மதுரை அமெரிக்கன் கல்லூரி
அமெரிக்கன் கல்லூரி (1881) மதுரையில் அமைந்துள்ள பழமையான கல்லூரி. அமெரிக்க மிஷன் மதப்பரப்புநர்களால் உருவாக்கப்பட்டது. இது 1881 ஆம் ஆண்டு மதுரையில் தி அமெரிக்கன் மதுரா மிஷன் அமைப்பால் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் தென்தமிழகத்தின் ஒரே கல்லூரி இதுவே
வரலாறு
அமெரிக்க கிறிஸ்தவ மிஷனால், 1881 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சிறிய பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. சில ஆண்டுகளில் பள்ளியின் அமைவிடம் மதுரை பசுமலைக்கு மாற்றப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் பள்ளிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அமெரிக்கன் கல்லுரி என்ற பெயரில் மதுரையையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் சேர்ந்த மக்களின் நலனுக்காக ஒரு கல்லூரி உருவாக்கப்பட்டது. மதுரை நகரிலிருந்து பசுமலை வந்து செல்ல மாணவர்கள் மத்தியில் இருந்த தயக்கத்தை போக்கும் விதமாக வைகை ஆற்றுக்கு வடக்கே தற்போதைய அமைவிடத்தில் இடம் வாங்கப்பட்டு புதிய கல்லூரி வளாகம் அமைக்கப்பட்டது. 1900களின் தொடக்கத்தில் தற்போதைய அமைவிடத்துக்கு கல்லூரி இடம் மாற்றப்பட்டு இன்று வரை செயற்பட்டு வருகிறது. புதிய வளாகம் வாங்குவதற்காக அமெரிக்க கிறிஸ்தவ மிசனிடம் பெறப்பட்ட நிதி ஜான் டேவிசன் ராக்பெல்லர் என்ற உலகின் முதல் எண்ணை அதிபரின் நன்கொடை.