கவின்மலர்

From Tamil Wiki
கவின்மலர்

கவின்மலர் தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிக்கையாளர், ஊடகவியலாளர், மேடைப் பேச்சாளர்.

கவின்மலர்

வாழ்க்கைக் குறிப்பு

கவின்மலர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பிறந்தார். நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். நாகப்பட்டினம் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் (ஏ.டி.எம். கல்லூரி) கணினித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றினார்.

ஊடகவியல்

புதிய தலைமுறை பத்திரிக்கையில் ஆரம்பகால ஊழியர். ஆனந்த விகடனில் தலைமை நிருபர். 2013 - 2015 வரை இந்தியா டுடேயின் தமிழ் பதிப்பில் அசோசியேட் காப்பி எடிட்டராக பணியாற்றினார். 2015-2016 வரை காட்சிப்பிழை பத்திரிக்கையில் இதழாசிரியராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கவின்மலரின் ‘இரவில் கரையும் நிழல்கள்’ சிறுகதை 2010இல் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு 2014இல் சென்னை புத்தகக் காண்காட்சியில் கயல் கவின் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. கவிதை, கட்டுரை, சிறுகதை என தொடர்ந்து இதழ்களில் எழுதி வருகிறார்.

இலக்கிய இடம்

"அனுபவத்தின் பாசாங்கற்ற யதார்த்தச்சித்திரம். இதன் முதல் கலைத்திறன் என்பது கதைநிகழ்ச்சிகளில் இருக்கும் அபாரமான யதார்த்தம்தான். ஒரு நிகழ்வு, ஓர் உரையாடல்கூட மிகையானதாகவோ வலிந்து செய்யப்பட்டதாகவோ தோன்றவில்லை. சர்வசாதாரணமாக விரியும் நிகழ்ச்சிகள் வழியாக இருதோழிகளின் நுட்பமான அந்தரங்கப்பரிமாற்றம் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கவின்மலர் தமிழின் குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியராக வரமுடியும் என நினைக்கிறேன்." கவின்மலர் எழுதிய ‘இரவில் கரையும் நிழல்கள்’ என்ற கதை.

இவ்வளவு விரிந்த பூமிப் பந்தில் மனிதர்களின் இருப்பு, குறிப்பாகப் பெண்களின் இருப்பு ஏன் இத்தனை நெருக்குதலுக்கும், விளிம்பில் நிறுத்தப்படுவதற்கும் ஆன காரணம் பற்றிய கேள்விகள், அவர் கதைகள் எனலாம். இந்தியா போன்ற, பழம்பெரும் ஆனால், புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று ஒட்டாரம் பிடிக்கிற தேசத்துக்குள் மரபு என்கிற, வரையறுக்கப்பட்ட ஒழுக்கம் மற்றும் நடைமுறை மீறுகிற எவரையும் சகித்துக் கொள்ளாத மனோபாவம் பற்றிய கேள்விகளே இவர் கதைகளில் அடித்தளம் எனலாம்.

நூல்கள்

சிறுகதைகள்
  • நீளும் கனவு (எதிர் வெளியீடு)
மொழிபெயர்ப்பு
  • இந்து ஆன்மிகமே பாசிசம்தான்
பிற
  • அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்
  • சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் (எதிர் வெளியீடு)
  • பேராயுதம் மெளனித்த பொழுதில் (நல்லநிலம்)

உசாத்துணை

இணைப்புகள்