being created

கமலா சத்தியநாதன்

From Tamil Wiki
Revision as of 10:04, 7 July 2022 by ASN (talk | contribs) (New Para Created)
கமலா சத்தியநாதன்

கமலா சத்தியநாதன் (ஹன்னா ரத்னம் கிருஷ்ணம்மா: 1879-1950) சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் முதுகலைப் பட்டதாரி. ஆங்கிலத்தில் வெளியான தென்னிந்தியாவின் முதல் பெண்கள் இதழான ‘The Indian Ladies Magazine’-ன் ஆசிரியர். கல்வியாளர் சாமுவேல் சத்தியநாதனின் மனைவி.

பிறப்பு, கல்வி

ஹன்னா ரத்தினம் கிருஷ்ணம்மா என்னும் இயற்பெயர் கொண்ட கமலா சத்தியநாதன், ஜூலை 2, 1879-ல், ராஜமுந்திரியில், ஒருகன்டி சிவராமன் கிருஷ்ணம்மா - நானி இணையருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். பிராமணர்களாக இருந்து கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய குடும்பம் அவர்களுடையது. உயர்கல்வியை உள்ளூரில் முடித்த கமலா, தனது சகோதரி சுந்தரத்துடன் கல்லூரிப் படிப்பை மசூலிப்பட்டினத்தில் உள்ள நோபிள் கல்லூரியில் தொடர்ந்தார். அங்கு இண்டர்மீடியட் படிப்பில் இருவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

தனி வாழ்க்கை

தன் மகள் கமலா மேற்கல்வி கற்க வேண்டும் என்று விரும்பினார் சிவராம கிருஷ்ணம்மா. சென்னை சர்வகலாசாலையில் (சென்னைப் பல்கலைக்கழகத்தின் அன்றைய பெயர்) கமலாவைச் சேர்த்தார். இந்நிலையில் உறவினர் ஒருவர் மூலம் ரெவரண்ட் W.T. சத்தியநாதன் அறிமுகமானார். அவரது மகனான சாமுவேல் சத்தியநாதனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைக்க விரும்பினார் சிவராமன். சாமுவேல் சத்தியநாதன் கேம்பிரிட்ஜில் பட்டம் பெற்றவர். சென்னை பிரசிடெர்ன்ஸி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். ஏற்கனவே மணமாகி மனைவி கிருபா பாயை இழந்தவர் சாமுவேல் என்பதை சிவராம கிருஷ்ணம்மா அறிந்திருந்தார். கமலாவை விட 19 வயது அதிக வயதுடையவர் என்பதும் தெரிந்திருந்தார். ஆனாலும், சென்னை ராஜதானியின் சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்த சாமுவேலுக்கே தனது மகள் கமலாவை அவர் மணம் முடிக்க எண்ணினார். கமலா - சாமுவேல் சத்தியநாதன் திருமணம் 1898-ல் நிகழ்ந்தது. திருமணத்திற்குப் பின் சென்னை ராயப்பேட்டையில் அவர்கள் குடியேறினர்.

மனைவியின் ஆர்வங்களை அறிந்த சாமுவேல் சத்தியநாதன் அவர் முறையாக மேற் கல்வி பயில ஊக்குவித்தார். இளங்கலைப் பட்டத்திற்குப் பின் தான் பயின்ற அதே சென்னைப் பல்கலையில் முதுகலை ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்தார் கமலா.

சென்னைப் பல்கலையின் முதல் முதுகலைப் பட்டதாரி

கமலா சத்தியநாதன் எம்.ஏ.பட்டம் பெற்ற குறிப்பு

ஏற்கனவே தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் நன்கு அறிந்திருந்த கமலா, ஆங்கிலத்தை மிக விரும்பிக் கற்றார். சென்னைப் பல்கலையின் முதல் முதுகலைப் பட்டதாரியாகத் தேர்ச்சி பெற்றார். அப்போதைய சென்னை ராஜதானியின் ஆங்கில இலக்கியத்தில் முதல் முதுகலைப்பட்டதாரியும் கமலா சத்தியநாதன் தான். இதனை அக்காலத்தில் வெளிவந்த இதழ்கள் பாராட்டி எழுதின.

