எஸ்.ஏ. கணபதி
எஸ். ஏ. கணபதி (மார்ச் 23, 1912 - மே 4, 1949) மலாயா கணபதி என்றே பலராலும் அறியப்பட்டவர். இவர் மலாயாவைச் சேர்ந்த தொழிற்சங்கப் போராட்டவாதி. சமூக நீதி செயல்பாட்டாளர். இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர். அன்றைய மலாயாவின் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து தூக்கிலிடப்பட்டவர்.
பிறப்பு, கல்வி
எஸ். ஏ. கணபதி தமிழ்நாடு, தஞ்சாவூர், தம்பிக்கோட்டை கிராமத்தில் 1912ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையாரின் பெயர் ஆறுமுக தேவர். தாயாரின் பெயர் வைரம்மாள். எஸ். ஏ. கணபதிக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது சிங்கப்பூருக்கு வந்தார். தம் தொடக்கக் கல்வியை சிங்கப்பூரில் பெற்றார். தனது தாய்மாமன் சுப்பிரமணியம் வழிகாட்டலில் வளர்ந்த கணபதிக்கு இள வயதிலேயே அரசியல் தீவிரம் இருந்தது
அரசியல் வாழ்க்கை
இந்திய தேசிய ராணுவம்
1942ல் இந்திய தேசிய ராணுவம் (Indian National Army) அமைந்தது. அதில் எஸ். ஏ. கணபதி ஓர் அதிகாரியாகவும் பயிற்றுநராகவும் சேவை செய்தார். மேலும் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் Malaya Communist Party (MCP) கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த 'முன்னணி' எனும் இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் மலாயாவைக் கைப்பற்றியது. எஸ்.ஏ. கணபதியின் கவனம் தொழிலாளர் நலன் குறித்து திரும்பியது. தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். வீரசேனன் முதலானோர்களோடு இணைந்து செயலாற்றினார். சாதிப்பிரிவினை மூடநம்பிக்கை போன்றவற்றில் மூழ்கி கிடந்த சமுதாயத்தை சீர்திருத்த தொண்டர் படையை அமைத்து பணிபுரிந்தார்.
தொண்டர் படை
ஐஎன்ஏ (INA) படையின் முக்கிய பொறுப்புகளில் கல்வி கற்ற நகர்புற இந்தியர்கள்தான் அதிகம் நியமிக்கப்பட்டனர். ஆனாலும் மலாயா தோட்டப்புற பாட்டாளி மக்களின் மனதில் போராட்டப் பொறியை ஐஎன்ஏ தோற்றுவித்தது. 1948ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸின் அகால மரணத்திற்குப் பிறகு அப்படையில் பணியாற்றிய முக்கிய பொறுப்பாளர்கள் சிலரும் தொண்டர்களும் தங்களை மக்கள் சேவையில் இணைத்துக்கொண்டு ‘தொண்டர் படை’ என்ற அமைப்பின் வழி செயல்பட்டனர். தொண்டர் படையின் செயல்பாடுகள் சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராகவும், முதலாளித்துவத்துக்கு எதிராகவும் இருந்தது. அக்காலகட்டத்தில் சமூகச் சீர்கேட்டு எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு போன்ற அடிப்படை கொள்கைகளோடு ஒத்துபோகும் அமைப்பாக கம்யூனிஸ இயக்கம் இருந்தது. ஆகவே ஆங்கிலேய முதலாளிகள் தோட்டப்புறங்களில் இருந்து தொண்டர் படையை முற்றாக ஒழிக்க முடிவெடுத்து புதிய சட்டங்களின் வழி அவ்வமைப்பைத் தடைசெய்தனர்.
போராட்டங்கள்
1946 முதல் 1948 வரை மலாயாவில் காலனித்துவம் ஒழிய வேண்டும்; மலாயாவுக்குத் தன்னாட்சி - விடுதலை வேண்டும் என்பதே எஸ்.ஏ. கணபதியின் போராட்டமாக இருந்தது. தொழிலாளர் உரிமைகளை முன் வைத்து எட்டு மணி நேர வேலை - எட்டு மணி நேர ஓய்வு - எட்டு மணி நேர தூக்கம் எனும் கோரிக்கையை முன் வைத்தார். மேலும் தொழிலாளர்களைக் கூலி என அழைக்கக் கூடாது, மேநாளில் சம்பளத்துடன் கூடிய விடுதலை, சம்பள உயர்வு போன்ற போராட்டங்களை முன்னெடுத்து அதிலும் வெற்றியும் கண்டார்.
