பத்துத் தூண் (மதுரை)

From Tamil Wiki
Revision as of 13:22, 14 June 2022 by Jeyamohan (talk | contribs)
பத்துத்தூண்
பத்துத்தூண் பழையபடம்
பத்துத்தூண் லிங்கம்

பத்துத் தூண் (பொயு 1636) : மதுரையில் அமைந்துள்ள பத்து பெரிய கல்தூண்கள். இவை திருமலை நாயக்கர் காலகட்டத்தைச் சேர்ந்தவை. மதுரையில் திருமலைநாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கரின் அரண்மனையின் முகப்புத்தூண்கள் இவை என தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்

இடம்

மதுரையில் திருமலை நாயக்கர் அரண்மனையையொட்டி வடபுறம் அமைந்துள்ள நவபத்கானா தெரு, மகால் வடம் போக்கித் தெரு, ஆகிய இரு தெருக்களின் இடையே பத்து தூண் சந்து என்று ஒரு குறுகிய தெரு உள்ளது. சுற்றிலும் வீடுகள் அமைந்திருக்க நடுவே பத்துத்தூண்கள் மட்டும் வரிசையாக நிற்கின்றன.மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால் ஆகியவை அருகே உள்ளன.விளக்குத்தூண் என்னும் பகுதியில் கடைகள் அமைந்துள்ள இடுங்கலான சந்துக்குள் இந்த தூண்கள் நின்றிருக்கின்றன.

வரலாறு

மதுரையில் திருமலை நாயக்கர் கட்டிய சுவர்க்க விலாசம் என்னும் அரண்மனை இன்று திருமலைநாயக்கர் மகால் என அழைக்கப்படுகிறது. அந்த அரண்மனை வளாகத்தின் ஒருபகுதியாக திருமலை நாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கர் தங்குவதற்காக ரங்கவிலாசம் என்னும் அரண்மனை பொயு 1636ல் கட்டப்பட்டது. அந்த மாளிகையின் முகப்புத்தூண்கள்தான் பத்துத் தூண்கள் எனப்படுகின்றது. ரங்க விலாசத்தின் மற்றைய பகுதிகள் மறைந்துவிட்டன. சில ஆய்வாளர்கள், ரங்க விலாசம் கட்டி முடிக்கப்படவில்லை என்று கருதுகிறார்கள்

அமைப்பு

வட்டமான கருங்கற்களை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி இத்தூண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கற்களின் மீது சுதையும், செங்கல்லும், கொண்டு பூசி அரண்மனைத் தூண்கள் போன்று வழவழப்பாக்கப்பட்டுள்ளன.பத்துத்தூண்கள் ஒவ்வொன்றும் ஒரே உயரமானவை. சிற்பங்கள் ஏதும் இல்லாதவை. ஒவ்வொரு தூணும் இருபது அடி உயரமும், ஐந்து அடி சுற்றளவும் கொண்டது. பொறியியலாளர் கூற்றுப்படி செங்கல்லாலும் சுதையாலும் ஆன ரங்கமகால் மாளிகையின் மொத்த எடையையும் சுமந்து அதை உறுதியாக மண்ணில் நிறுத்தும் பொருட்டே இந்த பத்துத் தூண்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் எடையே மாளிகையை நிலைநிறுத்தியது. இந்தத் தூண்களில் ஒன்றில் ஒரு சிவலிங்கம் புடைப்புச் சிற்பமாக உள்ளது.

உசாத்துணை