பரத்தையை ஏசல்(பெருந்திணை)
பரத்தையை ஏசல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட தலைவி பரத்தையை எசுவதைக் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் அழகிய வயல்களையுடைய ஊரில் தலைவனுடன் நீர் விளையாட்டினை விரும்பும் தலைவி பரத்தையை ஏசுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
அணிவயல் ஊரனொடு அப்பு விழவு அமரும்
பணிமொழி பாவை பரத்தையை ஏசின்று(கொளு 16.10)
வெண்பா
யாமுயங்கும் மெல்முலையால் யாணர் வயல் ஊரன்
தேமுயங்கு பைந்தார் திசை முயங்க - யாமுயங்க
எவ்வையர் சேரி இரவும் இமை பொருந்தாக்
கவ்வை கரு¢தில் கடை (315)
பொருள்: புதுவருவாயினை உடைய கழனிகள் சூழ்ந்த தலைவனின் மாலை அணிந்த மார்பை என் கொங்கைகளால் தழுவி நீர் விளையாடுதற்குப் பரத்தையரின் சேரிகளில் இரவுநேரத்தில் எழும் ஆரவாரம் தடையாக இருக்கிறது
உசாத்துணை
பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page