சுவாமி கமலாத்மானந்தர்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
சுவாமி கமலாத்மானந்தர் (ஜூன் 30, 1948) துறவி, ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர். இவர் மகாகவி பாரதியாரையும் சுவாமி விவேகானந்தரையும் இணைத்து ஆய்வு செய்து மொத்தம் 1500 பக்கங்களில் நான்கு பெரும் தொகுப்புகளாக வெளியிட்டுள்ளார். 38 நூல்களை எழுதியுள்ளார். இவர் சிறார்களுக்காக ஆன்மிகம், நீதி ஆகியன சார்ந்து எழுதிய கதைகள் இதுவரை 35தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. தொடக்க காலத்தில் இவர் சத்தியகாமன், விவேகானந்ததாசன் ஆகிய புனைப்பெயர்களிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
பிறப்பு, கல்வி
சுவாமி கமலாத்மானந்தர் ஜூன் 30, 1948இல் காட்பாடியில் பிறந்து, அரக்கோணத்தில் வளர்ந்தவர். இவருடைய தாயார் பெயர் சங்கரி அம்மாள். தந்தையார் பெயர் சி. வடிவேல். 1948-ஆம் ஆண்டு இவரது குடும்பம் அரக்கோணம் வந்துவிட்டது. அரக்கோணத்தில் இவர் எஸ்.எஸ்.எஸ்-சி. வரை கல்வி பயின்றார்.
தனிவாழ்க்கை
சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில், ஆகஸ்ட் 8, 1968இல் சிரவண பூர்ணிமா நாளன்று பிரம்மச்சாரியாகச் சேர்ந்தார். ஸ்ரீமத் சுவாமி கைலாசானந்தஜி மகராஜ் இவருக்கு ‘தயாள்’ என்று பெயர் வைத்தார். 1969இல் ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜிடம் பிரம்மச்சாரி தயாள் மந்திரதீட்சை பெற்றார்.
இவர் அரக்கோணத்தில் 1970இல் ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா சங்கத்தை ஆரம்பித்தார். இந்தச் சேவா சங்கம் 2020இல் பொன்விழாவைக் கொண்டாடியது. பிரம்மச்சாரி தயாள் 1974-1975 ஆகிய ஆண்டுகளில் பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலுள்ள பிரம்மச்சாரிகளுக்குரிய Training Center இல் பயிற்சி பெற்றார்.
இவர் மார்ச் 3, 1976இல் ஸ்ரீராமகிருஷ்ண ஜயந்தியன்று பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். அப்போது, இவருக்கு ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜ் அவர்களால், ‘பிரம்மச்சாரி நிரஞ்ஜன சைதன்யா’ என்ற பெயர் வழங்கப்பட்டது.
பிப்ரவரி 28,1979இல் பகவான் ஸ்ரீராமகிருஷ்ண ஜயந்தியன்று இவருக்கு ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜ் சந்நியாச தீட்சை வழங்கினார். அப்போது இவருக்கு ‘சுவாமி கமலாத்மானந்தர்’ என்ற பெயர் வழங்கப்பட்டது.
இவர் செப்டம்பர் 1, 2000இல் மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
பொது வாழ்க்கை
இவருக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் இருவரும் இவருக்கு நெருங்கிய நண்பர்கள். எழுத்தாளர்கள் கொத்தமங்கலம் சுப்பு, பி.ஸ்ரீ.ஸ்ரீ., அகிலன், சாண்டில்யன், தமிழ்வாணன், கவிஞர் வாலி, கல்கி ரா. கணபதி, கலைமகள் கா.ஸ்ரீ.ஸ்ரீ., கலைமகள் கி.வா. ஜகந்நாதன், கல்கி சதாசிவம், திருமுருக கிருபானந்தவாரியார், நா. பார்த்தசாரதி, ஆர்.வி., சீனி. விசுவஸ்நாதன் (மகாகவி பாரதியார் பற்றிய நூல்கள் எழுதியவர்) ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. இவருக்குப் பத்திரிகையாளர்களான ‘தினமணி’ ஏ.என். சிவராமன், ‘தினந்தந்தி’ பா. சிவந்தி ஆதித்தன், துக்ளக் சோ. ராமசாமி, துக்ளக் எஸ். குருமூர்த்தி ஆகியோர்களுடன் நல்ல தொடர்பு இருந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கம் தொடர்புடைய எழுத்தாளர் பெ.சு.மணி எழுதிய ஏழு நூல்களுக்கு இவர் அணிந்துரை எழுதியிருக்கிறார்.