சென்னை ராஜதானியின் முதல் பெண்கள் இதழ்

பல்வேறு மொழிகள் அறிந்திருந்த கமலா, பெண்களின் உயர்வு பற்றிச் சிந்தித்தார். பிரிட்டிஷாரால் வெளியிடப்பட்ட ஆங்கில இதழ்களுக்கு அவ்வப்போது கட்டுரைகளை எழுதி வந்த அவர், நாமே ஏன் பெண்களுக்காக ஒரு பத்திரிகை தொடங்கக் கூடாது என்று நினைத்தார். கணவர் சாமுவேல் சத்தியநாதனும் அவரை ஊக்குவித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். சென்னை ராஜதானியின் முதல் பெண்கள் இதழான ‘தி இண்டியன் லேடீஸ் மேகசின்’ (The Indian Ladies' Magazine) 1901-ல் உருவானது.

தி இந்தியன் லேடீஸ் மேகஸினின் சிறப்புகள்

தி இந்தியன் லேடீஸ் மேகஸின் - 1905 இதழ்

பெண் ஒருவரால் தொடங்கப்பட்ட சென்னை ராஜதானியின் முதல் ஆங்கிலப் பெண்கள் பத்திரிகை ’தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’ தான். இவ்விதழ் மகளிர் நலன், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக விழிப்புணர்வு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, பெண்களின் பொருளாதார மேம்பாடு போன்றவை பற்றிய கட்டுரைகளைத் தாங்கி வந்தது. By an Indian Lady என்ற பெயரிலும், Hannah Krishnamma என்ற பெயரிலும், ஹெச். கிருஷ்ணம்மா, An Indian Mother என்பது போன்ற பெயர்களிலும் பல விழிப்புணர்வுக் கட்டுரைகளை ‘கமலா சத்தியநாதன்’ எழுதினார்.

சரோஜினி நாயுடு, அன்னிபெசண்ட், மேரி கரோலி, பண்டித ரமாபாய், லேடி ஹர்னாம் சிங், கொர்னிலியா சொராப்ஜி உள்ளிட்ட பலர் அவ்விதழில்  எழுதினர். பெண்கள் பலர் நன்கொடை செலுத்தி இவ்விதழ் வளர்ச்சிக்கு உதவினர். இந்தியா முழுமைக்குமான பெண்கள் இதழாக இவ்விதழ் இருந்தது. ஒவ்வொரு மாதமும் 12-ம் தேதி இவ்விதழ் வெளியானது. 15-ம் தேதிக்குள் சந்தாதாரர்களைச் சென்றடைந்தது.

தி லண்டன் டைம்ஸ், தி லண்டன் டெய்லி டெலிக்ராப் போன்ற இதழ்கள் தி இந்தியன் லேடீஸ் மேகஸின் வரவைப் பாராட்டி எழுதின. எட்வின் அர்னால்ட், ஹெலன் கெல்லர் உள்ளிட்டோரும் இவ்விதழைப் பாராட்டி வரவேற்றனர்.

1901--1918 வரை இவ்விதழ் வெளியானது. சில ஆண்டுகாலத் தடைக்குப் பின் மீண்டும் 1927-ல் தொடங்கப்பட்டு 1938 வரை இவ்விதழ் வெளியானது.

குடும்பம்

கமலா -சாமுவேல் சத்தியநாதன் இணையருக்கு இரண்டு குழந்தைகள். முதல் மகன் பில் சத்தியநாதன் 1900-த்தில் பிறந்தார். இரண்டாவது மகளான பத்மினி 1905-ல் பிறந்தார்.

சாமுவேலின் பிரிவு

இந்தியத் தத்துவங்கள் குறித்து ஆழக் கற்றிருந்தார் சாமுவேல் சத்தியநாதன். அது பற்றி உரையாற்றுவதற்காக அவர் மார்ச், 1906-ல் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். அங்கு சில பல்கலைகளில் உரையாற்றினார். ஜப்பானில் உரையாற்ற அவருக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக் கொண்டு ஜப்பானுக்குப் புறப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே கடும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். ஜப்பானுக்குச் சென்று இறங்கியதுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சையில் இருந்தும் பலனளிக்காமல் ஏப்ரல் 4, 1906-ல் சாமுவேல் சத்தியநாதன் காலமானார். ஆறு வயது மகனுடனும், கைக்குழந்தையான மகளுடனும் ஜப்பானுக்குச் சென்று கணவனுக்கு இறுதி மரியாதைகளைச் செய்துவிட்டு இந்தியா திரும்பினார் கமலா.

