என் பெயர் ராமசேஷன்
என் பெயர் ராமசேஷன் ( ) ஆதவன் எழுதிய நாவல். தமிழின் வயதடைவு நாவல்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. ராமசேஷன் என்னும் இளைஞன் பல்வேறு அனுபவங்கள், பாவனைகள் வழியாக தன் முதிரா இளமையை கடப்பதன் சித்திரத்தை அளிக்கிறது
எழுத்து, வெளியீடு
என் பெயர் ராமசேஷன் 1978 ல் கணையாழி இதழில் தொடராக வெளியிடப்பட்டு 1980 ல் நர்மதா பதிப்பகத்தால் நூல்வடிவில் கொண்டுவரப்பட்டது.
கதைச்சுருக்கம்
ராமசேஷன் என்னும் பிராமண இளைஞன் தன் கதையை தானே சொல்வதாக அமைந்த நாவல் இது. ராமசேஷன் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தவன். தன் தந்தை உருவாக்கிய கட்டுப்பெட்டித்தனமான வாழ்க்கையை வெறுத்து பலவகையான மீறல்கள் வழியாக தன் ஆளுமையை கண்டைய முயல்கிறான். பிரேமா, மாலா போன்ற பெண்களுடனான அவன் உறவும் அத்தகைய மீறல் முயற்சியே. இறுதியில் மீறல்களின் எல்லைகளை உணர்ந்து தன் தந்தையைப்போலவே ஒரு நடுத்தரவர்க்க வாழ்க்கையில் தானும் அமைகிறான்.
இலக்கிய இடம்
என் பெயர் ராமசேஷன் எழுபது எண்பதுகளில் வாழ்ந்த இளைஞர்களின் அடையாளக்குழப்பம், அவர்கள் சிக்கிக்கொண்டிருக்கும் உலகின் இயந்திரத்தன்மை ஆகியவற்றைச் சித்தரிக்கும் நாவல். ஃப்ராய்டிய உளப்பகுப்பு நோக்கும், இருத்தலியல் பார்வையும் கொண்டது. பகடியுடன் ராமசேஷனின் வாழ்க்கையைச் சித்தரிப்பது. அடிப்படை வினாக்களோ, கவித்துவ நீட்சியோ, ஆழ்ந்த அகமோதல்களோ இல்லாதது இந்நாவல். வாசக இடைவெளிக்கும் இடமில்லாமல் அனைத்தையுமே கதைமாந்தரே பேசிவிடும் தன்மை கொண்டது. ஆயினும் நுணுக்கமான உளநகர்வுகளையும் பாவனைகளையும் சித்தரிப்பதனால் முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது.