மக்கா கலம்பகம்
மக்கா கலம்பகம், நபிகள் நாயகத்தைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பட்ட நூல். இஸ்லாத்தின் சிறப்பு, திருக்குர்ஆனின் பெருமை, நபிகள் நாயகத்தின் வாழ்க்கை பற்றி இக்கலம்பகம் கூறுகிறது. இதனை இயற்றியவர், செய்கு அப்துல் காதிறு நெய்னார் லெப்பை ஆலிம் புலவர். இதன் காலம் 19 ஆம் நூற்றாண்டு.
ஆசிரியர் குறிப்பு
மக்கா கலம்பகம் நூலை இயற்றியவர், செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர். ஆலிம் புலவர் என்று அழைக்கப்பட்டார். புலவர் நாயகம் என்று போற்றப்பட்டார். இவர் முஹியீத்தின் ஆண்டவர் புராணம், திருக்காரண புராணம், நாகை அந்தாதி, திருமணி மாலை, தோத்திர மாலை, சொர்க்க நீதி, குத்பு நாயகம், புதூஹ் ஷாம் புராணம், சத்துரு சங்காரம், தரும ஷபா அத்து மாலை போன்ற நூல்களை எழுதினார். உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணத்தை, 1842-ல், முதன் முதலில் அச்சிட்டுப் பதிப்பித்தார். சீட்டுக்கவி, சித்திரக்கவி, முனாஜாத்துக்கள், கீர்த்தனைகள் எனப் பலவற்றை இயற்றினார். இவரது காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு.
நூல் சிறப்பு
மக்கா கலம்பகத்தில் காப்புச் செய்யுள் நீங்களாக 97 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. நபிகள் நாயகத்தைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட இந்நூலில் நபிகள் நாயகத்தின் சிறப்பு, மக்கா நகரின் பெருமை, நபி மார்களின் வரலாறு, புனித ஜத் யாத்திரையின் தோற்றம், சிறப்பு, ஹஜ் யாத்திரை செய்ய வேண்டியதன் அவசியம், மக்கா நகரில் வாழும் மக்களின் நற்குணங்கள், இயல்புகள் போன்றவை இக்கலம்பக நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
நூல் மூலம் அறிய வரும் செய்திகள்
- அல்லாஹ்வால் மக்களுக்கு நல்வழி காட்டுவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட திருத் தூதர்களே நபிகள் என அழைக்கப்பட்டனர்.
- நபி என்னும் அறபுச் சொல்லுக்கு உயர்த்தப்பட்டவர் என்பது பொருள்.
- இறைவனிட மிருந்து 'வஹீ' (இறைச் செய்தி) மூலம் இறைக் கட்டளையைப் பெற்றுத் தருபவர்களே நபிகள்.
- அல்லாஹ் இவ்வுலகிற்கு 1, 24,000 நபிமார்களை அனுப்பி வைத்தார்.
- இவ்வரிசையில் முதலில் தோன்றியது ஆதம் (அலை). இறுதியாகத் தோன்றியவரே நபிகள் நாயகம் (சல்) அவர்கள்.
- நபிகள் நாயகம், தனக்கு முன் தோன்றிய 1,24.000 நபிமார்களின் செயல்களை நிறைவு செய்தார். இஸ்லாத்தை இவ்வுலகில நிலைநாட்டினார்.
- உலகில் தோன்றிய முதல் நகரம் மக்கா. இது ‘உம்முல் குரா’ (நகரங்களின் அன்னை) என்று அழைக்கப்படுகிறது.
- இங்கு, முதல் நபியாக ஆதம் அலை, இறை ஆணைப்படி தொழுவதற்காக முதல் ஆலயமாகிய கஃபாவை நிறுவினார்.
- மக்காவிற்கு வந்து செல்வதான ஹஜ் என்னும் புனித யாத்திரை இஸ்லாமியரின் அடிப்படையான ஐந்து கடமைகளுள் ஒன்று.
உசாத்துணை
- இஸ்லாமியச் சிற்றிலக்கியங்கள், ஜெ.ஆர். இலட்சுமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை
- இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு, பேராசிரியர் மு சாயபு மரைக்காயர், கோமதி அச்சகம், சென்னை
- முஸ்லிம் தமிழ்ப் பாரம்பரியம், ஹாபிஸ் எம்.கே. செய்யிது அகமது, அரசு வெளியீடு, இலங்கை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.