under review

நசரைக் கலம்பகம்

From Tamil Wiki
Revision as of 20:37, 13 June 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Image Added: Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நசரைக் கலம்பகம் (முகப்பு அட்டை நன்றி: ரோஜா முத்தையா நூலகம்)

நசரைக் கலம்பகம் (1859) கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று.  இயேசு பெருமானைத் தலைவராகக் கொண்டு இயறப்பட்ட இந்த நூலின் ஆசிரியர் புதுவை வித்துவான் சாமிநாதப்பிள்ளை. ஞானதிக்கராயர் காப்பியம்,  சேசு நாதர் பிள்ளைத் தமிழ் போன்றவை சாமிநாதப் பிள்ளை இயற்றிய பிற இலக்கிய நூல்கள்.

பிரசுரம்/வெளியீடு

நசரைக் கலம்பகத்தின் முதல் பதிப்பு பொயு 1859-ல், சென்னையில் அச்சிடப்பட்டது. இதன் அடுத்தடுத்த பதிப்புகள், 1868, 1885-ல் வெளியானது. மறுபதிப்பு, 1925-ல், ஆ. பொன்னுசாமி நாடாரால், தஞ்சை அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.

நோக்கம்

தமிழ் சிற்றிலக்கியங்களில் பல்வேறு காப்பிய நூல்கள் அமைந்த நிலையில், கிறிஸ்தவ மதம் சார்ந்து ஒரு காப்பியம் இயற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் புதுச்சேரியில் வாழ்ந்த சாமிநாதப் பிள்ளை 1868-ல் நசரைக் கலம்பகம் நூலை இயற்றினார். இயேசுநாதரின் வாழ்க்கையை, அவர் செய்த அற்புதங்களை, போதனைகளை மக்களுக்கு அறியத் தருவதையே நூலின் நோகமாகக் கொண்டு சாமிநாதப் பிள்ளை இந்நூலைப் படைத்தார்.

ஆசிரியர் குறிப்பு

பு.வி. சாமிநாதப் பிள்ளை, பொயு 18 ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் வாழ்ந்த தமிழ் வித்துவான். இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றிருந்தார். ஞானதிக்கராயர் காப்பியம்,  சேசுநாதர் பிள்ளைத் தமிழ் போன்றவை சாமிநாதப் பிள்ளை இயற்றிய பிற இலக்கிய நூல்கள்..

சாமிநாதப் பிள்ளை பற்றி மயிலை சீனி வேங்கடசாமி, தனது ‘கிறித்தவமும் தமிழும்’ நூலில், “இவர் புதுச்சேரியிற் பிறந்தவர். சிறுவயதிலேயே தமிழ் கற்றுத் தேர்ந்தவர். வாலிப வயதில் ‘நசரைக் கலம்பகம்,’ ‘சாமிநாதன் பிள்ளைத் தமிழ்’ என்னும் நூல்களை இயற்றினார். இவர் சென்னைக்குச் சென்று அங்கு வாழ்ந்திருந்த போது எல்லிஸ் துரைக்குத் தமிழாசிரியராக அமர்ந்தார். இவர் இயற்றிய  ‘ஞானாதிக்கராயர் காப்பியம்’ இவரின் நூல்களிற் சிறந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நூல் அமைப்பு

நசரைக் கலம்பகம், கிறித்தவப் பிரபந்த இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று. இயேசுநாதர்  தன் முப்பது வயது வரை வாழ்ந்த ஊர் நசரேத்து. நசரேயன் என்று அழைக்கப்பட்ட இயேசுநாதரைத் தலைவராகக் கொண்டு இக்காப்பியம், நசரைக் கலம்பகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. நூலின் தொடக்கமாக கடவுள் வாழ்த்து இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒன்று முதல் நூறு பாடல்கள் பல்வேறு யாப்புகளில் அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்துடன் சேர்த்து மொத்தம் 101 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இதற்கான உரை விளக்கத்தையும் சாமிநாதப் பிள்ளை இயற்றியுள்ளார்.

உள்ளடக்கம்

நசரைக் கலம்பகம் இலக்கிய நயத்துடனும், தொடை நயம், அணி நயம், சொல் நயம் முதலான நயங்களைக் கொண்டும் அமைந்துள்ளது. இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, நசரை நகரத்தின் வளம், நசரை இறைவனின் சிறப்பு, இயேசு செய்த அற்புதங்கள், அவரது போதனைகள் போன்ற செய்திகளைக் கொண்டதாக நசரைக் கலம்பகம் அமைந்துள்ளது.

கலம்பகத்திற்குரிய உறுப்புக்களை இந்நூல் கொண்டுள்ளது. புயவகுப்பு, தவம், கைக்கிளை, காலம், வண்டு, குறம், சமூக உல்லாசம், களியன், தூது, இடைச்சி, சித்து, சம்பிரதம், அம்மானை, பாணன், தழை, மறம், ஊசல், தென்றல், வலைச்சி, மதங்கி, கையுறை கொடுத்தல் எனும் இருபத்தோரு பகுதிகளைக் கொண்டுள்ளது.

உசாத்துணை

  • நசரைக் கலம்பகம்: தமிழ் இணைய மின்னூலகம்
  • தமிழ் இலக்கிய வரலாறு, 9 ஆம் நூற்றாண்டு, மு. அருணாசலம்.
  • 19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், மயிலை சீனி வேங்கட சாமி.
  • கிறித்தவமும் தமிழும், மயிலை சீனி வேங்கட சாமி.

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.