பாண்டித்துரைத் தேவர்

From Tamil Wiki
பாண்டித்துரைத் தேவர்

பாண்டித்துரைத் தேவர் (21 மார்ச் 1867 - 2 டிசம்பர் 1911) தமிழறிஞர், நிலக்கிழார். மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் முதல்வர். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில் செந்தமிழ் என்னும் இதழ் வெளியிட்டார்.

பிறப்பு, கல்வி

1862 முதல் 1873 வரை ராமநாதபுரத்தை ஆட்சி செய்த முத்துராமலிங்க சேதுபதி மன்னரின் தமையன் பொன்னுசாமித் தேவருக்கும் முத்து வீராயி நாச்சியாருக்கும் மூன்றாவது மகனாக 1867-ஆம் மார்ச் 21 ல் பிறந்தார். தந்தை இசை அறிஞர். சேதுபதி மன்னரின் அமைச்சராகவும் பணியாற்றினார்.பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டிய தேவர். இளமையில் தந்தையை இழந்தமையால், சேஷாத்திரி ஐயங்கார் என்பவரின் மேற்பார்வையில் வளர்ந்தார். இக்காலகட்டத்தில் அழகர் ராஜா என்ற தமிழ்ப் புலவர் இவருக்குத் தமிழ் ஆசிரியராகவும் வழக்க்குரைஞர் வெங்கடேஸ்வர சாஸ்த்திரி ஆங்கில ஆசிரியராகவும் இருந்தனர். இஇராமநாதபுரத்தில் சிவர்டிஸ் என்ற ஆங்கிலேயாரால் நடத்தப்பட்ட உயர்பள்ளியில் மேல்கல்வி கற்றார்.சேஷாத்திரி ஐயங்காரால் மேற்பார்வை செய்யப்பட்ட தேவரின் சொத்துகள் எல்லாம் இவர் பதினேழு வயதை அடைந்ததும் இவரிடமே அளிக்கப்பட்டன. இச்சொத்துகளில் பாலவநத்தம் ஜமீனும் அடங்கும். இவர் ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மன்னருக்கு அணுக்கமானவராக இருந்தார்.

இலக்கியவாழ்க்கை

பாண்டித்துரைத் தேவர் தமிழிலக்கியச் செயல்பாடுகளுக்கு நிதியளித்தவர், அறிஞர்களை ஆதரித்தவர், இலக்கியச் செயல்பாடுகளை அமைப்புசார்ந்து ஒருங்கிணைத்தவர் என மூன்று வகைகளில் தமிழ்ப்பணி ஆற்றினார்.

பாண்டித்துரைத் தேவர்
புரவலர்

பாண்டித்துரைத் தேவரின் காலகட்டத்தில் அதுவரை தமிழ் இலக்கியத்தையும் கலைகளையும் ஆதரித்த நிலக்கிழார்களும் செல்வந்தர்களும் படிப்படியாக அழிந்துவிட்டிருந்தனர். நூற்றைம்பதாண்டுகால ஆங்கில ஆட்சி அவர்களின் அதிகாரத்தை இல்லாமலாக்கியது. 1770 களிலும் 1870 களிலும் உருவான பெரும் பஞ்சங்கள் பலருடைய செல்வநிலையை அழித்தன. ஊர்கள் அழிந்தன. மக்கள் கூட்டம்கூட்டமாக இடம்பெயர்ந்தனர். விளைவாக மரபான தமிழறிஞர் குடிகள் ஆதர்வின்றி அழிந்தன. அவர்களால் பேணப்பட்ட சுவடிகளும் அழிந்துகொண்டிருந்தன. இக்காலகட்டத்தில்தான் அச்சுமுறை வந்தது. சுவடிகளில் இருந்து நூல்களை அச்சேற்ற வேண்டியிருந்தது. அதற்கு ஆதரவு தர மரபான அரசர், சிற்றரசர்கள் போன்ற அமைப்புகள் இல்லாமலான சூழலில் தனிப்பட்ட கொடையாளிகளை நம்பியே அதைச் செய்யவேண்டியிருந்தது. அவ்வகையில் உரிய தருணத்தில் நிதியளித்த பாண்டித்துரைத் தேவர் தமிழின் முதன்மையான இலக்கியப் புரவலர் என கருதப்படுகிறார்.

  • உ.வே.சாமிநாதையரை இராமநாதபுரம் வரவழைத்துக் கௌரவித்து மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை போன்றவற்றை அச்சிட பொருளுதவி செய்தார்
  • தன் ஆசிரியர் இராமசாமிப்பிள்ளை என்ற ஞானசம்பந்தப்பிள்ளை மூலம் தேவாரத் தலைமுறை பதிப்பையும், சிவஞான சுவாமிகள் பிரபந்தத் திரட்டையும் பதிப்பித்துவெளியிட்டார்.
  • தண்டியலங்காரம் போன்ற சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் அவர்களின் நூல்கள் பதிப்பிக்கும் பொருட்டு தேவர் அவர்கள் உதவி புரிந்திருந்தார்.
  • ஆறுமுக நாவலரின் பதிப்பு முயற்சிகளுக்கு உதவினார்.
  • சிங்காரவேலு முதலியார் சேர்த்து வைத்திருந்த கலைக்களஞ்சிய அகராதிக்கான தகவல்களைத் தொகுத்து ‘அபிதான சிந்தாமணி’ என்ற நூலாக வெளியிட பொருளுதவி செய்தார்.
  • பன்னூற்றிரட்டு, சைவ மஞ்சரி உள்ளிட்ட நூல்களைத் தாமே தொகுத்து வெளியிட்டார்
அமைப்பாளர்

தமிழை வளர்க்கும் பொருட்டு அமைப்பு ஒன்று தேவை என உணர்ந்து மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் எனும் அமைப்பை உருவாக்கினார். 1901-ஆம் ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்டது. சங்கம் சார்பில் செந்தமிழ் என்னும் இதழும் வெளியிடப்பட்டது. ‘செந்தமிழ்க் கலாசாலை’ என்ற தமிழ்க் கல்லூரி, பாண்டியன் நூலகம், தமிழ் ஆய்வு மையம் ஆகியவற்றையும் தொடங்கினார்.

மறைவு

பாண்டித்துரை தேவர், 1911-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் நாள் உயிர் துறந்தார்

நூல்கள்

  • சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து
  • சிவஞான சுவாமிகள் இரட்டை மணிமாலை
  • இராஜ இராஜேஸ்வரி பதிகம்,

உசாத்துணை