க.நா.சுப்ரமணியம்

From Tamil Wiki
Revision as of 21:19, 16 February 2022 by Jeyamohan (talk | contribs)
க.நா.சுப்ரமணியம்

க.நா.சுப்ரமணியம் (கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் ( 31 ஜனவரி 1912 --18 ஜனவரி 1988) நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான சிந்தனைப்போக்கு க.நா.சுப்ரமணியம் மரபு எனப்படுகிறது.

ஐரோப்பிய நவீனத்துவம் மீது ஈடுபாடும் பயிற்சியும் கொண்டிருந்த க.நா.சுப்ரமணியம் தமிழில் சிறுகதை, கவிதை, நாவல் ஆகியவற்றில் நவீனத்துவ அழகியலை கொண்டுவர வாழ்நாளெல்லாம் முயன்றவர். முன்னோடியான நாவல்களை எழுதினார். இலக்கியத்திற்காக வணிக இதழ்களையும் பின்னர் சிற்றிதழ்களையும் நடத்தினார். இலக்கியப் பரிந்துரைகள், பட்டியல்கள் வழியாக ரசனை சார்ந்து இலக்கியப்படைப்புகளை அடையாளம் காட்டினார். தமிழ் இலக்கிய உலகம் கவனிக்கவேண்டிய படைப்புகளை மொழியாக்கம் செய்தார். புதுக்கவிதையின் அழகியல் வடிவத்தை அறிமுகம் செய்தார். தமிழில் ஓர் தனிமனித இயக்கம் போலவே செயல்பட்டார்.

க.நா.சுப்ரமணியத்தின் அழகியல் மரபை தொடர்பவர்கள் என சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் என ஒரு தலைமுறையும் ராஜமார்த்தாண்டன், எம்.வேதசகாயகுமார் என அடுத்த தலைமுறையும் ஜெயமோகன், க.மோகனரங்கன், லக்ஷ்மி மணிவண்ணன் என மூன்றாம் தலைமுறையும், சுனில் கிருஷ்ணன், விஷால்ராஜா என நான்காம் தலைமுறையும் அழகியல்நோக்குள்ள விமர்சகர்கள் தமிழில் செயல்படுகின்றனர். தமிழில் கிட்டத்தட்ட நூறாண்டுகளாக நீடிக்கும் ஓர் இலக்கிய இயக்கம் என க.நா.சுப்ரமணியத்தின் அழகியல் பார்வையை குறிப்பிடமுடியும்.

பிறப்பு, கல்வி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் நாராயணசாமி ஐயருக்கும் 31 ஜனவரி 1912ல் பிறந்தார். தந்தை அஞ்சல்துறை அதிகாரியாக இருந்தார். இளமையிலேயே தாயை இழந்த க.நா.சுப்ரமணியம் தன் தந்தையின் அன்னையின் பராமரிப்பில் வளர்ந்தார். (அந்தப் பாட்டியின் சாயல் கொண்ட கதாபாத்திரம் அவருடைய சர்மாவின் உயில் என்னும் நாவலில் வரும் ‘அக்கா’ என அழைக்கப்படும் பாட்டி ). க.நா.சுப்ரமணியத்தின் தந்தை அவர் ஓர் ஆங்கில எழுத்தாளராக வரவேண்டும் என்னும் கனவு கொண்டிருந்தார். க.நா.சுப்ரமணியம் ஆங்கில ஆசிரியர்களை சத்தம்போட்டு படிக்க தந்தை அதை கேட்டுக்கொண்டிருப்பார் என க.நா.சுப்ரமணியம் பதிவுசெய்திருக்கிறார். க.நா.சுப்ரமணியம் சுவாமிமலை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் பள்ளி இறுதி முடித்து திருச்சியில் பட்டப்படிப்பை நிறைவுசெய்தார்.

உசாத்துணை