துந்தனம்
துந்தனம் - இசைக்கருவி. (துந்தனா) ஒரு தந்தியை கொண்ட நரம்பிசைக் கருவி. தோல்பாவைக் கூத்தின் ஆரம்ப காலங்களில் இந்த இசைக்கருவியை பயன்படுத்தினர்.
வடிவமைப்பு
துந்தனம் என்ற இசைக்கருவி இரு நிலைகளில் இருந்திருக்கிறது. ஒன்று வெண்கல உலோக வட்டிலில் மெழுகை வைத்து அதில் நாணல்புல் அல்லது ஆம்பல் குழலைப் பொருத்துவர். பின்னர் அதைக் கீழிருந்து மேலாகக் கையால் உருவி விடுவர். கலைஞர் கையால் உருவும் போது ’ம்ம்ம்’ என்ற மென்மையான இசை வெளிவரும். இது சுருதி பெட்டியின் இசை போன்று அமையும். இதுவே ஆரம்பகால துந்தனம்.
பின்னர் ஒரு தகர டப்பா அல்லது மண் சட்டியில் இணக்கப்பட்ட நீண்ட கம்பில் டப்பாவின் நடுவிலிருந்து ஒரு உலோகத் தந்தி எடுத்து இணைத்திருப்பர். கம்பின் மறுமுனையில் அந்த தந்தி இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கும். இது ஒற்றையாழ் தந்தி என்றும் அழைக்கப்பட்டது.
பயன்படுத்திய கலை
முந்தைய காலங்களில் தோல்பாவைக் கூத்தின் பின்னணி இசைக்காக துந்தனம் பயன்படுத்தப்பட்டது. பிற்காலங்களில் துந்தனத்தின் இடத்தை ஹார்மோனியம் பிடித்தது.
வழக்காறு
முன்னாளில் பாடி பிச்சை எடுப்பவர்களும் துந்தனத்தை பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. ஆகவே வழக்காறில் துந்தனா என்பது பிச்சை எடுப்பது என்னும் பொருளில் பயன்படலாயிற்று. (வரவு எட்டணா செலவு பத்தணா. கடைசியில் துந்தனா)
உசாத்துணைகள்
- தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து, அ.கா. பெருமாள், காவ்யா பதிப்பகம் (2015)
- தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் - அ.கா.பெருமாள்
✅Finalised Page