first review completed

சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை

From Tamil Wiki
சித்தூர் சுப்ரமணிய பிள்ளை

To read the article in English: Chittoor Subramaniam Pillai. ‎

சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை
சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை

சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை (கனகையா) (ஜூன் 22, 1898 - 1975) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்னாடக இசைப் பாடகர். இசைஆசிரியராகவும் இசைக்கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர்.

பிறப்பு, கல்வி

சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் இயற்பெயர் கனகையா. இவர் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்களூர் என்ற ஊரில் ஜூன் 22, 1898 அன்று நாயுடு குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பேரைய்யா புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர், கதாகாலட்சேபம் செய்பவர். தாய் முகிலம்மாளும் இசைஞானம் உடையவர். சித்தூர் சுப்ரமணிய பிள்ளை இவர்களுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தோர் மூவர்.

இளமையில் பெற்றோரிடம் இசைப் பயிற்சி பெற்றார். ஐந்து வயது முதலே தந்தையுடன் கலாகாட்சேபம் செய்து வந்தார். பதினாறு வயதில் காஞ்சீபுரம் நாயனாப் பிள்ளையிடம் குருகுலவாச முறையில் இசைப்பயிற்சி தொடங்கினார். 27-வது வயதில் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.

இசைப்பணி

சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை
சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை
சித்தூர் சுப்ரமணிய பிள்ளை ஓவியம். தமிழிசைச் சங்க இணையதளம்

மிகுந்த வறுமை நிலையில் இருந்த சுப்பிரமணிய பிள்ளையை அவரது குரு நாயனாப் பிள்ளை உணவு உடை தந்து ஆதரித்து நான்கு வருடங்கள் இசையும் பயிற்றுவித்தார். நாயனாப் பிள்ளை கச்சேரிகளுக்கு தன்னோடு சுப்பிரமணியத்தையும் அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. நாயனாப் பிள்ளையின் இயற்பெயர் சுப்பிரமணிய பிள்ளை. ஒரு முறை கச்சேரியின் அழைப்பில் அச்சிடும் போது சுப்பிரமணியத்துக்கும் தன் பெயரையே குறிப்பிடுமாறு நாயனாப் பிள்ளை குறிப்பிட்டார். அன்று முதல் சுப்பிரமணிய பிள்ளை என்றே அறியப்பட்டார். மேலும் நாயனாப் பிள்ளை சுப்பிரமணிய பிள்ளையே தன்னுடைய இசைமுறையில் பாடிப் பெரும் புகழ் பெறுவார் என்று குறிப்பிடுவார்.

சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையும் தன் குருவைப் போல லயத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அவருடைய இசையமைப்பின் நுட்பங்கள் அனைத்தையும் கற்று, நாயனாப் பிள்ளை போலவே பழைய கீர்த்தனைகளைத் தேடிக் கற்றுப் பாடுவதை வழக்கமாகக் கொண்டார். அபூர்வ ராகங்களை எடுத்து விரிவாகப் பாடுவது இவரது சிறப்பு. மூன்று காலங்களிலும்[1] சிறப்பாகப் பாடும் திறன் கொண்டவர்.

சித்தூர் சுப்ரமணிய பிள்ளை ஐம்பதாண்டுகாலம் கச்சேரிகள் செய்திருக்கிறார். இவர் தியாகராஜர் கீர்த்தனைகளில் பெரும் தேர்ச்சி பெற்றவர். சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை இயற்றிய சில கீர்த்தனைகள் இசைத்தட்டாக வெளிவந்திருக்கிறன்றன.. இவர் இயற்றிய "மதுரா நகரிலோ" என்ற ஜாவளி மிகவும் புகழ் பெற்றது, குச்சிப்புடி நடனத்தில் பயன்படுத்தப்படுகிறது. அன்னமாச்சாரியார் கீர்த்தனைகள் பலவற்றிற்கு இசையமைத்தார்.

அமைப்புப்பணிகள்

சித்தூர் சுப்ரமணிய பிள்ளை திருப்பதியில் தியாகராஜ இசை விழா நடத்தி தகுதியானவர்களுக்கு சப்தகிரி சங்கீத வித்துவான்மணி விருது வழங்கினார்.

இசைப்பாணி

சித்தூர் சுப்ரமணியம் காஞ்சீபுரம் நாயனா பிள்ளையின் பாணியில் பாடியவர். இது காஞ்சீபுரம் பாணி எனப்படுகிறது. லயம் முதன்மைப்படும் பாட்டுமுறை இது.

வகித்த பதவிகள்

  • இசைத் துறை ஆசிரியர் - சென்னை இசைக்கல்லூரி
  • இசைத் துறைத் தலைவர் - அண்ணாமலை பல்கலைக்கழகம்
  • முதல்வர் - திருப்பதி ஸ்ரீ வெங்கடேச்வரா இசைக் கல்லூரி
  • முதல்வர் - ராஜா இசைக் கல்லூரி, திருவையாறு
  • தலைவர் - இலங்கை, யாழ்ப்பாணம் இராமநாதன் சங்கீத அகாதமி (1967 - 1971)

விருதுகள்

  • சங்கீத கலாநிதி விருது, 1954. வழங்கியது: சென்னை மியூசிக் அகாதமி[2]
  • இசைப்பேரறிஞர் விருது, 1964. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை[3].
  • சங்கீத நாடக அகாதமி விருது, 1964. இந்திய இசை, நடன, நாடக தேசிய அகாதமி[4]
  • சங்கீத கலாசிகாமணி விருது, 1965. வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
  • பத்மஸ்ரீ

நூற்றாண்டு விழா

சித்தூர் சுப்ரமணிய பிள்ளையின் மகளும் மாணவியுமான ரேவதி இரத்தினசாமி ‘ஸ்ரீ சுப்ரமணிய சங்கீத க்ஷேத்திர’ என்ற அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களுக்கு இசைப் பயிற்சி அளித்து வருகிறார். அந்த அமைப்பின் சார்பில் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் நூற்றாண்டு விழா 2006ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

மாணவர்கள்

  • மதுரை சோமசுந்தரம்
  • பாம்பே எஸ். இராமச்சந்திரன்
  • சித்தூர் இராமச்சந்திரன்
  • டி.டி.சீதா
  • தடேப்பள்ளி லோகநாத சர்மா
  • ரேவதி இரத்தினசுவாமி (மகள்)

உசாத்துணை

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. 1) சவுக்க காலம் 2) மத்திம காலம்3) துரித காலம்
  2. https://web.archive.org/web/20050306124456/http://www.hindu.com/2005/01/04/stories/2005010400331102.htm
  3. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம் (23 டிசம்பர் 2018).
  4. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி.


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.