அ. சந்திரசேகர பண்டிதர்

From Tamil Wiki
Revision as of 11:25, 7 March 2022 by Ramya (talk | contribs)

அ. சந்திரசேகர பண்டிதர் (அக்டோபர் 26, 1879) ஈழத்து தமிழ் அறிஞர். ஆசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மானிப்பாய் பேரகராதியைத் தொகுத்து வெளியிட்டவர்.

இளமை, கல்வி

இலங்கை, யாழ்ப்பாணம், உடுவிலில் அம்பலவாணருக்கு மகனாக சந்திரசேகர பண்டிதர் பிறந்தார். தமது பாட்டனார் சங்கர உடையாரிடம் கல்வி கற்றார். உடுவிலில் அப்போதிருந்த கிறித்தவ மதப் பிரசாரகர்களிடம் பணியாற்றி நதானியேல் என்ற பெயரைப் பெற்று கிறித்தவரானார்.

தனிவாழ்க்கை

சந்திரசேகர பண்டிதரின் மூத்த மகன் உவைமன் நதானியேல் சுவாமிநாதர் பாம்பனில் மருத்துவராகவும், மற்றுமொரு மகன் தில்லையம்பலம் நதானியேல் உவெசுலிய மிசன் பாடசாலை ஆசிரியராகவும், இளையவர் அம்பலவாணர் நதானியேல் யாழ்ப்பாணம் காவல்துறை நீதிமன்றத்திலும் பணியாற்றினர்.

இலக்கிய வாழ்க்கை

வண. ஸ்பால்டிங் என்பவருக்கு ஆசிரியராக இருந்து, பல நூல்களை மொழிபெயர்த்தும், இயற்றியும் உள்ளார். நல்லூரில் வாழ்ந்த வண.ஜெ. நைட் என்பவர் தமிழ்-ஆங்கில அகராதி ஒன்று எழுதிய போது அவருக்கு உதவினார். விவிலிய நூல் மொழிபெயர்ப்புக்காக ஸ்பால்டிங்கு பாதிரியார், ஆணல்ட் சதாசிவம்பிள்ளை ஆகியோருடன் 1848 ஆம் ஆண்டில் சென்னை சென்றார். மானிப்பாய் அச்சியந்திரசாலையில் மதப்போதகர்கள் அச்சிட்ட பல கிறித்தவ வேத மொழிபெயர்ப்புகளுக்கு இவர் பல வகைகளிலும் உதவினார்.

சந்திரசேகர பண்டிதர் மானிப்பாய் அகராதி என்ற பேரகராதியைத் தொகுத்து வெளியிட்டார். இது The Manual Dictionary of the Tamil Lanuage என்ற பெயருடன் ஸ்பால்டிங் பாதிரியாரால் 1942இல் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிசன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. இது யாழ்ப்பாண அகராதி, ஸ்பால்டிங் அகராதி என்றும் அழைக்கப்பட்டது. இவ்வகராதியில் 58,500 பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இவ்வகராதி தொகுப்பிற்கு இருபாலை சேனாதிராச முதலியார், நவாலி வி. வைரமுத்துப்பிள்ளை ஆகியோரும் உதவியுள்ளனர். தமிழ் அகராதிகளில் இதுவே முதலாவது பெரிய அகராதியாகும்.

மறைவு

அக்டோபர் 26, 1879இல் சந்திரசேகரப் பண்டிதர் தனது 79வது வயதில் காலமானார்.

இதர இணைப்புகள்

உசாத்துணை