ஆசாரக்கோவை
This page is being created by ka. Siva
ஆசாரக்கோவை, சங்கம் மருவிய காலத்து தொகுப்பு நூலான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஆசாரக்கோவை நூலின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
பெயர்க் காரணம்
ஆசாரக்கோவை என்னும் தொடருக்கு ஒழுக்கங்களின் தொகுதி என்பது பொருள். 'ஆசாரங்களினது கோவை' என்றும், 'ஆசாரங்களைத் தொகுத்த கோவை'என்றும் இத்தொடருக்குப் பொருள் கொள்ளலாம். ஆசாரக்கோவை பெயர் நூலுள் பொதிந்துள்ள பொருள் பற்றி அமைந்தது. 'அச்சமேகீழ்களது ஆசாரம்' (குறள்-1075), 'ஆசாரம் என்பது கல்வி'(நான்மணி. 93) 'அறியாத் தேயத்து ஆசாரம் பழியார்'(முதுமொழி, 3:8) என நூல்களில் ஒழுக்கம் என்ற பொருளில் ஆசாரம் என்பது பயின்று வந்துள்ளது.ஆசாரக்கோவை நூலுள்ளும் 'ஆசார வித்து' (1), 'ஆசாரம் எப் பெற்றியானும்படும்' (96), 'ஆசாரம் வீடு பெற்றார்' (100) என வரும் இடங்களில், இச் சொல் ஒழுக்கம் என்ற பொருளில் வந்திருத்தல் காணலாம். இதுவன்றியும், ஒழுக்கம் (2,21), நெறி (16, 27),முறை (11), வழி (29, 30) என்னும் சொற்களாலும் ஆசாரம் என்பதை பெருவாயின் முள்ளியார் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் நூல் ஆசாரக்கோவை என்று பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. இதுவொரு நீதி நூல்.
ஆசிரியர் குறிப்பு
ஆசாரக்கோவை நூலின் ஆசிரியரையும், இவருடைய தந்தையார் பெயரையும், இவர் வாழ்ந்த ஊரையும், இவரது மதச் சார்பையும் சிறப்புப் பாயிரச் செய்யுள் மூலம் அறியமுடிகிறது. இவரது முழுப்பெயர் கயத்தூர்ப்பெருவாயின் முள்ளியார் என்பதாகும். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். பெருவாய் என்பது இவரது தந்தையார் பெயர் என கருதப்படுகிறது. கயத்தூரின் ஒரு பகுதியாகிய பெருவாயிலில் வாழ்ந்த முள்ளியார் என்றோ, கயத்தூரை அடுத்த பெருவாயிலில் வாழ்ந்த முள்ளியார் என்றோ கொள்ளவும் இடமுண்டு. இவர் வாழ்ந்த ஊர் கயத்தூர். இவ் ஊரைத் 'திரு வாயில் ஆயதிறல் வண் கயத்தூர்'என்று பாயிரப் பாடல் சிறப்பிக்கின்றது. இதன் மூலம் செல்வமும், திறலும், வண்மையும் ஓங்கிய ஊர் இது என்பது விளங்கும். இவ் ஊர் எங்குள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 'ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடிஏத்தி' என்பதனால், இவர் சைவ சமயத்தார் என்பதையும் அறியமுடிகிறது.
நூலின் பொருண்மை
ஆசாரக்கோவை நூலில் 'ஆசார வித்து' (1) என்று தொடங்கி,'ஆசாரம் வீடு பெற்றார்' (100) என முடியும் நூறு செய்யுட்களில் ஆசாரங்கள் நெறிப்பட கோர்க்கப்பட்டுள்ளன. பொது வகையான ஒழுக்கங்களை தொகுத்தது தவிர, நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டி கடமைகள் அல்லது நித்திய ஒழுக்கங்களும் ஆசாரக்கோவை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு உடல் நலம் பேணும் புறத்தூய்மையை வலியுறுத்திக் கூறும் பகுதிகளும் பல உள்ளன. வைகறைத்துயில் எழுதல் முதல், காலைக் கடன் கழித்தல், நீராடல், உடுத்தல், உண்ணல், உறங்குதல் முதலிய பல நிகழ்ச்சிகளிலும் கடைபிடிக்க வேண்டிய நெறிகள் வலியுறுத்தப்படுகின்றன. மேற்கொள்ளத்தக்கன இவை, விலக்கத் தக்கன இவை என சில ஆசாரங்களை விதித்தும், சிலவற்றை விலக்கியும் கூறப்படுகிறது.
இந்நூல் வடமொழி ஸ்மிருதிக்கருத்துகளைப் பின்பற்றி எழுந்தது என்பதை,
"ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்"
என வரும் சிறப்புப் பாயிரச் செய்யுள் பகுதி கூறுகிறது. 'இலக்கண விளக்க' உரையில், அதன் ஆசிரியர் வழி நூல் வகையுள் ஒன்றாகிய மொழிபெயர்த்தலுக்கு இந்நூலை உதாரணமாகக் காட்டியுள்ளார். தி. செல்வக்கேசவராய முதலியார் தமது ஆசாரக்கோவைப் பதிப்பின் முகவுரையில், 'இந்நூலிற் கூறிய ஆசாரங்கள் பெரும்பான்மையாய் வட மொழியிலுள்ள சுக்ரஸ்மிருதியிலிருந்து தொகுத்தவை என வடநூற்புலவர் கூறுகின்றனர்' என்று குறித்துள்ளார். பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தாம் ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்றில், ஆபஸ்தம்ப கிருஹ்யசூத்திரம், ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம், போதாயனதர்ம சூத்திரம், கௌதம சூத்திரம், விஷ்ணு தர்ம சூத்திரம், வசிஷ்ட தர்ம சூத்திரம், மனு ஸ்மிருதி, உசனஸ ஸம்ஹிதா, ஸங்க ஸ்மிருதி, லகு ஹாரித ஸ்மிருதி ஆகியவைகள் எல்லாம் ஆசாரக்கோவை நூலுக்கு அடிப்படையாய் அமைந்துள்ளவை என்கிறார்.
