நந்திக் கலம்பகம்

From Tamil Wiki
Revision as of 01:08, 21 February 2022 by Subhasrees (talk | contribs) (நந்திக் கலம்பகம் - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நந்திக் கலம்பகம் கலம்பக இலக்கியங்களில் ஒன்று. காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப் பாடப்பட்ட நூல். கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டது நந்திக் கலம்பகம். மூன்றாம் நந்திவர்மனின் காலம் கி.பி.825-850 என்பதால் நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு. காஞ்சி, மல்லை (மாமல்லபுரம்), மயிலை( மயிலாப்பூர்) ஆகிய நகரங்கள் குறித்து இந்நூலில் விரிவாகப் போற்றப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

நூல் வரலாறு

நந்திவர்மனிடம் இருந்து அரசைக் கைப்பற்றும் எண்ணத்தில் அவனது தம்பியால் ஒழுங்குசெய்யப்பட்டு அறம் பாடுதல் என்னும் முறையில் இப்பாடல்கள் பாடப்பட்டன. அறம் வைத்துப்பாடிய நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்தி வர்மன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறிகொடுத்து பாடல் முழுவதையும் கேட்க விரும்பினான். நூல் முழுவதையும் கேட்டால் மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழின் மீதுள்ள தனியாத காதலால் உயிரையும் பொருட்படுத்தாது, எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் இறந்தான் என்று கூறப்படுகிறது.

'நந்தி, கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்' - என்னும் சோமேசர் முதுமொழி வெண்பா என்னும் நூலின் வெண்பா வரிகளும், கள்ளாரும் செஞ்சொல் கலம்பகமே கொண்டு, காயம் விட்ட தெள்ளாறை நந்தி -என்னும் தொண்டை மண்டலச் சதகப்பாடல் வரிகளும் இக்கருத்தை சொல்கின்றன. இந்நூலிலும் பல வசைக்குறிப்புகள் இடம் பெறுகின்றன. இது மறுத்துக் கூறப்படுவதும் உண்டு.