விஜயா வேலாயுதம்

From Tamil Wiki
Revision as of 10:00, 25 October 2022 by Jeyamohan (talk | contribs)
விஜயா வேலாயுதம்

விஜயா வேலாயுதம் ( 13 மார்ச் 1941) கோயம்புத்தூரில் இருந்து செயல்படும் விஜயா பதிப்பகம் என்னும் வெளியீட்டு நிறுவனத்தின் நிறுவனர். இலக்கியப்புரவலர். நவீனத் தமிழிலக்கியத்தின் தேர்ந்த வாசகர்களில் ஒருவராக அறியப்படுபவர். தமிழிலக்கிய ஆளுமைகள் பலரின் தோழர்.

பிறப்பு, கல்வி

விஜயா வேலாயுதம் என அழைக்கப்படும் மு.வேலாயுதம் மதுரையை அடுத்த மேலூரில் ம.முத்தையா -சௌந்தர ஆச்சி இணையருக்கு 13 மார்ச் 1941 ல் பிறந்தார் ( பள்ளியில் சேர்க்கையில் 15- ஆகஸ்ட் 1940 என தேதி எழுதப்பட்டது. அது அக்கால வழக்கம்)

மேலூர் சுந்தரேஸ்வர வித்யாசாலா (எஸ்எஸ்வி பள்ளி)யில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.

தனிவாழ்க்கை

விஜயா வேலாயுதம் 1955ல் மணப்பாறையில் ஒரு துணிக்கடையில் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். தன் அண்ணன் தேனப்பன் உதவியுடன் 1957 ல் கோவையில் ஒரு துணிக்கடையில் ஊழியராகச் சேர்ந்தார். 1965-ல நண்பர் சபாபதியுடன் இணைந்து பல்பொருள் விற்பனைக் கடை ஒன்றை தொடங்கி நடத்தினார். 1976-ல `சிதம்பரம் அண்டு கோ’னு தனியாக பல்பொருள் அங்காடியை தொடங்கினார். அதில் நூல்களையும் விற்றவர் பின்னர் பதிப்பாளரும் நூல்விற்பனையாளருமானார்.

வேலாயுதத்தின் துணைவியார் பெரியநாயகி ஆச்சி. (27 அக்டோபர் 2021ல் மறைந்தார்) அவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் மருத்துவர் அரவிந்தன். இரண்டாமவர் சிதம்பரம் விஜயா பதிப்பகத்தை நடத்தி வருகிறார். ஒரே மகள் விஜயா.

பதிப்புப்பணி

விஜயா வேலாயுதம் இளமையிலேயே தீவிரவாசகராக இருந்தார். பலசரக்குக் கடை நடத்தும்போதே நூல்களை விற்பனைசெய்து வந்தார். தீபம், கணையாழி போன்ற இலக்கியச் சிற்றிதழ்களின் முகவராக இருந்தார். நா.பாரத்தசாரதியின் கட்டுரைகளை புதிய பார்வை என்னும் பெயரில் வெளியிட்டார். பின்னர் நா.பார்த்தசாரதியின் தேவதைகளும் சில சொற்களும் என்னும் நூலை 1975ல் நவபாரதி பதிப்பகம் என்னும் பெயரில் வெளியிட்டார். பார்த்தசாரதியின் கவிதைகளை மணிவண்ணன் கவிதைகள் என்னும் பெயரில் வெளியிட்டார்.

வேலாயுதம் தன் மகளுக்கு சுப்ரமணிய பாரதியின் மேல் கொண்ட பற்றினால் விஜயா என பெயரிட்டார். (விஜயா பாரதி நடத்திய இதழ்) அப்பெயரிலேயே 17 அக்டோபர் 1977 ல் கோவையில் விஜயா பதிப்பகம் மற்றும் நூல் விற்பனை நிலையத்தை தொடங்கினார். விஜயா பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட முதல் நூல் மு.மேத்தா எழுதிய கண்ணீர்ப்பூக்கள். 1983-ல் கோவையில் டவுன் ஹால் ராஜ வீதியில் விஜயா பதிப்பகம் என்னும் புத்தகக்கடை தொடங்கப்பட்டது.

அமைப்புப் பணிகள்

விஜயா வேலாயுதம் விஜயா பதிப்பகம் ஆதரவில் 1979ல் உருவாக்கப்பட்ட விஜயா வாசகர்வட்டம் சார்பில் இலக்கியக் கருத்தரங்குகளை ஒருங்கிணைத்துள்ளார். நூலறிமுகக் கூட்டம், சாகித்ய அக்காதமி விருது பெற்ற எழுத்தாளர்களுக்கான பாராட்டுக்கூட்டம் உட்பட கோவையில் எழுத்தாளர்களுக்கான விழாக்களை நாற்பதாண்டுகளாக நடத்தி வருகிறார்.1979-ல விஜயா வாசகர் வட்டம் சார்பில் கோவையில் வாசகர் திருவிழா ஒன்றை நடத்தினார்.

விஜயா இலக்கியவட்டம் சார்பில் பல்வேறு இலக்கியப் புரவலர்களின் உதவியுடன் இலக்கிய விருதுகளை வழங்கி வருகிறார். ஜெயகாந்தன், மீரா, புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன் பெயர்களில் இலக்கிய விருதுகள் 2014 முதல் வழங்கப்படுகின்றன. சிறந்த நூலகருக்கு சக்தி வை கோவிந்தன் பெயரிலும் சிறந்த புத்தக விற்பனையாளருக்கு வானதி திருநாவுக்கரசு பெயரிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

2021 முதல் விஜயா இலக்கியவட்டம் சார்பில் கி.ராஜநாராயணன் பெயரால் ஓர் இலக்கியவிருது உருவாக்கப்பட்டு மூத்த எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். 2022 முதல் கே.எஸ்.சுப்ரமணியம் நினைவாக சிறந்த மொழியாக்கத்திற்கான விருது ஒன்றையும் விஜயா வாசகர்வட்டம் வழங்கி வருகிறது. 2023 முதல் அ.முத்துலிங்கம் பெயரில் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்பவர்களுக்கான விருது ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

எழுத்து

விஜயா வேலாயுதம் தான் பழகிய எழுத்தாளர்கள் பற்றி அமுதசுரபி இதழில் ஒரு தொடர் எழுதினார். அது இதயம் தொட்ட இலக்கியவாதிகள் என்ற பெயரில் நூலாகியது.

நூல்கள்

  • இதயம் தொட்ட இலக்கியவாதிகள்-

உசாத்துணை

விஜயா வேலாயுதம் முத்துவிழா மலர் வெளியீடு

வாசிப்பை நேசிக்கும் மு.வேலாயுதம்!-ஹிந்து

விஜயா பதிப்பகம் முகநூல் பக்கம்

விஜயாவேலாயுதம் பேட்டி மண்குதிரை

மு.வேலாயுதத்தின் இதயம் தொட்ட இலக்கியவாதிகள்- பாவண்ணன்

சுஜாதா பற்றி வேலாயுதம். காணொளி

விஜயா வேலாயுதம் சந்திப்பு கட்டுரை