ஆசாரக்கோவை நூலுள் சிறப்புப் பாயிரம் நீங்கலாக நூறு செய்யுள்கள் உள்ளன. வெண்பாவின் வகைகளாகிய குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசைவெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சவலைவெண்பா ஆகியனவற்றால் செய்யுள்கள் இயற்றப்பட்டுள்ளன.
ஒழுக்க பட்டியல்
ஆசாரக்கோவை நூலின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. இவ்வொழுக்கங்களின் பட்டியல்:
1. ஆசார வித்து
2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
3. தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
4. முந்தையோர் கண்ட நெறி
5. எச்சிலுடன் தீண்டத் தகாதவை
6. எச்சிலுடன் காணக் கூடாதவை
7. எச்சில்கள்
8. எச்சிலுடன் செய்யக் கூடாதவை
9. காலையில் கடவுளை வணங்குக
10. நீராட வேண்டிய சமயங்கள்
11. பழைமையோர் கண்ட முறைமை
12. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
13. செய்யத் தகாதவை
14. நீராடும் முறை
15. உடலைப்போல் போற்றத் தக்கவை
16. யாவரும் கூறிய நெறி
17. நல்லறிவாளர் செயல்
18. உணவு உண்ணும் முறைமை
19. கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
20. உண்ணும் விதம்
21. ஒழுக்கம் பிழையாதவர் செய்வது
22. பிற திசையும் நல்ல
23. உண்ணக்கூடாத முறைகள்
24. பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
25. கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை
26. உண்ணும் கலங்களைக் கையாளும் முறை
27. உண்டபின் செய்ய வேண்டியவை
28. நீர் குடிக்கும் முறை
29. மாலையில் செய்யக் கூடியவை
30. உறங்கும் முறை
31. இடையில் செல்லாமை முதலியன
32. மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்
33. மலம் சிறுநீர் கழிக்கும் முறை
34. மலம், சிறுநீர் கழிக்கும் திசை
35. வாய் அலம்பாத இடங்கள்
36. ஒழுக்க மற்றவை
37. நரகத்துக்குச் செலுத்துவன
38. எண்ணக்கூடாதவை
39. தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க
40. சான்றோர் இயல்பு
41. சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
42. மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
43. உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
44. நாழி முதலியவற்றை வைக்கும் முறை
45. பந்தலில் வைக்கத் தகாதவை
46. வீட்டைப் பேணும் முறைமை
47 நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்
48. அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்
49. நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
50. கேள்வியுடையவர் செயல்
51. தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை
52. தளராத உள்ளத்தவர் செயல்
53. ஒழுக்கமுடையவர் செய்யாதவை
54. விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு
55. அறிஞர் விரும்பாத இடங்கள்
56. தவிர்வன சில
57. நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
58. ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை
59. சில தீய ஒழுக்கங்கள்
60. சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை
61. நூல்முறை உணர்ந்தவர் துணிவு
62. சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
63. கற்றவர் கண்ட நெறி
64, வாழக்கடவர் எனப்படுவர்
65. தனித்திருக்கக் கூடாதவர்66. மன்னருடன் பழகும் முறை
67. குற்றம் ஆவன
68. நல்ல நெறி
69. மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன
70. மன்னன் முன் செய்யத் தகாதவை
71. மன்னன் முன் சொல்லக் கூடாதவை
72. வணங்கக்கூடாத இடங்கள்
73. மன்னர் முன் செய்யத் தகாதவை
74. ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
75. சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை
76. சொல்லும் முறைமை
77. நல்ல குலப்பெண்டிர் இயல்பு
78. மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
79. பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
80. சான்றோர் பெயர் முதலியவை கூறாமை
81. ஆன்றோர் செய்யாதவை
82. மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
83. கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை
84. பழகியவை என இகழத் தகாதவை
85. செல்வம் கெடும் வழி
86. பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது
87. கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை
88. பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்
89. கிடைக்காதவற்றை விரும்பாமை
90. தலையில் சூடிய மோத்தல்
91. பழியாவன
92. அந்தணரின் சொல்லைக் கேட்க
93. சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை
94. ஐயம் இல்லாத அறிவினர் செய்கை
95. பொன்னைப் போல் காக்கத் தக்கவை
96. எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
97, சான்றோர் முன் சொல்லும் முறை
98. புகக் கூடாத இடங்கள்
99. அறிவினர் செய்யாதவை
100. ஒழுக்கத்தினின்று விலகியவர்
உசாத்துணை
ஆசாரக்கோவை, தமிழ் இணையக் கல்விக் கழகம் https://www.tamilvu.org/ta/library-l2H00-html-l2H00ind-132255
ஆசாரக்கோவை, சென்னை நூலகம் https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/acharakovai.html
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.