under review

மதுரகவி (கணபதி சுப்பையர்)

From Tamil Wiki
Revision as of 21:14, 17 October 2023 by Tamizhkalai (talk | contribs)

மதுரகவி (கணபதி சுப்பையர்‌) (1800 - 1847) இசைவாணர். இறைவன்‌ மீது தமிழ்க்‌ கீர்த்தனங்கள், பதங்கள் பாடினார். சமஸ்தானாதிபதிகள் மேல் சிற்றின்பச்‌ சுவைகொண்ட பதங்கள் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரகவியின் இயற்பெயர் கணபதி சுப்பையர்‌. பெருங்கரையில் பிராமண குலத்தில் பிறந்தார். இளமையில்‌ பெருங்கரையில் கல்வியும்‌, இசைக்கல்வியும்‌ கற்றார். பின் மதுரையில் குடியேறி மீனாட்சியையும்‌ சுந்தரேசரையும்‌ வழிபட்டு வந்தார்‌.

இசை வாழ்க்கை

மதுரகவியின் குரு இராமகவிராயர்‌. மதுரகவி இறைவன்‌ மீது தமிழ்க்‌ கீர்த்தனங்களும்‌ பதங்களும்‌ பாடினார். இராமநாதபுரம்‌ சமஸ்தானத்துப்‌ பிரதானி முத்திருளப்பப்‌ பிள்ளை இவர்‌ பாடக்கேட்டு இவருக்கு 'மதுரகவி' என்று சபையில்‌ பட்டம்‌ சூட்டினார்‌. அவர் மீது கணபதி சுப்பையர் பதங்கள்‌ பாடினார்‌. அக்காலம்‌ பாளையப்பட்டு ஜமீன்கள்‌ தலையெடுத்திருந்த காலமாதலால்‌, சிற்றின்பச்சுவை தோன்றப்‌ பதம்‌ பாடுவது இசைவல்லவருக்குப்‌ பழக்கமான செயல்‌. இவர்‌ பல சமஸ்தானாதிபதிகளைக்‌ போற்றி, அவர்கள்‌ மீது சிற்றின்பச்‌ சுவைகொண்ட பதங்களைப்‌ பாடிப்‌ புகழ்வதைத் தொழிலாகக்‌ கொண்டார்‌. அவர்களிடம்‌ பெற்ற பரிசில்கள்‌ கொண்டு வாழ்க்கை நடத்தினார்.

மதுரகவி பாடியவற்றுள் பெரும்பான்மையானவை பதங்கள். நாற்பத்தியொன்பது பதங்கள் பாடினார். இலக்கணத்தோடு யாப்புக்குப்‌ பொருந்திவரும் பாடல்கள் இயற்றினார். இவரும்‌ கவிகுஞ்சர பாரதியும்‌ இராமநாதபுரம்‌ சிவகங்கை அகிய உபசமஸ்தான வித்துவான்கள்‌ எனப்பட்டனர். தனிக்கீர்த்தனங்கள்‌ பாடாவிடினும்‌ கந்தபுராணக்‌ கீர்த்தனை பாடினார்‌.

மாணவர்கள்
  • கவிகுஞ்சர பாரதி

பாடல்கள்

  • 'என்னதான்‌ சொன்னாரடி' (அசாவேரி),
  • 'என்ன வார்த்தை சொல்கிறாய்‌' (மோகனம்‌),
  • 'அன்னமே நீகூட்டி வாடி' (மோகனம்‌),
  • 'நீயாகிலும்‌ தூதுபோடி' (சங்கராபரணம்‌)

பாடல் நடை

  • மோகனம்‌ ஆதிதாளம்‌

பல்லவி: இந்தவித்தை யெங்கேபடித்தீர்‌ - நூதனமாக
இந்தவித்தை யெங்கேபடித்தீர்‌ (இந்த)
அனுபல்லவி: செந்திருவளர்‌ வீரைச்ச வுந்தரபாண்டியனருள்‌
சுந்தரமுத்திருளப்ப மந்திரியே வகைவகையாய்‌ (இந்த)

உசாத்துணை

  • தமிழ்‌ இசை இலக்கிய வரலாறு (தொகுதி - 1) - அசிரியர்‌ மு. அருணாசலம்‌: பதிப்பாசிரியர்‌ உல. பாலசுப்பிரமணியன்‌ - அக்டோபர்‌ 2009.


✅Finalised Page