அ. நாகநாதபண்டிதர்
அ. நாகநாதபண்டிதர் (1814-1884) ஈழத்து தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
அ. நாகநாதபண்டிதர் இலங்கை யாழ்ப்பாணம் கன்னாகத்தில் சிங்கமாப்பான முதலியார் மரபில் அம்பலவாணப் பிள்ளைக்கு மகனாக 1814-ல் பிறந்தார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளில் புலமை உடையவர். முல்லைத் தீவிலும் கற்பிட்டியிலும் நீதிமன்றப் பேச்சு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
அ. நாகநாதபண்டிதர் வடமொழி நூல்களான 'மானவதரும சாத்திரம்', 'பகவத்கீதை', 'மேகதூதம்' ஆகியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துச் சங்கர பண்டிதர் கற்றுக்கொள்வதற்காகக் கொடுத்தார். இதோபதேசம், சிசுபாலவதம் முதலியவற்றைத் தமிழில் விளக்கிச் சுன்னகம் அ. குமாரசுவாமிப் புலவர் கற்பதற்காகக் கொடுத்தார். சாந்தோக்சியம் முதலாய உபநிடதங்கள் சிலவற்றையும், சாங்கிபத்தையும் தமிழில் மொழிபெயர்த்தளித்தார். இவரால் மொழிபெயர்க்கப்பட்ட 'இதோபதேசம்' சுன்னகம் அ. குமாரசுவாமிப் புலவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. தனிக் கவிதைகள் பல எழுதினார். உதயதாரகைப் பத்திரிகையில் இவருடைய தனிக்கவிதைகள் வெளிவந்தன. ‘இலங்காபிமானி'யிலும் இவர் பல கட்டுரைகள் எழுதினார்.
மறைவு
அ. நாகநாதபண்டிதர் 1884-ல் காலமானார்.
நூல் பட்டியல்
மொழிபெயர்ப்பு
- மானவதரும சாத்திரம்
- பகவத்கீதை
- மேகதூதம்
- இதோபதேசம்
- சிசுபாலவதம்
- சாந்தோக்சியம்
- சாங்கிபம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.