இவரை ஜனவரி 1977இல் ‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ பத்திரிகையின் ஆசிரியராக ஸ்ரீமத் சுவாமி தபஸ்யானந்தஜி மகராஜ் நியமித்தார். இவர் டிசம்பர் 2000 வரை (24 ஆண்டுகள் ) அந்தப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இவர் பிரம்மச்சாரியாகச் சேர்ந்தது முதல், ஏதேனும் ஒரு விதத்தில் சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிடும் புத்தகம் வெளியிட்டுத் துறையில் தொடர்பு கொண்டிருந்தார்.
சுவாமி தன்மயானந்தர் ‘ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்’ மூன்று தொகுதிகளை தமிழில் மொழிபெயர்த்தார். அந்த மொழிபெயர்ப்புப் பணிக்கு இவரும் உதவியாளர்களில் ஒருவராக இருந்தார்.
சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சுமார் 20 ஆண்டுகள் இவர் வாரம் ஒரு முறை ஆன்மிக வகுப்புகள் எடுத்திருக்கிறார். 1979-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு முடிய அந்தர்யோகங்கள் உட்பட சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற எல்லா முக்கிய நிகழ்ச்சிகளிலும் இவரின் சொற்பொழிவுகள் இடம் பெற்றன. தமிழ்நாட்டின் பல பாகங்களில் ஸ்ரீராமகிருஷ்ணர் - விவேகானந்தர் பெயரால் இயங்கி வரும் அமைப்புகள் பலவற்றிலும் பொதுநிகழ்ச்சிகளிலும் இவர் சொற்பொழிவாற்றினார். 1985-ஆம் ஆண்டு இவர் ஸ்ரீமத் சுவாமி தபஸ்யானந்தஜி மகராஜுடன் அந்தமான் சென்று பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.
மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலும், மதுரையிலும், மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களுக்கும் சென்று இவர் சொற்பொழிவுகள் செய்து வருகிறார். மதுரை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள், மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் ஆகியவர்களுக்கு இவர் இளைஞர் முகாம்கள் நடத்தி வருகிறார். இந்த முகாம்களில் Self improvement, Positive Thinking & Personality Developments பற்றிய கருத்துக்கள் வழங்கப்படுகின்றன.
2001 முதல் 2013 டிசம்பர் வரை மதுரை, ஸ்ரீ சாரதாவித்யாலயா நர்சரி பள்ளி மாணவ - மாணவிகளுக்கு காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை சிறுவர்-சிறுமிகளுக்கு இதிகாசக் கதைகள், புராணக் கதைகள் போன்ற இந்து மதம் சார்ந்த கதைகளைக் கூறினார்.
மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ஏழை மாணவ - மாணவிகளுக்கு இலவசக் கல்வி போதனை வகுப்புகள் நடத்தி வருகிறது. இந்த மாணவ - மாணவிகளுக்கு இவர் ஜனவரி 2002 முதல் டிசம்பர் 2016 டிசம்பர் வரை இரவு 7.15 மணி முதல் 8.00 மணி வரை இதிகாசக் கதைகள், புராணக் கதைகள் போன்ற இந்து மதம் சார்ந்த கதைகளை கூறினார்.
தமிழ்நாட்டில் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதாதேவியார், சுவாமி விவேகானந்தர் பெயரில் இயங்கி வரும் பல அமைப்புகளை ஒன்றிணைத்து, ‘ஸ்ரீ ராமகிருஷ்ண - விவேகானந்தர் பாவ பிரச்சார் பரிஷத்’ என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் நவம்பர் 7, 2009 முதல் மார்ச் 31, 2011 வரை துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தார். அதன்பின்னர் ஏப்ரல் 1, 2011 முதல் மே 31, 2016 வரை தலைவராகப் பொறுப்பேற்றார்.
2007இல் முதல் மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு தேசிய இளைஞர் தினம் கட்டுரைப் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்தப் போட்டிகள் 2019இல் வரை நடைபெற்றன. இந்தக் கட்டுரைப் போட்டிகளில் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 10,000 மாணாக்கர் கலந்துகொண்டனர்.
மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் மே 20, 2010இல் மாணவ - மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
கோயமுத்தூர், பெரியநாயக்கன் பாளையத்தில், ‘ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா’ என்ற கல்வி நிறுவனத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் மூன்று நாட்கள் பக்தர்களுக்காக அந்தர்யோகம் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் கடந்த 17 ஆண்டுகளாக இவர் சொற்பொழிவுகள் செய்துள்ளார்.
மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.45 முதல் 6.30 மணி வரை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெறுவது வழக்கம். இதில் இவர், ‘ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்’ என்ற தலைப்பில் 2002-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2009-ஆம் ஆண்டு டிசம்பர் முடிய சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும், ‘தமிழ்நாடு, ஸ்ரீ ராமகிருஷ்ண - சுவாமி விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு’ நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் இது வரை 29 பக்தர்கள் மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. இதில் 25 பக்தர்கள் மாநாட்டில் இவர் கலந்துகொண்டு சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் - சுவாமி விவேகானந்தர் பக்தர்கள் மாநாட்டை இவர் 2010-ஆம் ஆண்டு மதுரையில் நடத்தினார். இதில் தமிழ்நாட்டின் பல பாகங்களிலிருந்து சுமார் 10,000 பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள். 2010-ஆம் ஆண்டு பக்தர்கள் மாநாட்டில் இவர் ‘மீனாட்சி மலர்’ என்ற சிறப்பு மலரை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து 2011-அருப்புக்கோட்டை, 2012-திருநெல்வேலி, 2013-பொள்ளாச்சி, 2014-திருவண்ணாமலை, 2016 - பெரம்பலூர் ஆகிய இடங்களில் மாநாடு நடத்துவதற்கு இவர் மிகவும் உறுதுணையாக இருந்தார். 2014-ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ‘அண்ணாமலையார் மலர்’ என்ற சிறப்பு மலரை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஜயந்தி விழா 2013-ஆம் ஆண்டு விமரிசையாக நடைபெற்றது. அப்போது இவர் தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களுக்குச் சென்று சிறப்பு சொற்பொழிவுகள் நிகழ்தினார். இந்த விழாவின்போது, இவரது முயற்சியால் தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தரின் 7 அடி உயரமுள்ள சிலைகள் 78 இடங்களில் வைக்கப்பட்டன. இவற்றில் 17 வெண்கலச் சிலைகளும், 61 பைபர் சிலைகளும் அடக்கம். சுவாமி விவேகானந்தரின் இரண்டரை அடி அளவுள்ள மார்பளவு சிலைகள் 100 இடங்களிலும், ஒன்றே கால் அடியில் இருக்கும் சுவாமி விவேகானந்தர் சிலைகள் 386 இடங்களிலும் வைக்கப்பட்டிருக்கின்றன. மதுரை மடத்தில் டிசம்பர் 22, 2009இல் சுவாமி விவேகானந்தரின் 12 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து மதுரையில் 1. மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளி, 2. கே.எல்.என்.பாலிடெக்னிக் கல்லூரி, 3. கே.எல்.என்.பொறியியல் கல்லூரி, 4. மங்கையர்க்கரசி கலை அறிவியில் கல்லூரி, 5. சமூக அறிவியில் கல்லூரி, 6. ஸ்ரீ ராமகிருஷ்ண சமாஜம் ஆகிய இடங்களில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலைகள் நிறுவப்பட்டன.
இவர் காசிக்கு 13 முறையும் அயோத்திக்கு இரண்டு முறையும் யாத்திரை சென்றிருக்கிறார். 2017இல் பிருந்தாவனத்திற்கு யாத்திரை சென்றார். ஜூலை 2000 இல் இவர் அமர்நாத் யாத்திரை சென்று வந்தார்.
இலக்கிய வாழ்க்கை
இலங்கை அரசின் அழைப்பின் பேரில் 1996இல் ஸ்ரீலங்கா சென்று சொற்பொழிவாற்றினார். அது பற்றிய பயணக் கட்டுரையை இவர் ‘இலங்கையில் கண்டதும் கேட்டதும்’ என்ற தலைப்பில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் பத்திரிக்கையில் தொடர் கட்டுரையாக எழுதினார்.
