ஞானாதிக்கராயர் காப்பியம்

From Tamil Wiki
Revision as of 19:24, 26 November 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஞானாதிக்கராயர் காப்பியம் (அரங்கேற்றம்-1774; பதிப்பு-1865) ஞானாதிக்கராயர் என்னும் கிறிஸ்தவ அரசரின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் காப்பிய நூல். இதனை இயற்றியவர் புதுவை வித்துவான் ச. சாமிநாதப் பிள்ளை. இந்நூலில் 2222 பாடல்கள் உள்ளன.

பிரசுரம், வெளியீடு

ஞானாதிக்கராயர் காப்பிய நூல், புதுவை வித்துவான் ச. சாமிநாதப் பிள்ளையால் இயற்றப்பட்டு 1774 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 30 ஆம் நாள், புதுச்சேரி மரியன்னை தேவாலயத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நூலாசிரியரின் காலத்திற்குப் பின்னர் அவரது பேரர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அப்பாவுப் பிள்ளை என்பவரால் 1865 ஆம் ஆண்டு, சென்னைப் பட்டணத்திலுள்ள முத்தியாலு நாயக்கரது வாணி நிகேதன அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது

காப்பியத்தின் கதை

இயேசு கிறிஸ்துவை மரியாள் பெற்றெடுத்தபின், பொ.யு.மு.  972 ஆம் ஆண்டில்  ஞானாதிக்கராயர் பிறந்தார். பொ.யு.மு. 1002 ஆம் ஆண்டில் முடி சூடினார். பன்னிரெண்டு ஆண்டுகள் இளவரசனாக இருந்தார். பின்னர் அரசரானார். 52 ஆண்டுகள் ஆட்சி செய்த பின் விண்ணுலகம் அடைந்தார். அவரது வாழ்க்கையையே, வித்துவான் ச. சாமிநாதப் பிள்ளை, ‘ஞானாதிக்கராயர் காப்பியம்’ என்ற பெயரில் காப்பியமாக இயற்றினார்.

இக்காப்பியத்தில் விவிலியச் செய்திகள் கிளைக் கதைகளாக இடம்பெற்றுள்ளன. இறைவன் ஆதாம் ஏவாளைப் படைத்தது முதல் இயேசு கிறிஸ்து பரலோகம் சென்றது வரையிலான செய்திகள் இக்காப்பிய நூலில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

நூல் அமைப்பு

ஞானாதிக்கராயர் காப்பியம் பாயிரப் பகுதியுடன் தொடங்குகிறது. இக்காப்பியத்தில் 30 படலங்கள் அமைந்துள்ளன. அவை

  1. நாட்டுப் படலம்
  2. நகரப் படலம்
  3. கோவியற் படலம்
  4. ஞானாதிக்கனுற்பவப் படலம்
  5. ஞான மஞ்சனப் படலம்
  6. புனல் விளையாட்டுப் படலம்
  7. நூற்றேர்ச்சிப் படலம்
  8. தரிசனப் படலம்
  9. அரசாட்சிப் படலம்
  10. புரசன் றூதுப் படலம்
  11. மண்மணத்த படலம்
  12. விரத நிலைப் படலம்
  13. நீதிநிறை மாட்சிப் படலம்
  14. அயிர்ப்புற்ற படலம்
  15. இன்புறு படலம்
  16. அபிநவயுத்தப் படலம்
  17. சமர்செய் படலம்
  18. இரோமைசேர் படலம்
  19. மாமகுடம் புனைந்த படலம்
  20. அருண்மாட்சிப் படலம்
  21. முடியப்ப மன்னன் வரவுப் படலம்
  22. தர்க்கவாதப் படலம்
  23. இருமந்திரப் படலம்
  24. இசேலம்மாள் மணவினைப் படலம்
  25. சங்கிராம வாகைப் படலம்
  26. நகர் நீங்கு படலம்
  27. கசினமாமலையடைந்த படலம்
  28. பிணிப்படு படலம்
  29. திருவுருசேமப் படலம்
  30. ஞானாதிக்க நிலைபேறுறு படலம்

- என்பனவாகும். இந்நூலில் 2222 பாடல்கள் உள்ளன.

பாடல்கள் நடை

இறை வணக்கம்

மணிகொண்ட கடலுடுத்த வையகமு மதின்மிக்க

வணிகொண்ட பல்லுயிரு மண்டலமுந்தீ யனிலமம்புந்

துணிகொண்ட பருதியுடு சோமனிவை விதித்தேவற்

பணிகொண்ட நிறைநீதிப் பரஞ்சுடரின் பதம்பணிவாம்

ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டமை

அன்றுதித்த மனிதனுக் களித்தவயதுமுப்பதாம்

நின்றுதிப்பத் துணைவிசெய்ய நித்திரைப் படுத்தியே

நன்றுரத்தின் பக்கமீது நடுவெலும்பு சதையெடுத்

தென்றுரத்த வாவிதன்னை யீயவே யுதித்தனள்

இயேசு செய்த அற்புதங்கள்

விழியற்றார்க் கொளியளித்து மிகப்பெரு கப்பிணிகொண்டோர் வினையைத் தீர்த்து

மொழியற்ற மூங்கையரும் பேசமுட மெழுந்தோட மொய்தாய் தந்நை

வழியற்றார் மனங்களிப்ப மகவீய மாண்டவரு மண்ணி லுள்ள

குழியற்றார்ந் திருந்தவர்க்கு முயிர் கொடுத்த நவங்கோடா கோடியாமே

இயேசுவுக்குச் செய்யப்பட்ட வாதைகள்

கலைமுகத்தில் விளங்குசுதன் வருத்தந்தாங் காக்கா றளர்ந்து மெலிந்தூ சலாடிச் சென்று

மலைமுகட்டி லிறக்கவிரு கையுங் காலும் வாராணியா லறைந்து மடக்கி மீட்டு

நிலைமுகத்து நாட்டிட வேழமுத வாக்கு நிகழ்த்திய பின்ன மக்காக விளிந்தானன்று

கொலைமுகத்துக் கொடியவனோ ரீட்டியாலே குத்த விலாச் செந்நீராற் குருடு தீர்ந்தான்.

மதிப்பீடு

ஞானாதிக்கராயர் காப்பிய நூல் உவமைச் சிறப்பு, வருணனைச் சிறப்பு, பழமொழிச் சிறப்பு, அணி நயங்கள் எனப் பல்வேறு இலக்கியக் கூறுகளைக் கொண்டுள்ளது. இக்காப்பியத்தின் மாரிவாழ்த்துப் பகுதியிலிருந்து இரண்டு பாடல்களை எல்லீஸ்,  தமது திருக்குறள் மொழிபெயர்ப்பில் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார் . சாமிநாத தேம்பாவணியின் தாக்கம் இக்காப்பியத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் கிறித்தவக் காப்பியங்களில், மிகப் பழமையான காப்பியங்களுள் ஒன்று ஞானாதிக்கராயர் காப்பியம்.

உசாத்துணை

  • கிறித்தவக் காப்பியங்கள், முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு. முதல் பதிப்பு, 2013.