ஈழநாடு

From Tamil Wiki
Revision as of 19:37, 27 February 2022 by Jeyamohan (talk | contribs)
ஈழநாடு

ஈழநாடு (1959 ) இலங்கையில் வெளியிடப்பட்ட தமிழ்ச் செய்தி தாளிதழ். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடப்பட்ட தமிழ் நாளிதழ் என அறியப்படுகிறது. யாழ்ப்பாணத் தமிழரின் குரல் என்று குறிப்பிடப்பட்டது.

தோற்றம், வெளியீடு

யாழ்ப்பாணம் வாழைச்சேனை கிழக்கு காகித ஆலைக் கூட்டுத்ஸ்தாபனத்தின் தலைவராக இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் கே.சி. தங்கராசாவால் 1959 ஆம் ஆண்டு இப்பத்திரிகை வெளியிடப்பட்டது. இலங்கையில் வெளியிடப்பட்ட தமிழ்ப் பத்திரிகைகள் உட்பட்ட எல்லாப் பத்திரிகைகளும் இலங்கையின் தலைநகரமான கொழும்பிலிருந்தே வெளியிடப்பட்டன. இலங்கைத் தமிழரின் பண்பாட்டு மையமாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களின் குரலைப் பிரதிபலிக்கும் நோக்கத்துடன் பத்திரிகைகள் எதுவும் இல்லாத குறையைப் போக்க 1958 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் "கலாநிலையம்" என்ற பதிப்பகத்தை கே. சி. தங்கராஜா , கே.சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்கள் ஆரம்பித்தனர். கலாநிலையம் வெளியீடாக 1959 பெப்ரவரியில் “ஈழநாடு” என்ற பெயரில் செய்திப் பத்திரிகையை ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் வாரம் இரு முறையாக வெளிவந்தது. 1961 முதல் நாளிதழாக வெளிவர ஆரம்பித்தது. கொழும்பு தவிர்ந்த இலங்கை நகரமொன்றிலிருந்து வெளிவந்த முதல் நாளிதழ் இதுவே.

ஈழநாட்டின் பிரதம ஆசிரியர்களாக எஸ். எம். கோபாலரத்தினம், கே. பி. ஹரன் ஆகியோர் பணியாற்றினார்கள். ஈழநாடு ஞாயிறு வாரமலர் பதிப்பிற்கு ஆசிரியர்களாக சு. சபாரத்தினம், ம. பார்வதிநாதசிவம் ஆகியோர் இருந்தனர்.ஈழகேசரி 1958 இல் நிறுத்தப்பட்டதும் அங்கிருந்த ஆசிரியர் இராஜ அரியரத்தினம் ஈழநாடு வில் இணைந்தார். அ.செ.முருகானந்தன், பெருமாள், சசிபாரதி, எஸ். எஸ். குகநாதன், காசிலிங்கம், சபாரத்தினம், மகாதேவா,  அனந்த பாலகிட்ணர், ஈ.கே. ராஜகோபால்,  கே.வி.ஜே. திருலோகமூர்த்தி,  ஐயா சச்சிதானந்தம், கே.கே. ஐயாத்துரை, எஸ்.திருச்செல்வம், ஏ.பி. சூரியகாந்தன், கா.யோகநாதன், எஸ். ஜெகதீசன், ஏ.என்.எஸ் திருச்செல்வம், பார்வதி நாதசிவம்,  கந்தசாமி , துரைசிங்கம் ,  மகாலிங்க சிவம் என பலர் ஈழநாட்டில் பணியாற்றினர்.

ஈழநாடு1995
ஈழநாடு1995

தாக்குதல்கள்,நிறுத்தம்

1981 ஜூன் மாதத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட போது ஈழநாடு அலுவலகமும் அதே கும்பலால் எரிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் இந்திய அமைதிப் படையினரால் தாக்கப்பட்டு பயன்படுத்த முடியாத அளவு சேமடைந்தது. 1988 பெப்ரவரியில் போராளிகளின் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது. ஒவ்வொரு தடவையும் சிறு இடைவெளியின் பின் மீண்டும் வெளிவந்தது. தொடர்ச்சியான பத்திரிகைச் செய்தித் தணிக்கைகள், அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட நிலையில்1995 ல் பத்திரிகை வெளிவருவது நிறுத்தப்பட்டது.