1998இல் இவர் 20 பக்தர்களுடன் கைலாஸ் - மானசரோவர் யாத்திரை மேற்கொண்டார். அது பற்றிய தொடர் கட்டுரைகள் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கையில் ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் வெளிவந்தன.
இவர் தயாரித்த ‘கைலாஷ் - மானசரோவர் யாத்திரை’ என்ற மூன்று மணிநேர வீடியோ கேசட்டை சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டது. இது வரையில் இந்த வீடியோ கேசட்டுகள் 5000-க்கும் சற்று மிகுதியாக விற்பனையாகின.
‘கைலாஸ் மானசரோவர் யாத்திரை’ என்ற தலைப்பில் இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு மணி நேரம் குறுந்தட்டை வெளியிட்டார்.
இது வரையில் சுதேசமித்திரன், விஜயபாரதம், தினமலர், தினமணி, தர்ம சக்கரம், ஸ்ரீ ராமகிருஷ்ண ஆனந்தம், குமுதம் பக்தி ஸ்பெஷல், ஓம் சக்தி, அமுதசுரபி உட்பட பல பத்திரிகைகளில் இவர் எழுதிய பல கட்டுரைகள் வெளி வந்துள்ளன.
1970இல் இருந்து இவர் சென்னை அகில இந்திய வானொலியில் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார். இது வரையில் சென்னை வானொலி நிலையம், மதுரை வானொலி நிலையம் ஆகியவற்றில் இவர் சுமார் 225 சிற்றுரைகளை நிகழ்த்தினார்.
சென்னை தொலைக்காட்சி, சன் டி.வி, ஜெயா டி.வி, ராஜ் டி.வி, விஜய் டி.வி. ஆகியவற்றில் இவரது ஆன்மிகச் சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் பல இடம் பெற்றன.
திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் சார்பாகத் ‘தர்மசக்கரம்’ என்ற ஆன்மிக மாதஇதழ் வெளிவருகிறது. இதில் 2012 முதல் முதல், ‘ஒவ்வொரு மாதமும் ஒரு கதை’ என்று தொடர்ந்து இவர் எழுதிய ஆன்மிகம் சார்ந்த கதை வெளிவருகிறது.
‘தினமணி’ நாளிதழ் வெள்ளிக்கிழமை தோறும் ‘வெள்ளிமணி’ என்ற ஆன்மிகச் சிறப்பிதழை வெளியிட்டு வருகிறது. அதில் பிப்ரவரி 10, 2017 முதல் இவர் தொகுத்த பொன்மொழிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் முதல் ஆயிரம் மட்டும் 2022இல் ‘மகான்களின் பொன்மொழிகள் - 1000 (பாகம் - 01) என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளன.
‘குமுதம்’ குழுமம் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ என்ற பத்திரிகையை வெளியிட்டு வருகிறது. அதில் இவர் கடந்த ஆகஸ்ட் 2020 முதல் மாதம் இருமுறை இன்று வரை தொடர்ச்சியாக பக்திக் கதைகள் என்ற தலைப்பில் கதைகள் எழுதி வருகிறார். இது தவிரவும் இவர் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ இதழில் பல ஆன்மிக கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
இவர் தன்னுடைய பிருந்தாவனத்திற்கு யாத்திரை அனுபவங்களை ‘பிருந்தாவனத்திற்கு யாத்திரை’ என்ற பெயரில் 2018இல் புத்தகமாக எழுதி, வெளியிட்டார்.
இவர் சிறார்களுக்காக ஆன்மிகம், நீதி ஆகியன சார்ந்து எழுதிய கதைகள் இதுவரை 35தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.
