under review

அவினேனி பாஸ்கர்

From Tamil Wiki
அவினேனி பாஸ்கர்

அவினேனி பாஸ்கர் (பிறப்பு: ஜனவரி 25, 1979), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து தெலுங்குக்கும், தெலுங்கிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

அவினேனி பாஸ்கர் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், குமாரராஜுபேட்டை கிராமத்தில் நாராயணஸ்வாமி, ஜயம்மா இணையருக்கு ஜனவரி, 25, 1979-ல் பிறந்தார். எட்டாம் வகுப்புவரை குமாரராஜுபேட்டை நடுநிலைப் பள்ளியிலும், பத்தாம் வகுப்பு வரை பள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். அதன் பிறகு சென்னைக்கு இடம்பெயர்ந்து, மேல்நிலைப்படிப்பும், மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பட்டயப் படிப்பை முடித்தார். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட இவர் பள்ளிக் கல்வி முழுவதும் தமிழ் வழிக் கல்வியில் பயின்றார்.

தனிவாழ்க்கை

அவினேனி பாஸ்கர் திருப்பதியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஆஷாவை பிப்ரவரி 27, 2009-ல் மணந்தார். மகன் அர்ஜுன். 1999 ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் பன்னாட்டு நிறுவனங்களில் சிலிக்கான் சில்லு(சிப் டிசைனிங்) பொறியியலாளராகப் பணியாற்றுகிறார். குடும்பத்துடன் பெங்களூரில் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

அவினேனி பாஸ்கர் தமிழிலிருந்து தெலுங்கிற்கு 2013 முதல் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும். ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளும், ஒரு நாவலும் மொழியாக்கம் செய்துள்ளார். 2013-ல் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகளை தெலுங்கில் மொழிபெயர்த்தார். அதன்பின் அ.முத்துலிங்கம், ஜெயகாந்தன், சுஜாதா, அராத்து, சாருநிவேதிதா, ஜி.நாகராஜன், ஆதவன், ஜெயமோகன், சுந்தர ராமசாமி ஆகியோரின் சிறுகதைகளை மொழிபெயர்த்தார்.

2021-ல் அ.முத்துலிங்கத்தின் பதினைந்து கதைகளை தெலுங்கில் ‘ஐது காள்ள மனிஷி’ என்ற பெயரில் மொழிபெயர்த்தார். இது சாயா பதிப்பகம் வெளியீடாக வந்தது. ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பை தெலுங்கில் நெம்மி நீலம் என்ற பெயரில் சாயா பதிப்பகத்தின் மூலம் மொழிபெயர்த்தார்.

பூமணியின் வெக்கை நாவல் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு சில பொருளாதாரக் காரணங்களுக்காக புத்தகமாக வெளிவராமல் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். ஏழாம் உலகம், படுகளம், அம்மா வந்தாள் போன்ற நாவல்கள் தெலுங்கில் வெளிவருவதற்கான திட்டத்தில் உள்ளார். மனுஷ்யபுத்திரன், வைரமுத்து, பெருமாள் முருகன் ஆகியோரின் கவிதைகள் சிலவற்றை தெலுங்கிற்கு மொழிபெயர்த்தார். தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் பதிப்பகங்களுக்கும் தெலுங்கிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து தெலுங்கிற்கும் மொழிபெயர்த்து வருகிறார்.

தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, ஸ்ரீஸ்ரீ, சலம், ரங்கநாயகம்மா, வட்டெர சண்டிதாஸ் ஆகியோரை ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார். ஈமாட்டா, சாரங்கா, வாகிலி, ஆந்திரஜோதி, சாக்‌ஷி ஆகிய தெலுங்கு இதழ்களிலும் நீலி, திண்ணை ஆகிய இதழ்களிலும் இவரின் படைப்புகள், மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன.

நூல் பட்டியல்

தமிழிலிருந்து தெலுங்கு
  • ஐது காள்ள மனிஷி (ஐந்து கால் மனிதன் - அ.முத்துலிங்கம்)
  • நெம்மி நீலம் (அறம் - ஜெயமோகன்) (2024)
  • உக்க (வெக்கை - பூமணி)
  • அதோ லோகம் (ஏழாம் உலகம் - ஜெயமோகன்)

இணைப்புகள்



இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.