ஈழநாடு நினைவுநூல்கள்

ஈழநாட்டின் 25வது ஆண்டு நிறைவுமலர்

1984 பெப்ரவரி 11 இல் 56 பக்கங்களுடன் பத்திரிகையின் அளவில் வெளியிடப்பட்டது. இம்மலரில் பத்திரிகையின் வரலாறு, பத்திரிகையாளர்களின் அனுபவக் கட்டுரைகள், மற்றும் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

அமரதீபம்

1987ல் செட்டியார் அச்சகத்தின் வாயிலாக அச்சிடப்பட்ட  நூல். 76 பக்கம் கொண்ட இந்நூலில், புகைப்படங்களின் துணையுடன் ஈழத்தின் தமிழர் தாயகப் பிரதேசத்தில் முதலாவது தமிழ்த் தினசரியான ஈழநாடு பத்திரிகையை ஆரம்பித்துத் தமிழ் வளர்த்த கே.சி.தங்கராஜா (20.6.1907- 20.7.1987) அவர்களின் வாழ்வும் பணியும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பல்வேறு சமூகப் பிரமுகர்களின் இரங்கலுரைகள், நினைவஞ்சலிக் கட்டுரைகள் என்பவற்றைக் கொண்டதாக ஈழநாடு ஊழியர்களால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இந்த மலர் கே.சி.தங்கராஜா சிரார்த்த தினத்தினையொட்டி வெளியிடப்பட்டது.

என்னுள் என்னோடு

2002ல் எஸ்.கே.காசிலிங்கம் அவர்களால் பிரான்ஸ்: முகுந்தன் வெளியீட்டகத்தின் வாயிலாக வெளியாகியது. 256 பக்கங்களுடனும் புகைப்படங்களுடனும் இந்நூல் வெளிவந்தது, பத்திரிகையாளர் திரு காசிலிங்கம் தன் அனுபவங்களை பத்திரிகை அனுபவங்கள், அரசியல், புலம்பெயர் வாழ்வியல் என்ற மூன்று பிரிவுகளில்; வகைப்படுத்தி இந்நூலில் தந்துள்ளார். தனது “ஈழநாடு” பத்திரிகை அனுபவங்களை முதற்பாகத்தில் விவரித்துள்ளார்

பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு

2003ல் எஸ்.எம்.கோபாலரத்தினம் எழுதியநூல் யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகத்தின் வாயிலாக நவம்பர் 2003 இல் வெளிவந்தது. ஈ வீரகேசரியில் 7 ஆண்டுகளும், ஈழநாட்டில் 21 ஆண்டுகளும் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்ற வகையில் தனது பத்திரிகைத்துறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஈழநாடு2021

புதிய இதழ்

2019 ல் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு இதழ் மீண்டும் தொடங்கப்பட்டது. யாழ்.  ஈழநாடு பிரைவேட்  லிமிட்டட்  நிறுவன இயக்குநரும் டான் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவருமான மூத்த ஊடகவியலாளர் எஸ். எஸ். குகநாதன் ஈழநாடு வார இதழை  யாழ்ப்பாணத்தில்  வெளியிடார் .லண்டன் நாழிகை இதழ் ஆசிரியர் மாலி மகாலிங்கசிவம், ஈழநாடு ஸ்தாபக இயக்குநர் டாக்டர் சண்முகரட்ணத்தின் புதல்வர் எஸ். ரட்ணராஜன் ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

இணைய இதழ்

ஈழநாடு இணையத்திலும் வெளிவருகிறது.

https://eelanadu.lk/

தொகுப்பு

ஈழநாடு இதழ் தொகுப்புகள் இணையச்சேமிப்பில்

உசாத்துணை