இலக்கிய இடம்
சுவாமி கமலாத்மானந்தர் தமிழ் மொழி, தமிழ் இலக்கியப் பற்றாளர். சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார் ஆகியோரை ஆழ்ந்து கற்று, அவர்களின் பொதுவாழ்க்கையை ஆய்வு செய்தவர். அவற்றை இவர், ‘சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை’ என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளாக எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் ஒரு முன்னோடி ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது. தகவல்களைச் சேகரிப்பது, தொகுப்பது, அவற்றின் உள்ளார்ந்த கருத்துகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் சமூகநிலையைப் புரிந்துகொள்வது எப்படி என்பதனை இளம் ஆய்வாளர்கள் அறிந்துகொள்ளவதற்கு இந்த நூல் உதவும். ஆன்மிகம் சார்ந்த உயர்ந்த கருத்துகளை எளிய தமிழில் இளந்தலைமுறையினருக்குத் தன் பேச்சாலும் எழுத்தாளும் கொண்டுசேர்த்தவர் என்ற முறையில் இவர் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
நூல்கள்
1 | விவேகானந்தரின் அறிவுரைகள் | செப்டம்பர் 1980 |
2 | அருள் நெறிக் கதைகள் | மார்ச் 1981 |
3 | புதிய இந்தியாவைப் படைப்போம் | செப்டம்பர் 1981 |
4 | பக்திக் கதைகள் | ஏப்ரல் 1982 |
5 | ஆன்மீகக் கதைகள் | ஏப்ரல் 1982 |
6 | ஸ்ரீராமரின் தர்ம முரசு | நவம்பர் 1985 |
7 | வீர இளைஞர்களுக்கு - சுவாமி விவேகானந்தர் | ஜனவரி 1988 |
8 | தெய்வீகக் கதைகள் | ஆகஸ்ட் 1989 |
9 | ஸ்ரீ ராமகிருஷ்ணரின் கதை | மார்ச் 2003 |
10 | கைலாஷ் - மானசரோவர் யாத்திரை | மார்ச் 2003 |
11 | கைலாஷ்-மானசரோவர் யாத்திரை-சி.டி | மார்ச் 2003 |
12 | அன்னை ஸ்ரீ சாரதாதேவியாரின் கதை | செப்டம்பர் 2003 |
13 | அன்னை ஸ்ரீ சாரதாதேவியாரின் 125-அறிவுரைகள் | டிசம்பர் 2003 |
14 | ஆன்மிக வினா - விடை - பாகம் 1 | செப்டம்பர் 2004 |
15 | ஆன்மிக வினா - விடை - பாகம் 2 | நவம்பர் 2004 |
16 | ஆன்மிக வினா - விடை - பாகம் 3 | பிப்ரவரி 2005 |
17 | ஆன்மிக வினா - விடை - பாகம் 4 | மே 2005 |
18 | திருவிளக்கு பூஜை | செப்டம்பர் 2009 |
19 | ஆன்மிக வினா - விடை - பாகம் 5 | ஜூலை 2011 |
20 | இளைஞர்களின் சிந்தனைக்கு... | ஜனவரி 2011 |
21 | இளைஞர்களின் எழுச்சிக்கு விவேகானந்தரின் 150 அறிவுரைகள் | மே 2013 |
22 | சுவாமி விவேகானந்தர் 108 போற்றி | செப்டம்பர் 2013 |
23 | சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை- பாகம் 1 | செப்டம்பர் 2014 |
24 | தெய்வபக்திக் கதைகள் 24 | ஜூலை 2016 |
25 | நாமஜப மகிமை | ஜூலை 2016 |
26 | சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை- பாகம் 2 | செப்டம்பர் 2016 |
27 | ஒழுக்கநெறிக் கதைகள் 25 | டிசம்பர் 2016 |
28 | சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை- பாகம் 3 | செப்டம்பர் 2017 |
29 | இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் | ஜனவரி 2017 |
30 | நீதிக் கதைகள் 31 | மார்ச் 2017 |
31 | நமது சுவாமி விவேகானந்தர் | ஜனவரி 2018 |
32 | நீதிக் கதைகள் 32 | ஜனவரி 2018 |
33 | நீதிக் கதைகள் 33 | ஜூலை 2018 |
34 | பிருந்தாவன் யாத்திரை | ஜூலை 2018 |
35 | நீதிக் கதைகள் 34 | நவம்பர் 2018 |
36 | நீதிக் கதைகள் 35 | மார்ச் 2019 |
37 | சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை - பாகம் 4 | செப்டம்பர் 2019 |
38 | மகான்களின் பொன்மொழிகள் 1000 - பாகம் 1 | டிசம்பர் 2021 |
விருதுகள்
உசாத்துணை
[[Category:Tamil Content]]