குலாம் காதிறு நாவலர்
குலாம் காதிறு நாவலர் (1833-1908) தமிழ் புலவர். உரைநடை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், பத்திரிக்கை ஆசிரியர் . நான்காம் தமிழ்ச்சங்கம் அமையக் காரணமானவர்களில் ஒருவர்; அதன் முதற்பெரும் புலவர். இவரது நூல்களை தமிழக அரசு 2007-ல் நாட்டுடைமையாக்கியது.
பிறப்பு, கல்வி
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் 1833-ல் ஆயுர்வேத பாஸ்கர என அறியப்பட்ட பண்டிதர் வாப்பு ராவுத்தரின் மகனாக குலாம் காதிறு நாவலர் பிறந்தார். இவரது முன்னோர் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து நாகூர் வந்து குடியமர்ந்தனர்
குலாம் காதிறு நாவலர் எழுத்துச்சுவடி, எண்சுவடி, திவாகரம், பிங்கலம், நிகண்டு ஆகியவைகளை திண்ணைப் பள்ளிகளில் கற்றுத்தேர்ந்தார். பன்னிரெண்டாவது வயதில் நாகூரில் வாழ்ந்த தமிழ் ஆசிரியர் நாராயண சுவாமியிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். இவரது இருபத்தி எட்டாம் வயதில் நாராயண சுவாமி இறந்துவிட்டதால் மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ்ப் படிப்பைத் தொடர்ந்தார். அதன் பின் தந்தையின் நண்பரும் வழக்கறிஞருமான சரவணப் பெருமாள் ஐயரிடம் ஆங்கில மொழியைக் கற்றார்.
இதழியல்
குலாம் காதிறு நாவலர் 1888-ல் பினாங்கில் இருந்து ‘வித்யா விசாரினி’ என்ற பெயரில் தமிழ் வார இதழ் நடத்தினார்
இலக்கிய வாழ்க்கை
குலாம் காதிறு நாவலர் தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். நவீனத் தமிழிலக்கியத்தில் இஸ்லாமிய இலக்கியத்தை தொடங்கி வைத்தவர்களில் ஒருவர்
ஆசிரியப்பணி
நான்காம் தமிழ்ச்சங்கம் அமைய பணியாற்றினார். மறைமலையடிகள் இவரிடம் மாணவராக தமிழ் கற்றார் எனப்படுகிறது.
சிற்றிலக்கியங்கள்
குலாம் காதிறு நாவலர் பத்தொன்பது கவிதை நூல்கள், ஏழு உரைநடை நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள், இரண்டு இலக்கண நூல்கள் எழுதியுள்ளார். காப்பியங்கள், கலம்பகம், கோவைகள், அந்தாதிகள், மாலைகள், உரைநூல்கள் என பல இலக்கிய வகைகளில் எழுதியுள்ளார். நாகூர் நாயகத்தின் வரலாற்றை முதல் முதலில் நூலாகக் கொண்டு வந்தார். குலாம் காதிறு நாவலர் செல்வந்தர் பெ.மா.மதுரைப் பிள்ளையை வாழ்த்தி மதுரைக்கோவை நூலைப் படைத்தார்.
நாவல்
குலாம் காதிறு நாவலர் ஆங்கில நாவலாசிரியர் ஜி.டபிள்யு.எம்.ரெனால்ட்ஸ் எழுதிய நாவலை தழுவி உமறு பாட்சா யுத்த சரித்திரம் என்னும் நாவலை எழுதினார்.
அரபு மொழி
குலாம் காதிறு நாவலர் அரபு மொழியிலுள்ள கடுமையான வாக்கியங்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களுடன் அரபுத்தமிழ் அகராதி ஒன்றை வெளியிட்டுள்ளார். இறுதியாக, குர்ஆன் ஷரீபு முப்பது ஜூஸாவுக்கு உரை எழுத வேண்டுமென்று எண்ணம் கொண்டிருந்தார். குலாம் காதிறு நாவலர் நூல்களை வெளியிட எம். எஸ். எம். பளில் (இரத்தினபுரி நகரசபை உறுப்பினர்) வேர்விலை, சீனங்கோட்டையைச் சேர்ந்த எம். எஸ். எம். முபாரக் ஆகியோர் உதவி செய்தனர்.
அமைப்புப்பணிகள்
நான்காம் தமிழ்ச்சங்கம் மதுரையில் அமைய பாண்டித்துரைத் தேவருடன் இணைந்து பணியாற்றினார்
மறைவு
குலாம் காதிறு நாவலர் ஜனவரி 3, 1908 அன்று மறைந்தார்
விருதுகள், பட்டங்கள்.
குலாம் காதிறு நாவலருக்கு செல்வந்தர் பி.எம்.மதுரைப் பிள்ளை நாவலர் பட்டத்தை தங்கத் தாம்பாளத்தில் பொறித்து அளித்தார். அது முதல் குலாம் காதிறு நாவலர் என்று அழைக்கப்பட்டார். நான்காம் தமிழ்ச்சங்கம் அமைய உழைத்தமையால் இஸ்லாமிய நக்கீரர் , நான்காவது நக்கீரர் என்றும் அழைக்கப்படுகிறார்
வாழ்க்கை வரலாறு
நாகூர் குலாம்காதிறு நாவலர் -ஏ.வி.எம்.நசிமுத்தீன்( இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)
இலக்கிய இடம்
குலாம் காதிறு நாவலர் நவீனத் தமிழிலக்கியக் களத்தில் இஸ்லாமிய இலக்கியம் உருவாக வழிகோலிய முன்னோடி. அரபு மொழிக்கும் தமிழுக்குமான உரையாடல் ஒன்றை உருவாக்கியவர். தமிழ்ச்சங்கம் உருவாக பெரும்பங்காற்றினார்.
நூல் பட்டியல்
கவிதை
- நாகூர்க் கலம்பகம் (1878)
- நாகூர் புராணம் (1893)
- தர்கா மாலை (1928)
- முகாஷபா மாலை (1899, 1983)
- குவாலீர்க் கலம்பகம் (1882)
- திருமக்காத் திரிபந்தாதி (1895)
- ஆரிபு நாயகம் (1896)
- பதாயிகுக் கலம்பகம் (1900)
- பகுதாதுக் கலம்பகம் (1894)
- புலவராற்றுப்படை (1903, 1968) இணையநூலகம்
- சமுத்திரமாலை
- பிரபந்தத் திரட்டு
- மும்மணிக்கோவை
- சித்திரக்கவித்திரட்டு
உரைநடை
- கன் ஜுல் கராமாத்
- தரீக்குல் ஜன்னாவுக்கு உரை
- ஃபிக்ஹு மாலைக்கு உரை
- அரபுத் தமிழ் அகராதி
- சீறாப்புராண வசன காவியம்
- ஆரிபு நாயக வசனம்
- திருமணிமாலை வசனம்
- நன்னூல் விளக்கம்
- பொருத்த விளக்கம்
- நபிகள் பிரான் நிர்யாண மான்மிய உரை
- உமரு பாஷா யுத்த சரித்திரம்
உசாத்துணை
- குலாம் காதிறு நாவலர் - https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua
- நாகூர் குலாம் காதிறு நாவலருக்கு மணிமண்டபம் அமைக்கப்படுமா?- Dinamani
- https://nagoori.wordpress.com/cateகுலாம்காதிறுநாவலர்/
- புலவராற்றுப்படை இணையநூலகம்
- ஹிந்து தமிழ்-நான்காவது நக்கீரர் குலாம் காதிர்
- புலவராற்றுப்படை இணையநூலகம்
✅Finalised Page