கண்டன வெளியீடு

From Tamil Wiki
Revision as of 21:01, 2 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கண்டன வெளியீடுகள் :இந்திய மொழிகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான ஒருவகை எழுத்துவடிவங்கள். மதவிவாதங்கள் இலக்கிய விவாதங்களில் இவை வெளியிடப்பட்டன. எதிர்தரப்பை கடுமையாகவு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கண்டன வெளியீடுகள் :இந்திய மொழிகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான ஒருவகை எழுத்துவடிவங்கள். மதவிவாதங்கள் இலக்கிய விவாதங்களில் இவை வெளியிடப்பட்டன. எதிர்தரப்பை கடுமையாகவும் தர்க்கபூர்வமாகவும் மறுப்பவை இவை.

உருவாக்கம்

மொழி, மதம், இனம் ஆகியவற்றில் பன்மைத்தன்மை மிக்க இந்தியாவில் மதம் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் கடுமையான விவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. எதிர்த்தரப்பைக் கண்டித்து எழுதப்படும் செய்யுள்கள் சம்ஸ்கிருதத்திலும் பிற இந்திய மொழிகளிலும் ஏராளமாக வெளிவந்திருக்கின்றன. அவற்றில் சில தனிப்பாடல்களாக எஞ்சியிருக்கின்றன. தமிழில் பிற்கால ஔவையார் எழுதியதாகச் சொல்லப்படும்

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே

மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்

கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே

ஆரையடா சொன்னாய் அது

போன்ற கவிதைகளை கண்டனக் கவிதைகளாக காணலாம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சுமுறையும் உரைநடையும் உருவானபோது கண்டனங்களை சிறிய துண்டுப்பிரசுரங்களாக பிரசுரிக்கும் வழக்கம் உருவானது. அப்போது அச்சுநூல்கள் பரவலாகவில்லை என்பது அவை வெளியாவதற்கான காரணம். அத்துடன் ஒரு குறிப்பிட்ட கண்டனம் மட்டுமே மக்களிடம் சென்று சேரவும் கண்டனப்பிரசுரங்கள் தேவையாயின.

உள்ளடக்கம்

கண்டனப் பிரசுரங்கள் பெரும்பாலும் மேடைப்பேச்சுக்கு அணுக்கமானவை. செய்யுள் நடையும் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும். நூலாதாரங்களும் தர்க்கங்களும் முன்வைக்கப்படும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சைவம் மறுமலர்ச்சி அடைந்தபோது சைவத்திற்கு எதிராக கிறிஸ்தவர்கள் அத்வைதிகள் (மாயாவாதிகள்) முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவே கண்டனப்பிரசுரங்கள் நிறைய வெளிவந்தன.