1946ல் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் எஸ்.ஏ.கணபதி. இந்தச் சங்கம் பின்னர் அகில மலாயா தொழிலாளர் சம்மேளனம் (Pan - Malayan Federation of Trade Unions -PMFTU) என பெயர் மாற்றம் கண்டது.
1947இல் புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மாநாட்டில் மலாயாப் பேராளர்களில் ஒருவராக எஸ். ஏ. கணபதி கலந்து கொண்டார். இம்மாநாட்டிற்கு ஜவர்ஹலால் நேருவின் தலைமை தாங்கினார்.
1948 ஆம் ஆண்டு மலாயாவின் அனைத்து இனங்களின் விடுதலைப் படையில் இணைந்தார்.
ஒடுக்குமுறை
எஸ். ஏ. கணபதியின் உரிமைப் போராட்டங்கள் பிரித்தானியர்களின் நலன்களுக்குப் பெரும் இடையூறுகளாக அமைந்தன. அவரை அனைத்துலகப் பார்வையில் இருந்து அகற்றுவதற்கு பிரித்தானியர்கள் முடிவு செய்தனர். ஜூன் 16, 1948ல் பிரிட்டிஷ் அரசு நெருக்கடி (Emergency) நிலையை அறிவித்தது. அதன் மூலம் தொழிற்சங்கங்களை முடக்கியது.
எஸ்.ஏ. கணபதி கைது
மலாயா கம்யூனிஸ்டு கட்சி அப்போது தலைமறைவு இயக்கமாக இயங்கிக் கொண்டிருந்தது. மலாயா கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு கொண்டு இயங்கிய தொழிற்சங்கங்களைக் காவல் துறையினர் மிக அணுக்கமாகக் கண்காணித்து வந்தனர். தொழிற்சங்க அலுவலகங்களில் சோதனைகளையும் மேற்கொண்டனர். சில தொழிற்சங்கவாதிகள் கைது செய்யப்பட்டு காவலில் தடுத்தும் வைக்கப்பட்டனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் ரவாங், பத்து ஆராங் என இரு நகரங்கள் உள்ளன. இந்த நகரங்களுக்கு மத்தியில் உள்ள வாட்டர்பால் எனும் தோட்டத்தில் (Waterfall Estate) கணபதி கைது செய்யப்பட்டார். கைத்துப்பாக்கியும் ஆறு சுற்றுத் துப்பாக்கிக் குண்டுகளையும் வைத்திருந்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. உடனடியாக, அவர் அங்கிருந்து கோலாலம்பூருக்கு கொண்டு வரப்பட்டார்.
கோலாலம்பூர் நீதிமன்றம் கணபதிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தொழிற்சங்க இயக்கங்கள் மற்றும் உலகத் தொழிலாளர் சம்மேளனம் (World Federation of Trade Unions) எஸ்.ஏ. கணபதிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. மரணதண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டன. மலேசிய - இந்திய தலைவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர், வேண்டுகோள்களை முன் வைத்தனர். ஜவஹர்லால் நேரு நேரடியாகவும் பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் வி. கே. கே. கிருஷ்ண மேனன் மூலமும் லண்டனில் இருந்து முயற்சிகளை மேற்கொண்டார்.
தூக்குத்தண்டனை
மே 4, 1949ல் எஸ். ஏ. கணபதி கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். தனது 37வது வயதில் அவர் மரணமடைந்தார். விசாரணை செய்யப்பட்ட இரண்டே மாதங்களில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எஸ். ஏ. கணபதி தூக்கிலிடப்பட்ட செய்தியைப் பிரித்தானிய அரசாங்கத்தின் காலனி ஆட்சிகளுக்கான அமைச்சர் வில்லியம்ஸ் டேவிட் ரீஸ், நாடாளுமன்ற மக்களவையில் அறிவித்தார். எஸ். ஏ. கணபதியின் வழக்கில் நீதி மதிப்பீட்டாளர்களாக இருந்த ஓர் ஐரோப்பியரும் ஓர் இந்தியரும் ஒரு சேர தூக்குத் தண்டனைக்கு முடிவு எடுத்தனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கண்டனங்கள்
வரலாற்று இடம்
நூல்கள்
மலேயா கணபதி - ராசின்
உசாத்துணை
- மாவீரன் மலேயா கணபதி - இரா. உதயசங்கர்(1998)
- Malaya S.A.Ganapathy
- Hung By The British: The Activist Who Fought To Improve The Lives Of Labourers In Malaya
- உலகத் தமிழ் களஞ்சியம் (தொகுதி 3)- 2018