பீதாபுரத்தில் கமலா சத்தியநாதன்

கமலாவுக்கு உறுதுணையாக அவரது தாய் நானி இருந்தார். அதே 1906-ம் ஆண்டில் சாமுவேல்- கமலா இணையர் பணம் சேர்த்து வைத்திருந்த அர்பத்நாட் வங்கி திவாலானது. மிகவும் துயரமான அந்தக் காலகட்டங்களை மன உறுதியுடன் எதிர்கொண்டார் கமலா.

இந்நிலையில் அவருக்கு பீதாபுரத்து ராணிக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் பணி வாய்ப்பு வந்தது. மகன் பில், மகள் பத்மினி, தாய் நானி மற்றும் சில உதவியாளர்களுடன் பீதாபுரத்துக்குச் சென்றார் கமலா. அங்கு சுமார் ஆறு ஆண்டுகள் தங்கி ராணிக்கு ஆங்கிலமும் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுத்து வந்தார் கமலா. அப்போதும் தொய்வில்லாமல் ‘தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’ இதழை நடத்தினார் கமலா.

சில சூழல்களால் அவர் பீதாபுரத்தில் இருந்து வெளியேற நேர்ந்தது. அங்கிருந்து வால்டருக்கும், ராஜமுந்திரிக்கும் சென்று வசித்தார். பின்னர் சென்னை லேடீஸ் க்ளப்பில் மணமான பெண்களுக்கு ஆங்கிலம், வரலாறு, புவியியல் கற்பிக்கும் வாய்ப்பு வந்தது. அதனை ஏற்றுக் கொண்டு சென்னைக்கு வந்தார். சாந்தோமில் ஒரு வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு தனது ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். அப்போது கிடைத்த ஓய்வு நேரத்தில் நாடகங்கள் சிலவற்றை கதை, வசனம் எழுதி அரங்கேற்றினார். அதற்கு அக்கால இதழ்களிலிருந்து பாராட்டுக் கிடைத்தது. இக்காலகட்டத்திலும் ‘தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’ தொய்வில்லாமல் வெளிவந்து கொண்டிருந்தது.

1919-ல் கமலா, தனது குழந்தைகளின் மேற் கல்விக்காக, தன்னுடைய சொந்த வீட்டை விற்றுவிட்டு அதில் கிடைத்த தொகை மூலம் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இங்கிலாந்தில் கமலா சத்தியநாதன்

கமலாவின் பிற பணிகள்

ஆவணம்

The Indian Ladies' Magazine இதழின் சில இதழ்கள் சென்னை தமிழ் இணைய நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கமலா சத்தியநாதனின் வாழ்க்கையை அவரது மகள் பத்மினி சென்குப்தா ‘ The Portrait of an Indain Woman என்ற தலைப்பில் ஆவணப்படுத்தியுள்ளார். அதற்கு முன்னுரை எழுதியிருக்கும் இந்தியாவின் அப்போதைய குடியரசுத் தலைவரான டாக்டர் சர்வபள்ளி எஸ். ராதாகிருஷ்ணன். கமலா சத்தியநாதனை, அவரது பணிகளை நினைவு கூந்துள்ளார், கமலா சத்தியநாதன் தனது கணவர் சாமுவேல் சத்தியநாதனின் நினைவாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் Ethics-ல் முதலாவதாக வரும் சிறந்த மாணவருக்காக தங்கப் பதக்கத்துடன் கூடிய நினைவுப் பரிசு ஒன்றை நிறுவினார். அந்தப் பதக்கத்தை முதன் முதலில் பெற்றவர் ராதாகிருஷ்ணன். அதை அவர் அந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்.

மறைவு

ஜனவரி 26, 1950-ல் கமலா சத்தியநாதன் காலமானார்.

உசாத்துணை

The Indian Ladies' Magazine : தமிழ் இணைய நூலகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.