திருவாரூர் ஆடற்கலை
திருவாரூர் கோவில் ஓவியம், இசை, ஆடல் மூன்று கலைகளுக்கு முக்கியமான இடம். சிதம்பரம் கோவில் போல் திருவாரூர் கோவிலும்
பார்க்க: திருவாரூர் தியாகராஜர் கோவில்
தேவாசிரியன் மண்டபம்
சோழர் காலத்தில் திருவாரூர் கோவில் தேவாசிரியன் மண்டபம் கலை, இலக்கிய அரங்கேற்றத்திற்கு முக்கியமான இடமாக இருந்துள்ளது. திருவாரூர் கோவிலில் வீதிவிடங்கரான சிவன் அனைத்து கலைகளையும் தேவாசிரியன் மண்டபத்தில் அமர்ந்து பார்ப்பதாக ஐதீகம். வீதிவிடங்கர் இம்மண்டபத்தில் எழுந்தருளி ஆடலும், பாடலும் காண்பார் என்ற கல்வெட்டு சான்றுகளும் உள்ளன. தேவார நால்வருள் ஒருவரான சுந்தரர் திருத்தொண்டத்தொகை நூலை தேவாசிரியன் மண்டபத்திலேயே அரங்கேற்றினார்.
முதல் குலோத்துங்க சோழனின் 49 வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு (பொ.யு. 1118 - 19) வீதிவிடங்கர் தேவாசிரியன் மண்டபத்தில் எழுந்தருளப் புக்கத்துறை வல்லவத் தலைக்கோலி என்ற ஆடல் அணங்கின் நடனத்தைக் கண்டு களித்ததாகக் கூறுகிறது.
விக்கிரம சோழனின் கல்வெட்டு தொடரில் சித்திரை மாத சதய விழா பற்றிய குறிப்பு உள்ளது. இதில் வீதிவிடங்கப் பெருமான் தேவாசிரிய மண்டப சிம்மாசனத்தில் வீற்றிருந்த போது தியாக வினோதத் தலைக்கோலி என்ற திருக்கோவில் ஆடல்மகள் ஒருத்தி பன்னடம் புரிந்ததாள் என்ற குறிப்பு உள்ளது. மற்றொரு மன்னனின் கல்வெட்டு குறிப்பில் வீதிவிடங்கர் நடனம் கண்டதோடு வீரசோழ "அணுக்க விஜயம்"[1] என்னும் கூத்தின் பாடலையும் ஒருங்கே கேட்டதாகக் கூறுகிறது.
சிற்பம்
தேவாசிரியன் மண்டபத்தின் வடக்கு பக்கம் விதானத்தில் சிற்ப வரிசை ஒன்றுள்ளது. இதில் சபை நடுவே சோமாஸ்கந்தர் வீற்றிருக்கிறார். அவர் அருகே சிவகாமசுந்தர் இருக்கிறாள். விநாயகர், முருகன் இருவரும் நின்ற படி ஆடல் பார்க்கின்றனர். திருமால் தன் தேவியுடன் நின்ற கோலத்தில் உள்ளார். நந்தி தேவர் குடமுழா வாசிக்க ஊர்த்துவ தாண்டமூர்த்தி ஊர்த்துவம் காட்டி நிற்க அருகே காளி நாணத்தால் நிற்பது போல் காட்டப்பட்டுள்ளது. இச்சிற்ப தொகை அடுத்து ஆடல் மகளிர் பலர் நடனம் புரியும் சிற்பம் உள்ளது. இதில் நடன கலையின் முத்திரைகள் காட்டப்பட்டுள்ளன. மண்டபத்தின் கூரை விளிம்புகளிலும் ஆடல் மகளிரின் சிற்பம் காட்டப்பட்டுள்ளது.
கீழை ராஜகோபுரம்
மூன்றாம் குலோத்துங்கனின் சேர, பாண்டிய வெற்றி சின்னமாக எடுக்கப்பட்ட கீழை ராஜகோபுரத்தில் எட்டுத் திக்கிலும் கபோதத்தின் கீழே கால் பலகையின் மெல் பரதக் கலையின் கரணங்கள் காட்டும் பாவைகள் சிற்பம் இடம்பெற்றுள்ளன. தஞ்சையிலும், தில்லையிலும் புடைப்புச் சிற்பமாக உள்ள இப்பாவைகள் திருவாரூரில் முழு சிற்பமாக உள்ளது.
அஜபா கல்பம்
தஞ்சை தளிச்சேரி
ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலில் ஆடும் ஆடற்மகளிர் நாநூறு பேரை சோழ மண்டலத்திலிருந்து தேர்ந்தெடுத்தான். இதில் 51 ஆடற்மகளிர் திருவாரூர் கோவிலை சேர்ந்தவர்கள். இவர்களில் சிலரது பெயரும் கல்வெட்டில் கிடைத்துள்ளது. மழலைச் சிலம்பு ஆரா அமுது, நாராயணி, ஜோதி விளக்கு, வீதிவிடங்கி, பூலோக மாணிக்கம், அனவரத சுந்தரி, ராஜசூளாமணி, வில்லவன் மாதேவி ஆகிய ஆடற்மகளிர் திருவாரூர் கோவிலான பூங்கோவில், அரநெறி, அருமொழி ஈஸ்வரம், உலகீஸ்வரம், பிரம்மீஸ்வரம், திருமண்டளி கோவிலைச் சேர்ந்தவர்கள்.
பார்க்க: தஞ்சை தளிச்சேரி
உசாத்துணை
- திருவாரூர் திருக்கோவில் டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன்
- ↑ அணுக்க விஜயம் நூல் பூங்கோயில் தியாகேசர் பற்றி பூங்கோயில் நம்பியால் பாடப்பட்டது.