எச்.ஏ.பாப்லி

From Tamil Wiki
Revision as of 16:10, 7 February 2022 by Jeyamohan (talk | contribs)
எச்.ஏ.பாப்லி ஈரோட்டில்

ஹெர்பர்ட் ஆர்தர் பாப்லி (Herbert Arthur Popley) (1878 -1960) தமிழ் ஆய்வாளர். ஈரோடு லண்டன் மிஷன் சொசைட்டியில் பணியாற்றிய கிறிஸ்தவ மதபோதகர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார்.கர்நாடக இசையில் தமிழ்க் கிறிஸ்தவ இசைப்பாடல்களை அமைத்தவர். குன்னூர் ஒய்.எம்.சி.ஏ. செயலாளராக பணியாற்றினார்

வாழ்க்கை

ஹெர்பர்ட் ஆர்தர் பாப்லி 31-அக்டோபர் 1878 ல் இங்கிலாந்தில் ரிச்மாண்ட் என்னும் ஊரில் பிறந்தார். லண்டனில் பாரோஹாக்னி கல்லூரியில் பிஏ பட்டம் பெற்றார். 1890 ல் லண்டன்மிஷன் போதகராக இந்தியாவுக்கு வந்தார். ஈரோடு அருகே காஞ்சிகோயிலில் அமைந்த லண்டன் மிஷன் பங்களாவில் தங்கி மதப்பணி ஆற்றினார். மதப்பணியாற்றிய போதகரின் மகளான லிடியாவை (Lesssie Miilda Bragg) 1908ல் மணம்புரிந்துகொண்டார். 1916 ல் கல்கத்தா சென்ற பாப்லி 1932 வரை கல்கத்தாவில் தேசிய ஒய்.எம்.சி.ஏ ஒருங்கிணைப்பாளராக இருந்தார். 1933 முதல் 1947 வரை மீண்டும் ஈரோடு லண்டன் மிஷன் போதகராகவும் பள்ளி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். ஈரோட்டில் பாப்லி தன் முன்னோடியான ஏ.டபிள்யூ.பிரப் (A.W.Brough)யுடன் இணைந்து 94 பள்ளிகளை நிறுவினார். 1905 ஆகஸ்ட் 12ல் பாப்லி தன் தோழர் பிரப்புடன் இணைந்து லண்டன் மிஷன் சொசைட்டிக்காக ஆங்கிலேய அரசிடமிருந்து 12.66 ஏக்கர் நிலத்தை ரூபாய் கொடுத்து வாங்கினார். அங்கே லண்டன் மிஷன் பள்ளி மற்றும் தலைமையகத்தை நிறுவினார். 1947 முதல் 1960 வரை குன்னூர் கூட்டுறவு அர்பன் வங்கியின் இயக்குநராக பணியாற்றினார்.

எச்.ஏ.பாப்லி குன்னூரில்

இலக்கியப் பங்களிப்பு

தமிழில் ஆர்வம் கொண்டு முறையாக ஆசிரியர்களிடம் தமிழ் கற்றார். கர்நாடக இசையையும் முழுமையாக கற்றார். ஹெரிட்டேஜ் ஆஃப் இந்தியா நூல்வரிசையின் (Heritage of India Series, Calcutta) தொகுப்பாசிரியர் ஜே.என்.ஃபார்குகார் (J. N. Farquhar) கேட்டுக்கொண்டதற்கிணங்க திருக்குறளை செய்யுளில் மொழியாக்கம் செய்து 1931-ஆம் ஆண்டில் ஒய்.எம்.சி.ஏ. பதிப்பகத்தில் The Sacred Kural or The Tamil Veda of Tiruvalluvar. என்னும் தலைப்பில் வெளியிட்டார். 1958-ஆம் ஆண்டு இந்நூலின் திருத்தப்பட்ட இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டது. இதில் 511 குறட்பாக்கள் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. இதில் அறத்துப்பாலிலிருந்து 299 குறள்களும், பொருட்பாலிலிருந்து 190 குறள்களும், இன்பத்துப் பாலிலிருந்து 22 குறள்களும் இதில் இருந்தன. இரண்டாவது பதிப்பு விரிவான அறிமுகப் பகுதியையும், வில்லியம் ஹென்றி ட்ரூ, ஜி. யு. போப், வ. வே. சு. ஐயர், ஆ. சக்கரவர்த்தி ஆகிய மொழிபெயர்ப்பாளர்களை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட விளக்கக் குறிப்புகளையும், குறளின் பல்வேறு ஐரோப்பிய மொழிபெயர்ப்பு நூல்களின் பட்டியலையும் கொண்டதாகும்.கல்கத்தாவின் ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா தொடரில் வெளியிடப்பட்ட ‘தி மியூசிக் ஆஃப் இந்தியா’ என்ற நூல் இன்னொரு பங்களிப்பு

இதழியல்

பாப்லி ஜே.டி.ராஜநாயகம் என்பவருடன் இணைந்து நவீனக்கல்வி என்னும் மாத இதழை கல்விப்பணிக்காக நடத்தினார்*

மறைவு

எச்.ஏ.பாப்லி

பாப்லி 1960 மே 9 அன்று தனது 81 வயதில் குன்னூரில் காலமானார்.

நூல்கள்

உசாத்துணை

  • செ.இராசு, தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள்