under review

நல்லாப்பிள்ளை பாரதம்

From Tamil Wiki
Revision as of 15:54, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)

To read the article in English: Nallapillai Bharatham. ‎

நல்லாப்பிள்ளை பாரதம் ஓலைச்சுவடி
நல்லாப்பிள்ளை பாரதம் ஓலைச்சுவடி
நல்லாப்பிள்ளை பாரதம் ஓலைச்சுவடி
நல்லாப்பிள்ளை பாரதம் ஓலைச்சுவடி

நல்லாப்பிள்ளை பாரதம் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நல்லாப்பிள்ளையால் இயற்றப்பட்ட தமிழ் வைணவக் காப்பியங்களுள் ஒன்று.

பதிப்பு

நல்லாப்பிள்ளை பாரதத்தின் முதல் பதிப்பு 1888-ம் ஆண்டு சாமிநாதய்யர் என்பவரால் வெளியிடப்பட்டது. 1911-ல் சுந்தரநாதபிள்ளை என்பவர் இரண்டாம் பதிப்பை வெளியிட்டிருக்கிறார்.[1]

2007-ல் பேராசிரியர் இரா. சீனிவாசன் பதிப்பித்துள்ளார்.[2]

ஆசிரியர்

இந்நூலின் ஆசிரியர் நல்லாப்பிள்ளை சென்னைக்கு அருகே உள்ள கவரப்பேட்டை என்னும் ஊருக்கு அருகே முதலம்பேடு என்னும் சிற்றூரில் பிறந்தவர். கருணீகர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது தமிழ்ப் பணியை ஆதரித்தவர் செங்காடு வீரராகவ ரெட்டியார்.

உருவாக்கம்

தமிழில் சங்ககாலம் தொட்டே மகாபாரதக் குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. புறநானூற்றிலும் பாரதக் குறிப்புகள் வருகின்றன. சங்கப்பாடல்களுக்கு பாயிரம் எழுதிய புலவர் 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' என்று அழைக்கப்பட்டார். அவர் எழுதிய பாரதம் இன்று கிடைக்கவில்லை. சின்னமனூர் செப்பேடு பாண்டியர்கள் மதுராபுரிச் சங்கம் வைத்து மகாபாரதத்தை தமிழ்ப்படுத்தியதாகச் சொல்கிறது. அதுவும் கிடைப்பதில்லை.[3] பதினைந்தாம் நூற்றாண்டில் வில்லிபுத்தூரார் வில்லிபாரதம் இயற்றினார்.

பதினெட்டாம் நூற்றாண்டில் பாரதத்தை கற்பதும் சொற்பொழிவு செய்வதும் தமிழகத்தில் புகழ் பெற்றது. வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதம் அதற்கு மிகவும் பயன்பட்டது. ஆனால் வில்லிபாரதம் வியாச பாரதம் போல விரிவாக இல்லாமல் சுருக்கமாக இருந்தது. 18 பருவங்களில் 10 பருவங்களே எழுதப்பட்டிருந்தது.

மகாபாரதம் முழுவதையும் தமிழில் பாட எண்ணிய நல்லாப்பிள்ளை மூலநூலாகிய வியாச பாரதத்தில் உள்ளவாறே பதினெட்டு பருவங்களையும் 132 சருக்கங்களில் 14000 பாடல்களால் பாடியிருக்கிறார். இந்நூல் உருவாக்கத்தில் முருகப்ப உபாத்தியாயரும் இணைந்து பணியாற்றியுள்ளார்.[4] இது நல்லாப்பிள்ளை பாரதம் என்றழைக்கப்படுகிறது.

வில்லிபாரதத்தில் உள்ள பாடல்களில் பெரும்பாலானவற்றை தனது நூலில் அப்படியே எடுத்தாண்டும் இருக்கிறார். வில்லிபுத்தூரார் பாடாமல் விட்ட பாரதக் கதைப்பகுதிகள் முழுவதையும் பாடியுள்ளார். வில்லிபாரதத்தில் சுருக்கமாக இடம்பெற்றுள்ள பகுதிகளையும் விவரித்துப் பாடியுள்ளார். எனவே நல்லாப்பிள்ளை பாரதம் என்று சொல்லப்படுவதில் வில்லிபாரதத்தின் நாலாயிரத்து முந்நூறு செய்யுள்களும் அடக்கம். மகாபாரத்தை முழுமையாக இயற்றிய பிறகு வீர ராகவ ரெட்டியாருடன் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் சென்று இதை அரங்கேற்றம் செய்ததாக இவர் பாடிய செய்யுள்களில் குறிப்பு இருக்கிறது.

நல்லாப்பிள்ளை பாரதத்தின் மூலச்சுவடி தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உள்ளது. இன்றும் பாரதக் கதை பிரசங்கமாக நிகழ்த்தப்படும் இடங்களில் நல்லாப்பிள்ளை பாரதம் பாடப்படுகிறது.[5]

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:40 IST