under review

அக்னிபுரீஸ்வரர் கோயில்

From Tamil Wiki
Revision as of 07:28, 12 August 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)
அக்னிபுரீஸ்வரர் கோயில் (நன்றி: தரிசனம்)

அக்னிபுரீஸ்வரர் கோயில் வன்னியூரில் தேவாரப் பாடல் பெற்ற தலம். இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.

இடம்

அக்னிபுரீஸ்வரர் கோயில் காவிரியின் கிளை நதியான அரிசிலாற்றின் வடகரையில் உள்ளது. வன்னியூர்(தற்போது அன்னியூர்) மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் இருபத்தியெட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்தும், கும்பகோணம் முதல் காரைக்கால் வரையிலான வழித்தடத்தில் இருபத்தியெட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எஸ்.புதூரில் இருந்து மாற்றுப்பாதையில் ஐந்து கிலோமீட்டர் பயணம் செய்து இக்கோயிலை அடையலாம்.

அக்னிபுரீஸ்வரர் கோயில்

தொன்மம்

  • திருமணத்திற்கு முன்பு பார்வதி தவம் செய்வதற்காக இந்த இடத்திற்கு வந்ததாக நம்பிக்கை உள்ளது. அவளது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் திருவீழிமிழலையில் அவளை மணந்தார்.
  • புராணத்தின் படி, தக்ஷன் மன்னன் நடத்திய யாகத்தில் அக்னி கலந்துகொண்டான். இந்த யாகத்தில், தக்ஷன் வேண்டுமென்றே சிவபெருமானை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான், வீரபத்ரர், பத்ரகாளியிடம் தனது அனுமதியின்றி கலந்துகொண்ட பங்கேற்பாளர்களை தண்டிக்குமாறு அறிவுறுத்தினார். இதில் அக்னி தனது கைகளையும் நாக்குகளையும் இழந்தார். சாபங்களுக்கும் ஆளானார். இந்த சாபங்களினால் அக்னியால் எந்த யாகத்திலும் பங்கேற்க முடியவில்லை. இதனால் பருவமழை பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்டது. அக்னி இத்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து குளம் அமைத்து வன்னி மரத்தின் இலைகளைக் கொண்டு இறைவனை வழிபட்டார். சிவபெருமான் அவரை மன்னித்து, பாவங்களை நீக்கி, இழந்த உடல் உறுப்புகளை மீட்டெடுத்தார் என்று நம்பப்படுகிறது.
  • அக்னி சிவபெருமானிடம் மீண்டும் இங்கேயே தங்கி இங்கு வரும் பக்தர்களுக்கு உஷ்ண நோயிலிருந்து நிவாரணம் பெற வேண்டும் என வேண்டினார். இங்குள்ள இறைவன் "அக்னீஸ்வரர்" என்று அழைக்கப்பட்டார். இந்த இடம் "வன்னி/அக்னி ஊர்" எனப் பெயர் பெற்றது. இது பின்னர் வன்னியூர்/அன்னியூர் என மாறியது.
  • பிரம்மா, அக்னி, அகஸ்தியர், சனத்குமாரர், சனாதனர் ஆகியோர் இங்குள்ள இறைவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.
அக்னிபுரீஸ்வரர் கோயில் ஸ்தலவிருட்சம் வன்னி மரம்

கோவில் பற்றி

  • மூலவர்: அக்னிபுரீஸ்வரர், அக்னீஸ்வரர்
  • அம்பாள்: கௌரி பார்வதி
  • தீர்த்தம்: அக்னி தீர்த்தம்
  • ஸ்தல விருட்சம்: வன்னி மரம்
  • பதிகம்: திருநாவுக்கரசர் பாடல்
  • இருநூற்று எழுபத்தியாறாவது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று
  • அறுபத்தியிரண்டாவது சிவஸ்தலம்
  • சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்

கோவில் அமைப்பு

வெளிப்புற நடைபாதையில், ஸ்தல புராணத்தின் புராணக்கதைகளை சித்தரிக்கும் அப்பர், அக்னி, கௌரி பார்வதி தேவி, சிவலிங்கம், பார்வதி தேவி (பசு வடிவில்) இறைவனையும் ரிஷபாரூடரையும் வழிபடும் சிலைகள் உள்ளன. கருவறையின் நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்களின் சிறிய சிலைகள் உள்ளன. துர்க்கை தேவியின் சன்னதிக்கு அடுத்துள்ள நடைபாதையில் சில முனிவர்களின் சிலைகள் உள்ளன. இக்கோயிலின் ஸ்தல விருக்ஷம் வன்னி மரம். ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள் பழமையானது. கிழக்கு நோக்கிய இக்கோயில் ஒற்றை நடைபாதையையும் அதன் பிரதான கோபுரம் இரண்டு அடுக்குகளையும் கொண்டது. இக்கோயிலில் கொடிமரம் கிடையாது.

சிற்பங்கள்

சிவன், பார்வதி தேவி சன்னதிகள் தவிர, விநாயகர், பாலசுப்பிரமணியர், சிவலிங்கம், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன், சனீஸ்வரர் ஆகியோரின் சன்னதிகள், சிலைகள் மண்டபத்திலும் மாடவீதியிலும் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரின் சிலைகள் உள்ளன.

சிறப்புகள்

  • பார்வதி தேவி இங்கு சிவபெருமானை வணங்கி பின்னர் திருமணம் செய்து கொண்டதால் பக்தர்கள் தங்கள் திருமண திட்டங்களில் உள்ள தடைகள் நீங்கும்படி அம்மனை வேண்டும் வழக்கம் உள்ளது.
  • இக்கோயிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் இரத்த அழுத்தம் மற்றும் உஷ்ணம் நோய் தீரும் என்பது நம்பிக்கை.
  • சூரியனின் கதிர்கள் இக்கோயிலின் சிவபெருமானை ஒவ்வொரு ஆண்டும் ஆவணியின் மூன்று நாட்களில் லிங்கத்தின் மீது செலுத்தி வழிபடுவதாக நம்பிக்கை உள்ளது.
  • அஷ்டதிக் பாலகர்கள் வழிபட்டதாக நம்பப்படும் எட்டு சிவன் கோவில்களில் ஒன்று.

திறந்திருக்கும் நேரம்

  • காலை 8-12
  • மாலை 5-8

விழாக்கள்

  • ஆவணியில் விநாயகர் சதுர்த்தி
  • ஐப்பசியில் அன்னாபிஷேகம்
  • கார்த்திகையில் திரு கார்த்திகை
  • மார்கழியில் திருவாதிரை
  • மாசியில் சிவராத்திரி

உசாத்துணை


✅Finalised Page