under review

நலங்கிள்ளி

From Tamil Wiki
Revision as of 11:58, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)

நலங்கிள்ளி சங்க காலப் புலவர், சோழ அரசர். அவரது இரு பாடல்கள் புறநானூற்றில் இடம் பெறுகின்றன.

வாழ்க்கைக் குறிப்பு

நலங்கிள்ளி முற்காலச் சோழர்களுள் ஒருவர். புகார் நகரைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தார். நெடுங்கிள்ளி என்ற முற்காலச் சோழ அரசருடன் அதிகாரப் போட்டி இருந்ததாக சங்கப் பாடல்களிலிருந்து அறியவருகிறது.

இலக்கிய வாழ்க்கை

புறநானூற்றில் பதினான்குக்கும் மேற்பட்ட பாடல்களில் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடினர். இவற்றில் அதிக பாடல்களை கோவூர்கிழார் பாடினார். உறையூர் முதுகண்ணன் சாத்தனார், ஆலத்தூர்கிழார் ஆகிய புலவர்களும் நலங்கிள்ளியைப் பாடினர். புறநானூற்றில் 73, 75-வது பாடல்கள் நலங்கிள்ளி பாடியவை.

நலங்கிள்ளி பற்றிய பாடல்கள்

  • புறநானூறு 33
  • புறநானூறு 68
  • புறநானூறு 225
  • புறநானூறு 400
  • புறநானூறு 382

பிற புலவர் பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • நலங்கிள்ளியின் கொடைப்பண்பையும், வீரத்தையும் புலவர்கள் பாடினர்.
  • சோழ நாட்டில் நடைபெற்ற உள் நாட்டுப் போர் பற்றிய செய்திகள் உள்ளன.
  • நெடுங்கிள்ளியின் ஊரிலிருந்து வந்த இளந்தத்தன் என்ற புலவனை தன் பகைவன் ஊரிலிருந்து வந்தவன் என்பதால் கொல்ல முற்பட்ட செய்தியை கோவூர்க்கிழார் தன் பாடலில் பாடினார்.
  • நெடுங்கிள்ளி ஆவூர்க்கோட்டையில் உள்ளான் என்பதையறிந்த போது அதனை முற்றுகையிட்டார் என்றும் அங்கிருந்து தப்பி உறையூர்க்கோட்டையில் ஒளிந்து கொண்டபோது விடாது அதனை முற்றுகையிட்ட செய்தியும் புலவர்களின் பாடல் வழி அறியலாம்.
  • ’பிறன்கடை மறப்ப நல்குவன்’ (புறநானூறு 48)
  • ’தன் பகைக் கடிதலன்றி, சேர்ந்தோர் பசிப்பகை கடிதலும் அல்லன்’

பாடல் நடை

  • புறநானூறு 73

மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி,
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என்
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழைதின் யானைக் கால் அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச், சென்று அவண்
வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!

  • புறநானூறு: 75

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக்
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே!
மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல நன்றும்
நொய்தால் அம்ம தானே; மையற்று
விசும்புஉற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே,

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Sep-2023, 06:46:48 IST