ஆறுமுக அடிகள்
ஆறுமுக அடிகள்(1827- 1882) வேதாந்தி. ஞானவாசிட்டம், விவேக சூடாமணி, பஞ்சதசம் போன்ற வேதாந்த நூல்களுக்கு உரை எழுதியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு
ஆறுமுக அடிகள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மாக்காத்தூரில் 1827-ஆம் ஆண்டில் பிறந்தார். இயற்பெயர் ஆறுமுகம். தந்தை நாகலிங்கம்பிள்ளை காவலராக பணியாற்றினார். தாய் காமாட்சியம்மாள். ஆறுமுக அடிகள் சிறுவயதிலிருந்தே முருக பக்தர்.
முறையாக கல்வி கற்றவர், தன் பன்னிரண்டாவது வயதில் சிவப்பதிகளுக்கு வழிபடச்சென்ற ஆறுமுக அடிகள் அங்கிருந்த அறிஞர்களிடம் புராணங்களையும் வேதாந்த நூல்களையும் கற்றார்.
தனிவாழ்க்கை
இயல்பாகவே உலகப்பற்று இல்லாத ஆறுமுக அடிகளுக்கு பெற்றொர் மணம் செய்து வைத்தனர். தந்தை நாகலிங்கம்பிள்ளை தன் காவலர் பணியையும் ஆறுமுக அடிகளை பார்க்கச் செய்தார்.
ஆறுமுக அடிகள் தன் இருபத்தி நான்காவது வயதில் இல்லறத்தை துறந்து திருக்கோவிலூர் ஆதீனத்திலிருந்த முத்துக்கறுப்ப சுவாமிகளிடம் தீட்சை பெற்றுக்கொண்டார். பல வேதாந்த மடங்களுக்கு சென்று கற்றார்.
வட இந்தியாவிற்கு சென்று மீண்டவர் மதுரையில் மாணவர்களுக்கு வேதாந்தம் கற்றுக்கொடுத்தார். வேதாந்த நூல்களுக்கு உரை எழுதினார். அடிக்கடி திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டுக்கொண்டும் இருந்தார்.
நூல்கள் பட்டியல்
உரைகள்
ஞானவாசிட்ட அரும்பதவுரை
விவேகசூடாமணி அரும்பதவுரை
பஞ்சதசப்பிரகரணம் அரும்பதவுரை
பாட்டு
கிளிக்கண்ணி
பிற
அத்துவித உண்மை
மறைவு
ஆறுமுக அடிகள் 1882-ஆம் ஆண்டு திருப்பரங்குன்றத்தில் விதேக கைவல்யம் அடைந்தார். ஆறுமுக அடிகளின் மாணவர்கள் அவரது உடலை சமாதி செய்து வழிபட்டனர்.