first review completed

ஜாவளி

From Tamil Wiki
Revision as of 18:43, 18 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reinserted template at bottom of article)

ஜாவளி (javali, jhāwli) நாட்டிய இசைக்குப் பயன்படுத்தப்படும் இசை வடிவம். சிருங்கார ரசத்தை மையமாகக் கொண்ட வரிகளைக் கொண்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகழ் பெற்ற இசைவடிவம்.

வரலாறு

நாட்டியத்துக்காக இயற்றப்படும் பதங்களில் கௌரவப் பதங்கள் (அகத்துறை), காமப் பதங்கள் (காமத்துறை) என இருவகை.

தமிழ் இலக்கிய இலக்கண மரபில் தலைவி தன் காதலையும் விரகத்தையும் தோழியிடம் கூட ஓரளவுதான் வெளிப்படுத்துவது போல அமைக்கப்படும். தோழியும், அன்னையரும் அதை உணர்ந்து செயல்படுவார்கள். இதுபோன்ற அகத்துறை சார்ந்த பாடல்கள் கௌரவப் பதங்கள்.

காமப்பதங்கள் முற்றிலும் காமம் சார்ந்தவை, நாயக்க ஆட்சி காலத்தில் தெலுங்கில் பதங்களில் இந்த வகையான கொச்சையான காமப் பாடல்கள் வரத் துவங்கியதும் தமிழிலும் அதன் தாக்கம் தொடங்கியது. இத்தகைய பதங்களில் இருந்து ஜாவளி என்னும் இசை வடிவம் தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[1]

ஜாவளி என்னும் சொல் கன்னடச் சொல்லான ஜாவடி(கவிதை) என்பதிலிருந்து வந்துள்ளது.

அமைப்பு

நாயக - நாயகி - சகி பாவத்தை சிருங்கார ரசம் மேலோங்க வெளிப்படுத்தும் வகையில் வரிகள் கொண்ட பாடல் வகை. காதலினால் உண்டாகும் பொறாமை, விரகம், தனிமை, கைவிடப்படுதல் போன்ற உணர்வுகளே இதன் பாடுபொருள். ஜாவளிகளின் இசை கேட்க விறுவிறுப்பானதாக, சுலபமானதாக மத்திம காலத்தில் அமைந்திருக்கும். பேச்சு வழக்கு மொழியிலேயே அமைந்திருக்கும். தெலுங்கு, கன்னடம், முதலிய மொழிகளில் பல ஜாவளிகள் இயற்றப்பட்டுள்ளன. ஜாவளியானது பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய அங்கங்கள் கொண்டது. .சில ஜாவளிகள் அனுபல்லவி இல்லாமலும் இருக்கின்றன.

சாதாரண ராகங்களிலும் ஜாவளிகள் அமைந்துள்ளன எனினும் தேசிய[2] ராகங்களிலும் ஜாவளிகள் இயற்றப்பட்டிருகின்றன.

ஜாவளிகளை இயற்றியவர்கள்

  • தர்மபுரி சுப்பராயர்
  • பட்டாபிராமைய்யர்
  • பெங்களூர் சந்திரசேகர சாஸ்திரி
  • பட்டணம் சுப்பிரமண்ய அய்யர்
  • இராமநாதபுரம் சிறீனிவாச அய்யங்கார்
  • திருப்பதி நாராயணசாமி
  • ஐதராபாத் வெங்கடகிரியப்பா
  • தஞ்சை சின்னையா
  • பெரியசாமித் தூரன்

அடிக்குறிப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.