லக்ஷ்மி சரவணகுமார்
லக்ஷ்மி சரவணகுமார் ( ) தமிழில் சிறுகதைகளையும், நாவல்களையும், கட்டுரைகளையும் எழுதி வரும் எழுத்தாளர். திரைத்துறையில் உதவி இயக்குநராக, வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறார். விளிம்புநிலை மனிதர்கள் சார்ந்த, பாலியல் சார்ந்த அதன் பின்னணியிலிருக்கும் குரூரங்களையும், வன்முறைகளையும் எழுதியிருக்கிறார்.
பிறப்பு, கல்வி
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சார்ந்தவர். பதினொன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்.
தனி வாழ்க்கை
லக்ஷ்மி சரவணக்குமாரின் தனிவாழ்க்கை கடுமையான சூழல்கள் கொண்டது என அவருடைய இளமைக்கால நண்பராகிய சித்ரன் பதிவுசெய்கிறார். லக்ஷ்மி சரவணக்குமாரின் தந்தை கொலைக்குற்றத்திற்காகச் சிறைக்குச் செல்ல நேர்ந்தமையால் பெற்றோரின் பாதுகாப்பில்லாமல் வாழ்ந்தார் என்று குறிப்பிடுகிறார். கல்கி இதழில் துணையாசிரியராக பணியாற்றினார். பின்னர் திரையுலகத்தில் நுழைந்து உதவி இயக்குநராக பணியாற்றுகிறார்
காட்சியூடகம்
லக்ஷ்மி சரவணக்குமார் திரைப்படங்களில் வசனகர்த்தாவாக பங்களிப்பாற்றினார்.. 'மயான காண்டம்' எனும் குறும்படம் மூலம் பிரபலமானவர். 2015-ல் கென்யாவில் நடைபெரும் 'ஸ்லம் ஃபிலிம் ஃபெஸ்டிவல்' (Slum film festival)-ல் இந்த குறும்படம் திரையிடப்பட்டுள்ளது.
இலக்கியவாழ்க்கை
இலக்கியம்
கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் என்று பல தளங்களில் எழுதி வரும் லக்ஷ்மி சரவணக்குமார் ‘ எழுத்தின் நிழலில் தான் ஆறுதலாக இளைப்பாற முடிந்திருக்கிறது. தனிப்பட்ட வாழ்வு ஒருபோதும் என்னை கசப்புகளிலிருந்து விடுவிக்காது என்றாலும் இன்னும் சில காலங்களுக்கு இந்த வாழ்வைப் பற்றிக்கொள்ள எனக்கு இலக்கியம் போதுமானது’ என்று தன் வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடுகிறார்.
தொடக்கம்
லக்ஷ்மி சரவணக்குமார் தன் 17-வது வயதிலேயே தீக்கதிர், செம்மலர் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.2007 நவம்பர் மாதத்தில் `புதிய காற்று' இதழில் `எஸ்.திருநாவுக்கரசுக்கு 25 வயதான பொழுது' என்ற முதல் சிறுகதை வெளியானது.
சிறுகதைகள்
லக்ஷ்மி சரவணக்குமாரின் முதல் சிறுகதைத் தொகுதி நீலநதி. தொடர்ந்து 6 சிறுகதைத்தொகுதிகள் வெளியாகியுள்ளன.
நாவல்கள்
லக்ஷ்மி சரவணக்குமாரின் உப்புநாய்கள் அவருடைய முதல் நாவல். தொடர்ந்து தென்தமிழகத்தின் வேட்டைப்பின்னணி கொண்ட கானகன், கம்போடிய உள்நாட்டுக்கலவரப் பின்னணி கொண்ட கொமோரா, பாலியல் தொழிலாளர்ப்பெண் ஒருவரின் வாழ்க்கையைச் சொல்லும் ‘நீலப்படம்’ இஸ்லாமிய அழகியல் சாயல்கொண்ட 'ரூஹ்' போன்ற நாவல்களை எழுதினார். மதுரையின் பெருநகர் குற்றப்பின்னணியை சித்தரிக்கும் இரண்டாவது ஆட்டம் ஜூனியர் விகடனில் தொடராக வந்த நாவல்.
விருது
- 2012 . 'உப்பு நாய்கள்' என்ற நாவலுக்காக சுஜாதா நினைவு விருது
- 2016-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் 'யுவ புரஸ்கார்' விருது (கானகன்)
இலக்கிய இடம்
பாலியல் சார்ந்த, அதன் பின்னணியிலிருக்கும் குரூரரங்களையும், வன்முறைகளையும் எழுதி வருபவர். இதுவரை தன் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான பதிவுகளையே தன் நாவலில் எழுதியிருக்கும் இவர், சமூகத்தில் விளிம்புநிலை வாழ்க்கை வாழ்வோரின் கசப்பான பக்கங்களைப் பற்றி பதிவு செய்திருக்கிறார்.
நூல் பட்டியல்
நாவல்கள்
- உப்புநாய்கள்
- கானகன்
- நீலப்படம்
- கொமோரா
- ரூஹ்
- வாக்குமூலம்
- ஐரிஸ்
- ரெண்டாம் ஆட்டம்
சிறுகதை தொகுப்புகள்
- நீல நதி
- யாக்கை
- முதல் கதை
- போர்க்குதிரை
- வசுந்தரா என்னும் நீலவர்ணப் பறவை
- மச்சம்
கவிதைத் தொகுப்பு
- மோக்லியை தொலைத்த சிறுத்தை (2014)
கட்டுரை
- தனித்திருத்தலின் ருசி (கட்டுரை, 2020)
மொழிபெயர்க்கப்பட்ட படைப்பு
- Huntsman (by Aswini Kumar - Zero Degree Publishing)
உசாத்துணை
✅Finalised Page