம் விளக்குவதுபோல் அமைந்திருப்பதனால் வைணவத்தின் முதன்மையையும் இந்நூல் வலியுறுத்துகிறது.

இந்நூலில் ராமனுக்கும் லட்சுமணனுக்குமான உரையாடல் உள்ளது. அது ராமகீதை என அழைக்கப்படுகிறது. வேதாந்தத்தின் நோக்கில் பக்தியை முன்வைக்கும் ஒரு சிறு தத்துவநூலாக இது கருதப்படுகிறது.

இலக்கியச் செல்வாக்கு

அத்யாத்ம ராமாயணம் வேதாந்த நோக்கில் பக்தியை முன்வைக்கும் நூலாகையால் பிற்கால பக்தி இயக்க ராமாயணங்களில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியது. துளசிதாசர் எழுதிய ராமசரிதமனஸ் இந்நூலின் வழியில் அமைந்தது

அத்யாத்ம ராமாயணத்தை துஞ்சத்து எழுத்தச்சன் மலையாளத்தில் அத்யாத்மராமாயணம் கிளிப்பாட்டு என்னும் பேரில் வழிநூலாகப் படைத்துள்ளார்

இலக்கிய இடம்

பொயு ஏழாம் நூற்றாண்டில் சங்கரர் உருவாக்கிய அத்வைதம் இந்திய தத்துவசிந்தனையிலும் இந்து மதக்கொள்கைகளிலும் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியது. பொயு ஏழாம் நூற்றாண்டில் உருவான பக்தி இயக்கம் சைவ, வைணவ,சாக்த மதங்களை மக்கள்மயமாக்கி பெருமதங்களாக உருமாற்றியது. ஞானம், தவம் ஆகியவற்றைவிட மேலாக பக்தியை முன்வைத்து வெவ்வேறு வழிபாட்டு முறைகளை ஒருங்கிணைத்து அதை நிகழ்த்தியது பக்தி இயக்கம். பக்தி இயக்கம் அத்வைத வேதாந்தத்தை உள்ளிழுத்துக்கொண்டு முன்னகர பல புராணங்களை உருவாக்கியது. அவற்றில் முதன்மையானதாக அத்யாத்ம ராமாயணம் கருதப்படுகிறது. வேதாந்த நோக்கில் ராமாயணக் கதையை உருவகமாக ஆக்கி பக்தியை இந்நூல் முன்வைக்கிறது. ஆகவே பின்னாளைய பக்தி இயக்கத்தின் நூல்கள் பலவற்றுக்கு இது முன்னுதாரணமாக ஆகியது. ராமாயணம் ஓர் இலக்கியப்படைப்பு என்னும் நிலையில் இருந்து ஒரு மதநூல் என்னும் நிலைநோக்கி அத்யாத்மராமாயணம் வழியாகவே முன்னகர்ந்தது. இந்தியாவின் மரபான வைணவ மதப்பிரிவுகள் அத்யாத்ம ராமாயணத்தையே தங்கள் மூலநூலாகக் கொள்கின்றன

உசாத்துணை

அத்யாத்ம ராமாயணம் இணையநூலகம்