first review completed

பொம்மியம்மன் கதை

From Tamil Wiki
Revision as of 04:41, 24 September 2023 by Jayashree (talk | contribs)
Bommi.jpg

பொம்மியம்மன் கதை நாட்டார் வழக்காற்றில் உள்ள கதைப்பாடல்களுள் ஒன்று. இப்பாடல் கணியான் சாதியினர் தொடர்பான கதை என்பதால் இது கணியான் கூத்தில் பாடப்படுகிறது.

கதை

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள பானாங்குளம் என்ற ஊரில் கணியான் சாதியினர் வாழ்ந்து வந்தனர். சுடலைமுத்து அண்ணாவியும், அவர் மனைவி பிச்சையம்மாவும் அவ்வூரில் வாழ்ந்தனர். அவர்களுக்கு முத்துசாமி, ஈனமுத்து, முப்பிடாதி, நல்லகண்ணு, ராமசாமி என ஐந்து ஆண்பிள்ளைகளும், ஒரு பெண்ணும். ஐவரும் சேர்த்து தந்தைக்கு துணையாக கணியான் கூத்து நிகழ்த்தி வந்தனர்.

சுடலைமுத்துவின் மூன்றாவது மகன் முப்பிடாதி ஆண்களில் அழகன். எனவே அவனே பெண் வேஷம் கட்டி ஆடத் தொடங்கினான். ஐந்தாமவன் ராமசாமி அண்ணாவியாகப் பாடுவான். மற்றவர்கள் மகுடம் இசைப்பதும், பின்பாட்டுப் பாடுவதும் செய்தனர். ராமசாமி குழுவினர் பூலம் என்ற ஊருக்குச் சென்று நிகழ்ச்சி நடத்தினார்கள். அவ்வூர் கொண்டையன் கோட்டு மறவர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. அவர்களின் குலதெய்வத்தின் கோவில் நாயக்கன்பட்டியில் இருந்தது. கொண்டையன் கோட்டை மறவர்கள் பங்குனி உத்தரம் திருவிழாவிற்கு ராமசாமி கணியான் குழுவை கூத்து நிகழ்த்தும் படி வேண்டினர்.

கூத்து நாயக்கன்பட்டியில் நிகழ்ந்ததால் அங்குள்ள நாயக்கர்களும் கூத்தைக் கண்டனர். ராமசாமி அண்ணாவியின் பாட்டையும், முப்பிடாதியின் ஆட்டத்தையும் கண்ட நாயக்கர்கள் தங்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலில் கூத்து நிகழ்த்தும்படி வேண்டினர். அக்கோவில் பல காலமாக திருவிழா இல்லாமல் பாழடைந்து இருப்பதாகவும் அதனை சரி செய்து கொடை நடத்தும்படியும் வேண்டினர். முப்பிடாதி கணியான் அங்கே வந்து ஆடுவதாக ஒப்புக் கொண்டார்.

நாயக்கன்பட்டி ஊர்த் தலைவராக இருந்த கவுண்டநாயக்கனுக்கு ஏழு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் மகளும். ஏழு அண்ணன்களுக்கு தங்கையாக பிறந்த பொம்மி ஊரிலேயே அழகானவள்.

கவுண்ட நாயக்கன் ஊர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தார். கவுண்ட நாயக்கன் வீட்டிலேயே கணியான்கள் தங்க ஏற்பாடாகியது. அங்கே முப்பிடாதி வேஷம் கட்டிக் கொண்டிருந்த போது பொம்மி அவனைக் கண்டாள். கண்டதும் அவன் மேல் காதலானாள். ராமசாமி அண்ணாவி பாடத் தொடங்கியதும் முப்பிடாதி சபை நடுவே ஆடி வந்தான். ஆடி வரும்போதே கூட்டத்திலிருந்த பொம்மியை கண்டான். அவனுக்கும் அவள் மேல் காதல் வந்தது. ஆடலின் ஊடாக இருவரும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்டனர்.

கூத்து முடித்து ராமசாமி அண்ணாவி தன் கூட்டத்துடன் திரும்பும் போது பொம்மி யாருக்கும் தெரியாமல் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றாள். ஊர் எல்லையைத் தாண்டியதும் தன் பின்னால் பொம்மி வருவதை முப்பிடாதி கண்டான். மற்றவர்களை முன்னே செல்லச் சொல்லி அவன் பொம்மியைப் பாழடைந்த மண்டபத்திற்கு அழைத்துச் சென்றான். தன்னைப் பின் தொடர்ந்து வந்ததற்கு பொம்மியின் மேல் கோபம் கொண்டான். ஆனால் அந்த கோபம் சிறிது நேரத்திலேயே மறைந்து அவள் மேல் காதல் கொண்டான்.

முப்பிடாதி அதிக நேரமாகியும் வராதது கண்டு ராமசாமி கணியான் அவர்கள் அத்தான் வேலாயுதத்தை அனுப்பி தேடி வரும்படி கேட்டுக் கொண்டார். வேலாயுதம் முப்பிடாதி இருக்கும் பாழ் மண்டபத்திற்கு வந்தார். அங்கே அவனுடன் ஊர் தலைவர் கவுண்ட நாயக்கரின் மகள் பொம்மி இருப்பதைக் கண்டார். முப்பிடாதியை கண்டித்தார். பொம்மியிடம் எங்கள் குலம் முழுவதும் அழிந்துவிடும் எனச் சொல்லி அவளை திரும்பிச் செல்லும் படி வேண்டினார். அவர்கள் குலத்தால் நாயக்கர்களை விட தாழ்ந்த ஜாதி எனக் கூறி அவளை திரும்பிச் செல்லும் படி வேண்டினார். முப்பிடாதியைக் கண்டித்து தன்னுடன் அழைத்துச் சென்றார்.

வேலாயுதம் சொன்ன பின் முப்பிடாதி வருவினை அறிந்து பொம்மியைத் திரும்பி போகும் படி வேண்டி அங்கிருந்து சென்றான். இதற்குள் பொம்மி காணாமல் போன விஷயமறிந்து ஊர் கூடி அவளைத் தேடி வந்தனர். தன் அண்ணன் ஏழு பேரும் ஊர் மக்களுடன் கூடி வருவதைக் கண்ட பொம்மி அந்த பாழ் மண்டபத்திலேயே தூக்கிட்டுக் கொண்டாள்.

துர்மரணம் அடைந்த பொம்மி அந்த வஞ்சத்தால் அடுத்த நாளே பானாங்குளம் கணியான் சாதித் தெருவில் வந்திறங்கினாள். அழுதபடி சுடலைமுத்துவின் வீட்டில் சென்று நின்றாள். வேப்பமரத்தில் ஏறி இசக்கியாக ஆடினாள். பின் சுடலைமுத்துவின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றழித்தாள்.

அடுத்த நாள் கணியான் சாதியினர் அவளுக்குப் புடம்போட்டு வழிபாடு செய்தனர். அதன் பின் பொம்மி இறங்கி வந்து கணியான் சாதியின் குல தெய்வமானாள்.

உசாத்துணை

  • சடங்கில் கரைந்த கலைகள், அ.கா. பெருமாள், காலச்சுவடு வெளியீடு

வெளி இணைப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.