செவற்குளம் கந்தசாமிப் புலவர்
To read the article in English: Sevarkulam Kandasami Pulavar.
செவற்குளம் கந்தசாமிப் புலவர் (1849-1922) கர்நாடக இசையில் பல பாடல்களை இயற்றியவர், குரல் வளம் மிக்க பாடகர். அண்ணாமலை ரெட்டியாருக்கு இசை கற்பித்தவர்.
இளமை, கல்வி
தென்காசி மாவட்டம் சங்கரநயினார்கோவில் அருகே உள்ள செவற்குளத்தில் புலவர் மரபில் 1849-ல் பிறந்தார்.
சுப்பராய பாகவதரிடம் இசைப் பயிற்சி பெற்றார்.
இசைப்பணி
கரிவலம்வந்த நல்லூர் பொன்னம்மாள் என்பவருக்கு இசை கற்றுக் கொடுத்தபோது அண்ணாமலை ரெட்டியாரின் நட்பு கிடைத்தது. கந்தசாமிப் புலவரின் இசைத்திறனைப் புகழ்ந்து அண்ணாமலை ரெட்டியார் ஒரு பாடல் பாடினார். இருவரும் கழுகுமலை முருகன் கோவிலுக்கு செல்வதும் அங்குள்ள முருகன் மீது பாடல் பாடுவதும் வழக்கமாக இருந்தது.
கந்தசாமிப் புலவர், அண்ணாமலை ரெட்டியாரை மிகவும் ஊக்குவித்து, இசைப்பயிற்சி அளித்து காவடிச்சிந்து எழுதக் காரணமாக இருந்தவர்.
ஊற்றுமலை ஜமீந்தார் இவரை ஆதரித்தார்.
இவரது பாடலில் ஒன்று:
பல்லவி:
எல்லாம் தெரிந்திருந்தும்
என்மேற் கிருபை செய்யாமல்
இருப்பதென்னமோ தெரியேன் (எல்லாம்)
அனுபல்லவி:
மல்லார் கழுகாசல
வரதகு மரேசனே (எல்லாம்)
சரணம்:
தந்தையும் நீபெற்ற தாயும் நீ குருவும் நீ
சகலமும் நீதானே
கந்தசாமி தாசனைக்
காத்தருள் முருகேசனே (எல்லாம்)
இவர் பாடிய பல பாடல்கள் இப்போது கிடைப்பதில்லை. பல சுவையான தனிப்பாடல்களும் இயற்றியிருக்கிறார்.
மறைவு
1922-ல் சிலகாலம் பாரிச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். திடீரென்று ஒருநாள் பேசும் சக்தி பெற்று பாடல் ஒன்றை இயற்றிவிட்டு, மறுநாள் தான் இறந்துவிடப் போவதாகக் கூறிவிட்டு, அதன்படியே காலமானார்.
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.